மாலை சூடிக்கொடுத்த ஆண்டாளுக்கு பச்சைப் பட்டுப்புடவை அணிந்து கொடுத்த அழகர்
திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியுள்ள அழகருக்கு சித்திரை திருவிழாவில் சூட மாலை சூடிக்கொடுத்த ஆண்டாளுக்கு தான் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் போது அணிந்திருந்த பச்சை நிற பட்டுப்புடவை கொடுத்து பதி
சென்னை: திருமாலிருஞ்சோலை அழகனுக்கு மாலை சூடி கொடுத்து அருளிய ஆண்டாள் நாச்சியாருக்கு பிரதி சமர்ப்பணம் ஆக அழகர்மலையில் இருந்து கள்ளழகர் சித்ரா பௌர்ணமி தினத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய போது தான் சூடிக் களைந்த பச்சைப் பட்டுப் புடவையை வெகுமதியாக சமர்ப்பித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் தங்க ஊஞ்சலில் ரங்கமன்னாருடன் எழுந்தருளும் போது சாத்திக்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமாலிருஞ்சோலை எனப்படும் திவ்விய தேசத்தில் கருவறையில் மூலவராக பெருமாள் ஸ்ரீபரமசுவாமி கல்யாண சுந்தரவல்லி தாயார் சமேதராக காட்சி அளிக்கிறார். உற்சவர் அழகர், சுந்தரராஜ பெருமாள். பாண்டிய நாட்டு வைணவ தலங்களில் சிறப்பான இந்த தலம் பல ஆழ்வார்களால் பாடப்பெற்றுள்ளது.
லூஸ் ஹேர் விடாதீங்க வாழ்க்கை லாஸ் ஆகிடும் - தலைமுடியிலும் அதிர்ஷ்டம் இருக்கு
கள்ளழகர் பெயருக்கு ஏற்றார் போல பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட கள்வன்தான். இந்த அழகர் விக்ரகம் அபரஞ்சி என்ற உயர்ரக தங்கத்தினால் செய்யப்பட்டது. அழகர் விக்ரகத்துக்கு இப்பகுதி மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் கறுத்து விடக்கூடிய அதிசயம் நிகழும் என்று கூறப்படுகிறது.
கள்ளழகர் கோலம்
இந்த ஆண்டு சித்திரை திருவிழா அழகர் மலையில் பக்தர்கள் யாருமின்றி கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. முதலில் சிவப்பு நிற கண்டாங்கி புடவை கட்டி வேல்கம்பு சாற்றி, சவுரிக்கொண்டையுடன் தங்கப்பல்லாக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளினார். மதுரைக்கு கிளம்பும் போது இதே கோலத்தில்தான் அதிர்வேட்டு முழங்க வருவார் கள்ளழகர்.
பச்சைப்பட்டு உடுத்திய அழகர்
வைகை ஆறு போல கோவில் வளாகத்தில் தொட்டி கட்டப்பட்டிருந்தது. கள்ளழகருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை மற்றும் கிளி, வஸ்திரம் அனுப்பி வைக்கப்பட்டன. ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் கள்ளழகர். அப்போது உடலில் வெண் பட்டும் மேலே பச்சைப்பட்டும் அணிந்திருந்தார் கள்ளழகர். அழகர் பச்சைப்பட்டு அணிந்திருந்ததால் மழைவளம் சிறக்கும் என்பது நம்பிக்கை.
பட்டுப்புடவை கொடுத்த அழகர்
தோளுக்கு மாலை கொடுத்த ஆண்டாளுக்கு பதிலாக மதுரை அழகர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வஸ்திரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பி வைத்தார் கள்ளழகர். அந்த வஸ்திரத்தையும் பட்டுப் புடவையையும் ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பட்டுப்புடவையில் ஆண்டாள்
இதையொட்டி கோவிலில் ஆண்டாளுக்கு, ரெங்கமன்னாருக்கும் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் வைத்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டன. இதன்பின்னர் மதுரையில் அழகர் அணிந்திருந்த பட்டுப்புடவை மற்றும் பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு ஆண்டாள் எழுந்தருளினார்.
சீர் வரிசை தரும் பெருமாள்
ஆண்டாள் சூடிக்களைந்த மாலை அழகருக்கு மட்டுமல்ல திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவம் நடக்கும் போது கருடவாகன சேவை நாளில் ஆண்டாள் மாலை அணிந்து வலம் வருவார் பெருமாள். அதற்கு பதிலாக ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தின் போது ஏழுமலையான் கோவிலில் இருந்து கல்யாண சீர்வரிசையும் பட்டுப்புடவையும் அனுப்பி வைக்கின்றனர். ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் அப்படி ஒரு பந்தம். கண்ணனை காதலித்து அந்த ஸ்ரீரங்கநாதன் திருவடியில் கலந்தவர்தானே ஆண்டாள்.