2021 புத்தாண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு காதல், கல்யாண யோகம் கூடி வரும் தெரியுமா
2020ஆம் ஆண்டு முடியப்போகிறது, 2021ஆம் பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டிலாவது நமக்கு காதல் மலருமா? திருமணம் கைகூடுமா என்று ஏங்கித் தவிக்கும் சிங்கிள்ஸ்களுக்காகவே இந்த ராசி பலன்கள்.
சென்னை: திருமணம் என்பது மனித வாழ்க்கையில் அவசியமானது. ஒருவருக்கு திருமணம் நடைபெற குருபலமும், குருபார்வையும் ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குரு பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் எனவேதான் குரு பார்வை கோடி நன்மை என்கின்றனர். அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடையோ தாமதமோ ஏற்படும் போது குரு பார்வை பட்டால் அந்த தடை நீங்கி திருமண யோகத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. 2021ஆம் ஆண்டில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு காதல் மலரும் திருமணம் கை கூடி வரும் என்று பார்க்கலாம்.
சிலருக்கு காதல் திருமணம் நடைபெறும், சிலருக்கு பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெறுவதற்கும், குழந்தைபேறு கிடைப்பதற்கும் கிரகங்களின் பார்வை , சேர்க்கை சாதகமாக இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு குருபகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை ரிஷபம்,கடகம், கன்னி ராசிகளின் மீது விழுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு குரு பலன் கிடைக்கிறது. அது தவிர குருபகவான் சஞ்சாரத்தினால் காதல், திருமணம், குழந்தை யோகம் சில ராசிக்காரர்களுக்குக் கிடைக்கிறது. புத்தாண்டில் கெட்டிமேளம் கொட்டப்போகும் ராசிக்காரர்களை பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு வீரத்தோடு விவேகமும் அதிகம் இருக்கும். குருபகவான் இந்த ஆண்டு சாதகமான நிலையில் சஞ்சரிக்கவில்லை. பத்தாம் இடத்தில் உள்ள குருபகவான் உங்களின் குடும்ப ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார். ஆறாம் வீட்டையும் பார்க்கிறார். குடும்ப ஸ்தானத்தில் குரு பார்வை படுவதால் திருமண யோகமும், குழந்தை பாக்கிய யோகமும் கிடைக்கிறது. சனிக்கிழமை ஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம் நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம்
காதல் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. 2020ஆம் ஆண்டில் அஷ்டமத்து சனி, அஷ்டமத்து குருவினால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள். 2021ஆம் ஆண்டு உங்களுக்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. குரு பலன் உங்க ராசிக்கு திருமண யோகத்தை கொடுக்கிறது. காதல் மலரும் காலம் இது. உற்சாக நினைவுகளுடன் வலம் வருவீர்கள். நீண்ட காலம் தடைபட்டு வந்த திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்காமல் ஏங்கித்தவித்தவர்களுக்கு இந்த ஆண்டு வீட்டில் தொட்டில் ஆடும். குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்று குழந்தை கிருஷ்ணரை வணங்கி வாருங்கள் நன்மையே நடைபெறும்.
மிதுனம்
புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே இந்த ஆண்டு குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடம், 12ஆம் இடம், 4ஆம் இடங்களின் மீது விழுகிறது. கடன்கள் அடைபடும். அஷ்டமத்து சனி சாதகமாக இல்லை என்றாலும் ராகு கேது சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் கல்யாண யோகம் கை கூடி வரும். காதல் துணையை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிசார குரு பெயர்ச்சியால் தடைகள் நீங்கும். திருமணம் சுப காரியங்கள் கைகூடி வரும். சதுர்த்தி நாளில் கல்யாண விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம் நன்மைகள் நடைபெறும்.
கடகம்
சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே 2021ஆம் ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. குருவின் ஏழாவது பார்வை நேரடியாக உங்க ராசிக்கு கிடைக்கிறது. பணவரவு அமோகமாக இருக்கும். காதல் கனிந்து திருமணத்தில் முடியும் காலம் இதுவாகும். திருமணம் முடிந்தவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. சிவ ஆலயம் சென்று அர்ச்சனை செய்வது நல்லது. செவ்வாய்கிழமை முருகன் ஆலயத்திற்கு சென்று பாலபிஷேகம் செய்யலாம்.
சிம்மம்
சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே குரு பகவான் தனது பார்வையால் உங்கள் ராசிக்கு 12, 10, 2ஆம் இடங்களை பார்வையிடுகிறார். சிலர் காதல் வசப்படலாம். 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிசாரமாக கும்பம் ராசிக்கு செல்லப்போகும் குரு உங்கள் ராசியை பார்வையிடுவது சாதகமான பலன்களை ஏற்படுத்தும். ஏழாம் இடத்தில் இருந்து குரு அதிசய மாற்றங்களை ஏற்படுத்துவார். ராகு கேது சஞ்சாரமும், சனி சஞ்சாரமும் சாதகமாக உள்ளதால் 2021ஆம் ஆண்டு உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிறைந்த ஆண்டாக உள்ளது. கால பைரவரை மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம்.
கன்னி
புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான ரிஷபத்தை குருபார்வையிடுகிறார். குருவின் பார்வை உங்க ராசியின் மீதும் விழுகிறது. உங்களுக்கு காதல் கைகூடி வரும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். சிலர் வீட்டில் தொட்டில் ஆடும் புத்திரபாக்கியம் கிடைக்கும். நல்ல தசாபுத்தி நடந்தால் உங்களுக்கு அதிகம் நன்மைகள் நடைபெறும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லவும். ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கவும்.
துலாம்
காதல் நாயகன் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே. 2021ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல பலன்கள் அதிகம் நடைபெறும். குரு நான்காம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு எட்டு, பத்து, 12ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக செல்லும் குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் திருமணம் கைகூடி வரும். மாமன் மகள், அத்தை மகளை திருமணம் செய்ய நினைத்தவர்கள் ஏப்ரல் மாதத்திற்கு மேல் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம். பண வரவு தாராளமாக இருக்கும். பிரதோஷ நாளிலும், பௌர்ணமி தினத்திலும் சிவனுக்கு தேன் அபிஷேகம் செய்வது நல்லது.
விருச்சிகம்
செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே... கடந்த சில ஆண்டுகளாகவே ஏழரை சனியின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறீர்கள். இனி நல்ல காலம்தான். குரு ஏழாம் இடத்தையும், ஒன்பதால் இடத்தையும் லாப ஸ்தானத்தையும் பார்வையிடுவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை செய்ய முயற்சி செய்யலாம் வெற்றிகள் கிடைக்கும். திருமணம் நடைபெற்றவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். சனியோடு மூன்றாவது வீட்டில் குரு அமர்வது அதிக சாதகமான அம்சமாகும். பிரதோஷ நாட்களில் சிவபுராணம் படியுங்கள் அதிக நன்மை நடைபெறும்.
தனுசு
குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட நேர்மை குணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் சனியுடன் அமர்ந்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குரு பகவான் அதிசாரமாக செல்லும் போது உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தை குரு பார்வையிடுகிறார், திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சுப செய்திகளை கேட்க வைப்பார். மேலும் நன்மைகள் நடைபெற வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிமாலை அணிவித்து தரிசனம் செய்யவும்.
மகரம்
சனிபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே... ஏழரை சனியின் பிடியில் சிக்கியுள்ளீர்கள். ஜென்ம சனி என்றாலும் குருபகவான் உங்களை பாதுகாத்து வருகிறார். பணவரவு அமோகமாக இருக்கும். கடன்கள் வசூலாகும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். குருவின் பார்வை ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் தடைபட்டிருந்த திருமணம் கைகூடி வரும். இதுநாள் வரை சிங்கிள் என்று ஸ்டேட்டஸ் போட்டவர்கள் இனி தைரியமாக திருமணம் முடிந்து உங்கள் ஜோடியுடன் ஹனிமூன் கிளம்பலாம். பாதிப்புகள் குறைய ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும்.
கும்பம்
சனிபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே 2020 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஆண்டாக கடந்துள்ளது. சனிபகவான் உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுத்து வந்தார். அதேபோல குருபகவானும் உங்களுக்கு நன்மைகளை அளித்து வருகிறார். 2021 ஆம் ஆண்டு நிறைய நன்மைகளை அளிக்கப் போகிறது. 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குருபகவான் உங்கள் ராசிக்கு வரப்போகிறார். உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீட்டினையும் ஒன்பதாம் வீட்டினையும் பார்க்கப்போகிறார். இந்த நேரத்தில் காதல் மலரும், திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமண பேச்சுவார்த்தையை தொடங்கலாம். 2021ஆம் ஆண்டு கெட்டிமேளச்சத்தம் கண்டிப்பாக கேட்கப்போகிறது. தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
மீனம்
குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே... 2020ஆம் ஆண்டு உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. லாப ஸ்தானத்து குரு, லாப சனி உங்களுக்கு நிறைய நன்மைகளை கொடுத்துள்ளது. குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடு ஏழாம் வீட்டினை பார்வையிடுவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வரவிருக்கும் புத்தாண்டிலும் உங்களுக்கு நன்மைகளே அதிகம் நடைபெறப்போகிறது. ஏப்ரல் மாதம் நிகழ உள்ள அதிசார குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் அமர்வதால் சில பாதகமான அம்சங்களை ஏற்படுத்தும். மேலும் நன்மைகள் நடைபெற வியாழக்கிழமைகளில் ராகவேந்திரரை வணங்கவும்.