அதிமுக முதல்வர் வேட்பாளர் அக்டோபர் 7ல் அறிவிப்பு : அப்படி என்ன விஷேசம் - ஜோதிட ரீதியான காரணங்கள்
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு விடை அக்டோபர் 7ஆம் தேதி தெரியும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். அன்று அப்படி என்ன விஷேசம் என ஜோதிட ரீதியாக அலசலாம்.
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா இருந்த வரை இந்த கேள்வி எழ வாய்ப்பு இல்லை. இப்போது இபிஎஸ், ஓபிஎஸ் என்ற இரட்டை தலைமை கட்சியில் இருப்பதால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் ஜெயலலிதாவின் ஆசியோடு இரண்டு முறை முதல்வராக இருந்தவர், எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் ஆசியோடு முதல்வராகி நான்காண்டு கால ஆட்சியை சலசலப்பு இன்றி நடத்தி விட்டார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார அல்லது ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சஸ்பென்ஸ் அக்டோபர் 7ஆம் தேதி உடைபடும்.
முதல்வர் வேட்பாளர் பற்றிய பேச்சு எழுந்ததில் இருந்தே அதிமுகவில் சலசலப்பு ஆரம்பமாகி விட்டது. அதிமுகவில் முக்கிய தலைவர்கள் அனைவருமே 7ஆம் முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளனர். எத்தனையோ நாட்கள் இருக்கும் போது முதல்வர் வேட்பாளரை அறிவிக்க குறிப்பாக அக்டோபர் 7ஆம் தேதியை அதாவது புரட்டாசி 21ஆம் தேதியை அதிமுக தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. ஜோதிட ரீதியாக அன்றைக்கு என்ன விஷேசம், கிரங்களின் சஞ்சாரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
அக்டோபர் 7ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் வரை வளர்பிறை பஞ்சமி திதி உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு மேல் சஷ்டி திதி தொடங்குகிறது. அரசியல் வெற்றிக்கு ஏற்ற திதிகள் பஞ்சமியும் சஷ்டியும். ஜெயலலிதா எந்த ஒரு நல்ல காரியத்தையும் ஐந்தாவது திதியான பஞ்சமி, 11வது திதியான ஏகாதசி பார்த்துதான் தொடங்குவார்.
ஓபிஎஸ் அணியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் எஸ்கேப்- எடப்பாடியுடன் அமைச்சர்கள் அடுத்தடுத்து ஆலோசனை
அதிமுக அரசியல் பணிகள்
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் பணிகள் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி தினமான ரிஷி பஞ்சமி நாளில் ஆரம்பமாகிவிடும். இந்த ஆண்டு கொரோனா காலமாக இருந்ததாலும் அதிமுகவினர் செயல்வீரர்கள் கூட்டத்தை கடந்த மாதமே தொடங்கி விட்டனர். அக்டோபர் 7ஆம் தேதி புரட்டாசி வளர்பிறை பஞ்சமி நாளில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளனர்.
முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு
அக்டோபர் 7ஆம் தேதி கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மீனம் ராசியில் செவ்வாய் வக்ரம் ரிஷபத்தில் ராகு சந்திரன் சிம்மம் ராசியில் சுக்கிரன், துலாம் ராசியில் புதன், விருச்சிகத்தில் கேது தனுசு ராசியில் குரு, மகரம் ராசியில் சனி என அமைந்துள்ளது. இதில் சந்திரன் உச்சம் பெற்றிருக்க ராகு நீசபங்கமடைந்திருக்கிறார். குருவும் சனியும் அவரவர் வீடுகளில் ஆட்சி பெற்றிருக்கின்றனர். செவ்வாய் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார்.
சஷ்டி தினம்
அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெடுக்கும் காரியங்கள், அரசு, புகழ், சமூக அந்தஸ்து ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாளாக உள்ளது. பிற்பகலுக்கு மேல் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான சஷ்டி தினமாகவும் உள்ளது. இந்த நாளில் செய்யப்படும் அறிவிப்பு வெற்றியை தேடிக்கொடுக்கும் என்பது அதிமுக அரசியல் தலைவர்களின் நம்பிக்கையாக உள்ளது எனவேதான் முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பை 7-10-2020ஆம் தேதி வெளியிடுகின்றனர்.
கிரகங்கள் கோச்சார சஞ்சாரம்
சில தினங்களுக்கு முன்பு ராகு கேது பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. குரு பெயர்ச்சி நவம்பரில் நிகழப்போகிறது. திருக்கணிதப்படி சனி மகரம் ராசியில் சஞ்சரித்தாலும் வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி டிசம்பர் 27ஆம் தேதி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சிகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை பொறுத்தே வெற்றிகள் தேடி வரும். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுபவரின் ஜாதகம் எப்படி இருக்கிறது. தொடர் வெற்றி பெற்று ஆட்சி தக்க வைக்க முடியுமா என்பதை ஆராய்ந்தே பெயரை அறிவிப்பார்கள்.
முதல்வர் நாற்காலியில் அமரும் யோகம்
ஆட்சியில் அமர வேண்டும் எனில் மக்கள் செல்வாக்கு முக்கியம். தொண்டர்களின் செல்வாக்கும் பலமும் தேவை. இதற்குக் காரணம் சனி கிரகம்தான். அதே போல குரு, செவ்வாய், புதன் கிரகங்களும் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் கிரகங்களாக இருக்கின்றன. இப்போது கிரகங்களின் சஞ்சாரம், தேர்தல் நேரத்தில் ஏற்படும் கிரக மாற்றங்களைப் பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படும் என்பதை ஆள்பவர்களின் ஆஸ்தான ஜோதிடர்கள் கணித்து கூறியிருப்பார்கள். எனவேதான் முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெற ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் காய் நகர்த்தி வருகின்றனர்.
தொண்டர்களின் நம்பிக்கை
நான் இல்லாவிட்டாலும் அதிமுக என்ற கட்சி 200 ஆண்டு காலம் தமிழகத்தில் இருக்கும் என்று சட்டசபையில் கடைசியாக பேசும் போது சொன்னார் ஜெயலலிதா. அந்த நம்பிக்கையை காப்பாற்ற இரண்டு தலைவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் ஒற்றுமையாக இருப்பது அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே கட்சியையும், சின்னத்தையும் காப்பாற்ற முடியும். இரு அணிகளாக பிரிந்தால் அது முதல்வர் நாற்காலிக்காக காத்திருக்கும் எதிரிகளுக்கு சாதகமாகி விடும் என்பதை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவருமே உணர்ந்திருக்கிறார்கள். ஆட்சியை கைப்பற்றவும் கட்சியை காப்பாற்றவும் யார் விட்டுக்கொடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்.