தந்தையர் தினத்தில் தந்தைக்கோர் தாலாட்டு!
உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நமது ஓன் இந்தியா தமிழ் தளத்தின் வாசகரான சிவமணி என்பவர் தந்தைக்கோர் தாலாட்டு பாடியுள்ளார்.
அபுதாபி: உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் நமது ஓன் இந்தியா தமிழ் தளத்தின் வாசகரான வத்லகுண்டுவை சேர்ந்த சிவமணி என்பவர் தந்தைக்கோர் தாலாட்டு பாடியுள்ளார்.
வத்லகுண்டுவை சேர்ந்த சிவமணி அபுதாபியில் வசித்து வருகிறார். இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தந்தைக்காக அவர் எழுதிய தாலாட்டு கவிதை.. இதோ உங்களுக்காக..
தந்தைக்கோர் தாலாட்டு
தாவி வரும் தேன் பாட்டு
முந்தி வரும் என் பாட்டு
விழி மூடி நீ கேளு
அயராது உழைப்பாயே
பிள்ளை மொழி கேட்பீரோ
அன்பாலே நனைப்பாயே
ஆரிராரோ கேட்பீரோ
சிகரம் தொடும் உன் கனவு
சிந்தியாது நீ தூங்கு
சிவந்த விழி குளிர்ந்திட
சிரம் தொட்டுப் பாடுகிறேன்
உன்னைப் போல உறவுமில்லை
உயர்ந்த உள்ளம் பார்த்ததில்லை
உன்னோடு நானிருப்பேன்
உறங்கி விடு என் தகப்பா
மெழுகும் தோற்று போகும்
கல்லும் கண்ணீர் விடும்
முட்பாதையில் பயணித்த
பாச சரணாலயமே என் அப்பா
வாடிடாத வசந்தம் தருவோம்
குறையாத நேசம் தருவோம்
வீழாத அன்பைப் பொழிவோம்
உயிர் தந்த தகப்பனே உலகம் என்போம்
சிவமணி,
வத்தலக்குண்டு