ஆடிப்பெருக்கு நாளில் பொங்கிவரும் புது வெள்ளம் - ஆறுகளில் நீராட தடையால் கரைகளில் வழிபட்ட மக்கள்
காவிரி, பவானி, வைகை, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி ஆறுகளில் புதுவெள்ளம் பொங்கி வருவதால்ஆடி பதினெட்டாம் பெருக்கு களைகட்டியுள்ளது.
மதுரை: காவிரி ஆற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பவானி, வைகை, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் ஆடிப்பெருக்கு களைகட்டியுள்ளது. ஆறுகளில் புனித நீராட தடை உள்ளதால் ஆற்றங்கரைகளில் மக்கள் காவிரி அன்னையை பூக்களை தூவி வழிபட்டனர்.
ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையோர பகுதிகளில் காவிரி அன்னைக்கு படையலிட்டு பூஜைகள் செய்வது வழக்கம். புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், புதுப்பெண்கள் புதிதாக தாலி மாற்றிக் கொள்வது வழக்கம்.
திருச்சி காவிரி கரையோரம், அம்மா மண்டபம் படித்துறைகளில் விமரிசையாக நடைபெறும். கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்திருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஆடிப்பெருக்கு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலை பரவலை தடுக்கும் வகையில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் மற்றும் வயலூர் முருகன் கோவில்கள் முன்பு தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் வழக்கமான பூஜைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் புனித நீராட முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தாலும் வழக்கமாக நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா ஆற்றங்கரைகளில் நடைபெறுகிறது. புதுமண தம்பதிகள் பலர் வீடுகளிலேயே ஆடிப்பெருக்கினை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்தநிலையில் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக இன்று நடைபெற இருக்கும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, வடக்கு வாசல், தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை மற்றும் ஓடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவிரி ஆற்றின் கரைகளில் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றின் கரைகளில் வழிபாடு செய்வதற்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடிப்பெருக்கு நாளில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஆடிப்பெருக்கு 2021: காவிரி அன்னையை வழிபட்டால் திருமண பாக்கியம், புத்திரபாக்கியம் கிடைக்கும்
கரூர் மாவட்டத்தில் பவானிசாகர், அமராவதி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும், காவிரியாற்றில் சேர்ந்து, கரூர் மாயனூர் கதவணைக்கு வந்து சேர்வதால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான கோவில்களில் வருகிற 8ஆம் தேதி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 2 நாட்களாகவே பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் 2வது நாளாக நேற்றும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆடி பதினெட்டாம் பெருக்கான இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட 3 நாள் தடையானது இன்றுடன் முடிவடைகிறது.
இதனால் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்குமா? அல்லது தடை நீக்கப்படுமா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே இன்று தெளிவான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆடித்திருவிழா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வருகிறது.
ஆடி அமாவாசை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடும் பட்சத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் ராமேஸ்வரம் வருவதை தவிர்ப்பதோடு, நீண்ட தூரத்தில் இருந்து வந்து தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.