வாய்ப்பாட்டு அரங்கேற்றம் செய்த அமெரிக்காவாழ் தமிழ் மாணவர்.. ஹூஸ்டனில் குதூகல விழா
ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் அமெரிக்க வாழ் தமிழர் ஒருவர் குருகுலப்பயிற்சியாக பயின்ற வாய்ப்பாட்டு அரங்கேற்றத்தை ஹூஸ்டரின் நடத்தினார்.
இசை இறைவன் தந்த வரம். அதை முறையாக கற்ற வல்லுனர்கள் பலர். உலகில் பலவிதமான இசை முறைகள் இருந்தாலும் கர்நாடக இசை அனைத்திற்கும் முன்னோடி என்பது உலகறிந்த விஷயம். இசை பயிலுதல் என்பது எளிதல்ல.
முறையாக கற்கவேண்டுமெனில் அக்கால குருகுலம் முறையே சாலச்சிறந்தது. ஆனால் அதுபோன்ற கல்விமுறை இனி சாத்தியமில்லை என்பதே உண்மை. குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் குருகுலப்பயிற்சி பெறுவது சாத்தியமல்ல.
எனினும், கர்நாடக இசையின் மேல் உண்மையான ஆர்வம் இருந்தால் எத்தகைய தடையையும் மீறி முறையாக பயிலலாம். இதை டெக்ஸாஸின் ஹூஸ்டன் க்ளியர்லேக் பகுதியை சேர்ந்த ஆதி கோபால் என்னும் உயர்நிலை பள்ளி மாணவர் தனது வாய்ப்பாட்டு அரங்கேற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.
குழந்தைப் பருவத்திலிருந்தே கர்நாடக இசையின் மீது ஆர்வம் கொண்டு வளர்ந்த ஆதி கோபால், சிறு வயது முதலே வாய்ப்பாட்டை முறையாக கற்க ஆரம்பித்தார். தனது குருவாக திருவையாறு சேகர் அவர்களையும், ராஜராஜேஸ்வரி பட் அவர்களையும் தேர்ந்தெடுத்து தனது பொழுதுபோக்கு நேரம் , வார இறுதி, விடுமுறை நாட்கள் என அனைத்து நேரத்தையும் இசைக்கென ஒதுக்கி பாடம் பயின்றார். அதன் பலன் தான் அவரது அரங்கேற்றம்.
தனது குரு ராஜராஜேஸ்வரி பட் தலைமையில், ஹூஸ்டன் நகர காங்கிரஸ்மேன் ராண்டி வெப்பர் முன்னிலையில் நடந்த அவரது அரங்கேற்றத்திற்கு பக்க இசை கலைஞர்களாக விட்டால் ராமமூர்த்தி - வயலின், வித்வான் குருச்சரன் - கடம் , மற்றும் மிருதங்க வித்வான் சிவராமன் ஆகியோர் ஆதியின் குரல் வளத்திற்கு பலம் சேர்த்தனர்.
ஜெயசூர்யா திலீப் தம்புரா மீட்ட, ஆதி கோபால் தனது இரண்டரை மணிநேர கச்சேரியை தொய்வில்லாமல் கலை கட்டினார் . இந்நிகழ்ச்சியை ஆதியின் அண்ணன் அகிலன் கோபால் மற்றும் நண்பர் குஷால் கடக்கியா தொகுத்து வழங்கினர்.
தான் பாடிய பதினான்கு பாடல்களும் அனைவரும் ரசிக்கும் படி இருக்க வேண்டும் என்று பார்த்துப்பார்த்து தேர்ந்தெடுத்தார். அதுமட்டும் இல்லாமல், ஹூஸ்டன் மீனாட்சி கோவிலில் இருக்கும் அனைத்து தெய்வங்களையும் போற்றுமாறு தனது பாடல் வரிசையை அமைத்துக்கொண்டார்.
அரங்கேற்றத்தின் இறுதியில், ஆதியின் குரு, விதூஷி ராஜராஜேஸ்வரி பட் அவர்களுக்கு "அம்ரிதவர்ஷினி" என்ற பட்டத்தை அளித்து தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் கௌரவித்தது. இந்த பட்டத்தை தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் நிறுவனர் ஆனந்தா அளித்தார்.
நன்றியுரையில் , பெற்றோர்கள் டாக்டர் கோபால் மற்றும் திருமதி கோபால் அவர்கள் நேரில் வந்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர். இரவுநேர விருந்தாக கிராமிய முறையில் பலவித உணவு வகைகளை பரிமாறி அசத்தியது மெட்ராஸ் பெவிலியன்.
தனக்கு அன்பளிப்பாக கிடைத்த அனைத்து டாலர்களையும் தமிழ்நாடு அறக்கட்டளை, ஹூஸ்டன் தமிழ் இருக்கை , உதவும் கரங்கள், ஹூஸ்டன் இளைஞர் இசை அரங்கத்திற்கு ஆதி நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.