ஆடித்தபசு விழா கோலாகலம்.. கோமதி அம்மனுக்கு காட்சி அளித்த சங்கரநாரயணர்..பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவில் சுவாமி, கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்கமாகவும் அருள்பாலித்தார். திருவிழாவில் லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். சின்ன சங்கரன்கோவில், திருச்சுழியில் குண்டாற்றில் நடைபெற்ற ஆடித்தபசு விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Recommended Video
ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்த கோமதியம்மன் ஒன்றைக்காலில் தவமிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த நாளாகும். சிவபெருமான் ஆடி உத்திராட நன்னாளில் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க சுவாமி காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா கடந்த ஜூலை 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிகர நிகழ்ச்சியாக கோமதி அம்பாளுக்கு, சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் தபசுக்காட்சி நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி பகல் 12.15 மணிக்கு கோமதி அம்பாள் தங்கசப்பரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு மாலை 6.39 மணிக்கு தபசு மண்டபத்தில் தவமிருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.
சங்கரன்கோவில் ஆடித்தபசு
ரிஷப வாகனத்தில் சுவாமி சங்கரநாராயணராக தபசு காட்சியளிக்கும் கோலத்தினை தங்க சப்பரத்தில் வீற்றிருக்கும் கோமதி அம்பாள் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பங்கேற்ற பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பாசிப்பயிறு, தட்டாம்பயிறு, நெல், பருத்தி, வத்தல், உள்ளிட்ட பயிர்களை சப்பரம் மீது வீசி வரும் காலங்களிலும் விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனர். இந்த அற்புதமான நாளில் சங்கரநாராயணர் மற்றும் கோமதி அம்பாளை வணங்கினால் மங்கள காரியங்கள் கைகூடும் , செல்வ வளம் பெருகும் , கேட்ட வரம் கிடைக்கும் எனவும், குடும்பம் செழிக்கும் என்ற ஐதீகம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் தரிசனம்
தொடர்ந்து இரவு 12 மணிக்கு சுவாமி, சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளை கோயிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெற்ற ஆடித்தபசு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சின்ன சங்கரன்கோவில் ஆடித்தபசு
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சின்ன சங்கரன்கோவில் சங்கரலிங்க சாமி கோவிலும் ஒன்று. கடந்த 31 ,தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் காலை மாலை இருவேளைகளும் அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்று சுவாமி அம்பாள் தினம் ஒரு வாகனத்தில் ஊர்வலமாக வந்து இன்றைய தினம் ஆடிதபசு திருவிழாவை முன்னிட்டு விஷ்ணுவும் ,சிவனும் சேர்ந்து கோமதி அம்மனுக்கு சங்கரலிங்க சுவாமியாக காட்சி தந்தார். இந்த ஆடி தபசு திருவிழாவை காண அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
திருச்சுழியில் ஆடித்தபசு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள துணை மாலையம்மன் சமேத திருமேனிநாதசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு சிம்மம், குதிரை, அன்னம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 10-ம் நாள் தபசு நிகழ்ச்சியானது திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. துணைமாலை அம்மன் கோபமுற்று தபசு மண்டபத்தில் தவம் மேற்கொண்டதாகவும், அன்று திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் அம்மனுக்கு காட்சி தந்து அம்மனை சாந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது. மாலை மாற்றும் நிகழ்ச்சி விழாவில் திருமேனிநாதருக்கும், துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி திருச்சுழி குண்டாற்றில் நேற்று மாலை நடைபெற்றது. அம்மன் சுவாமியை மூன்று முறை வலம் வந்த பின்னர், சுவாமி மற்றும் அம்மனுக்குத் தீபாராதனை காட்டப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு கோவிலைச் சென்றடைந்தனர். திருவிழாவைக் காண திருச்சுழி, அருப்புக்கோட்டை, நரிக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் குவிந்தனர்.