ஆடி 2வது சனிக்கிழமை: திருநள்ளாறு,குச்சனூர் சனீஸ்வரர் ஆலயங்களில் பக்தர்கள் வழிபாடு
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருநள்ளாறு: ஆடி மாத 2வது சனிக்கிழமையை முன்னிட்டு குச்சனூர், திருநள்ளாறில் இன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குச்சனூர் சனிபகவான் கோவிலில் ஆடி திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருவிழாக்கள் ரத்து செய்யப்ட்டுள்ளன. குச்சனூர் சனிபகவான் ஆலயத்தில் ஆடித்திருவிழா இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றாலும் சனிக்கிழமை நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், திருநள்ளாறு கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆடி மாதம் 2வது சனிக்கிழமையான இன்று அதிகாலை முதல் புதுச்சேரி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.
நிடதநாட்டு மன்னன் நளன், சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும் பிரிந்தார் நளன்.
உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை. சமையல்காரராகவும் வேலை செய்தார். மீண்டும் மனைவி மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் சனீஸ்வரன் என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார்.
திருநள்ளாறு ஆலயத்தில் கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர். சனிப்பெயர்ச்சி சமயத்திலும் ஆடி மாத சனிக்கிழமைகளிலும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஆடி மாத 2வது சனிக்கிழமையை முன்னிட்டு பல மாதங்களுக்குப் பிறகு திருநள்ளாறு கோயிலுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அரசின் கட்டுப்பாடு காரணமாக சனீஸ்வர தீர்த்த குளமான நளன் தீர்த்தத்தில் பொதுமக்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் திருநள்ளாறு ஆலயத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.