ஆடி அமாவாசை - புனித நீராட அனுமதியில்லை - களையிழந்த புண்ணிய ஸ்தலங்கள்
கொரோனா அச்சத்தால் புனித நீராடவும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆடி அமாவாசை நாளான இன்று புனித தலங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மதுரை: ஆடி அமாவாசை நாளில் புனித நதிகள், கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கொரோனா அச்சத்தால் புனித நீராடவும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம், திருச்சி அம்மா மண்டபம், கன்னியாகுமரி, பாபநாசம் படித்துறை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது ஐதீகம்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி உள்ளிட்ட புண்ணியஸ்தலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் லாக்டவுன் அமலில் இருப்பதால் கூட்டம் கூட அனுமதியில்லை என்பதால் புனித தலங்கள் களையிழந்து காணப்படுகின்றன. மக்கள் வீடுகளிலேயே முன்னோர்களை நினைத்து வணங்கி காக்கைக்கு உணவு கொடுத்தனர்.
முருகன் கையில் ஏன் கூரிய வேல்.. எஸ்எஸ்ஆர் பேசும் சூப்பர் வசனம்.. வைரலாகும் வீடியோ!
நீராட அனுமதியில்லை
திருச்சி அம்மா மண்டபம் பகுதியில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து புனித நீராடுவதோடு முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். இந்த ஆண்டு மக்கள் கூடவும், புனித நீராடவும் தடை உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வெறிச்சோடிய குமரி
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவசை தினத்தில் தமிழகம் முழுவதும் இருந்து லட்ச கணக்கில் மக்கள் வந்து செல்லும் கன்னியாகுமரி வெறிச்சோடியது வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள சரஸ்வதி தீர்தம், விநாயகர் தீர்த்தம், காயத்திரி தீர்த்தம் உள்ளிட்ட 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் பொது மக்கள் யாரும் வராததால் இங்குள்ள கடற்கரை, திருவேணி சங்கமம், சங்கலி துறை 16 கால் மண்டபம், உள்ளிட்ட புனித நீராடும் முக்கடல் பகுதிகள் களையிழந்தது.
மக்கள் கூட்டமில்லை
மக்கள் அதிகமாக வந்து செல்லும் பகவதி அம்மன் கோவில், பூம்புகார் சுற்றுலா படகு மையமும் ஆள் நடமாட்டமே இன்றி வெறிச்சோடியது. ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவசை தினத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து லட்ச கணக்கில் மக்கள் வந்து செல்லும் கன்னியாகுமரி வெறிச்சோடியது.
புனித நீராட தடை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் தாமிரபரணி நதியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்நிலையில் மார்ச் 24 முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து கோயில்களும் மூடப்பட்டு வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பாபநாசத்தின் சிறப்பு வாய்ந்த திருவிழாவான சித்திரைத் திருவிழா நடைபெறவில்லை. நாள்தோறும் கோயில் பணியாளர்களை வைத்து ஐந்து வேளை பூஜை மட்டும் நடைபெற்று வந்தது.
ஆடி அமாவாசை விழா தடை
ஆடி அமாவாசை நாளான இன்று தாமிரபரணியில் நீராட மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்ததை அடுத்து இன்று பாபநாசத்திற்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் பாபநாசம் வெறிச்சோடியது. பாபநாசம் கோயில் படித்துறை பொதுமக்கள் இன்றி வெறுமையாக காணப்பட்டது.
மேலும் பாபநாசம் மலையில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தடை செய்யப்பட்டதால் சொரி முத்து அய்யனார் கோயில் பகுதியில் பொதுமக்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.
களையிழந்த ஆடி அமாவாசை
பாபநாசம் கோவில் மற்றும் டானா பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆடி அமாவாசை
அன்று புனித நதியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பொதுமக்களின் நீண்டநாள் நம்பிக்கையாக உள்ள நிலையில் இந்த
ஆண்டு ஆடி அமாவாசைக்கு புனித நதிகளில் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் பக்தர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.