ஆனித் திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு கொரோனா பரவியதால் தேரோட்டம் ரத்து
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் தீட்சிதர்கள் குடும்பத்தினர் கண்ணீர் விட்டனர். தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் இருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு நடைபெறுவதாக இருந்த ஆனித்திருமஞ்சன தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. உத்தராயண காலத்தின் கடைசி மாதமான ஆனி மாதம் தேவர்களின் மாலைப்பொழுதாகும். வெப்பம் அதிகமாக இருக்கும். பங்குனி முதல் ஆனி வரை பரவிய உஷ்ணங்களை தீர்த்துக்கொள்ள இறைவன் நடராஜருக்கு குளிர குளிர ஆனி மாதம் உத்திரம் நட்சத்திர நாளில் அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வருவதால் கோவிலுக்குள் நடைபெற்ற திருமஞ்சன விழாவில் சில தீட்சிதர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனத் திருவிழாவும் சிறப்பாக பத்து நாட்கள் நடைபெறும். பங்குனி உத்திரத்தைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான விழாவாக, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றப்படுகிறது.
சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் உணர்த்துகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இதேபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் கொண்டது. இந்த இரண்டு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் தரிசிப்பதாக ஐதீகம். ஸ்ரீநடராஜரையும், அன்னை ஸ்ரீசிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அங்கே அவருக்கு திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகங்கள் நடைபெறும். பிறகு இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சியைத் தரிசிப்பார்கள் பக்தர்கள். ஆனந்த நடனம் ஆடியபடியே, சித்சபையில் எழுந்தருள்வார்கள். இதைக் காணக் கண்கோடி வேண்டும்!
கொரோனா என்றாலே மரணம் என்ற எண்ணத்தை மாற்றுங்கள்... நம்பிக்கையூட்டும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
ஆனித்திருமஞ்சன விழா
இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சனத் திருவிழா இந்த ஆண்டு கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 27ஆம் நேற்று தேரோட்டம் நடைபெறும் என சில மாதங்களுக்கு முன்பே அழைப்பிதல் அச்சிடப்பட்டிருந்தது. 28ஆம் தேதி வரை விழா நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல்
கொரோனா வைரஸ் பரவி வருவதால் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் எந்த விழாக்களும் நடைபெறவில்லை. இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் நடைபெறும் என்று கூறப்பட்டது. 150 தீட்சிதர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தரிசனம் செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்டிருந்தது.
ஆனித்திருமஞ்சன தேரோட்டம்
இந்த நிலையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. சில தீட்சிதர்கள் மட்டுமே நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். பல ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த ஆனிதிருமஞ்சன தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கண்ணீர் விட்டனர்.
அதிகாலையில் அபிஷேகம்
தேரோட்டம் ரத்தானதை அடுத்து சுவாமி ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரியை தேவசபையில் எழுந்தருளச் செய்து மண்டகப்படி தீபாராதனை நடைபெற்றது. மாலை 5.15 மணிக்கு சுவாமி தேவசபையில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால்மண்டபத்தில் எழுந்தருளினார் இன்று அதிகாலை 2 மணிக்கு நடராஜருக்கு ஆனி திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது.