மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழா - 63 நாயன்மார்களுக்கு காட்சி அளித்த கபாலீஸ்வரர்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவில் வெள்ளித் தேரில் எழுந்தருளிய சிவபெருமான் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்ததை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு மாட வீதிகள் களைகட்டியுள்ளன. சென்னை மக்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த மக்களும் குவிந்துள்ளனர்.
மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்னும் புகழப்படும் மயிலாப்பூரில் சிவ ஆலயங்களுக்கு குறைவில்லை. அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது கபாலீஸ்வரர் ஆலயத்தில்தான். திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது இந்த தலத்தில்தான். வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான்.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் இறைவன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராகுல் வாயையே பார்க்குறியே.. அப்படியே மொழிபெயர்க்க போறியா என்ன?
கபாலீஸ்வரர் கோவில் திருத்தேர்
ஏழாம் நாள் திருவிழாவான நேற்று தேரில் இருக்கும் கபாலீஸ்வரருக்கு வில், அம்புடன் அலங்காரம் நடைபெற்றது. திரிபுர சம்ஹாரம் நடைபெறும் பொருட்டே இந்த வில், அம்பு அலங்காரம். நான்கு மாட வீதிகளில் ஆடி அசைந்து வந்த தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கூடிநின்ற பல்லாயிக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
அங்கம் பூம்பாவை வரலாறு
இன்று காலையில் அங்கம் பூம்பாவையை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர் குளக்கரையில் நடைபெற்றது. சிவநேசர் என்ற வணிகர் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் சிவபெருமான் மீது பக்தி கொண்ட அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டினைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார். பூம்பாவை பாம்பு கடித்து உயிரிழந்து விட்டாள். பூம்பாவையின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்தில் போட்டு வைத்து பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.
உயிரோடு வந்த பூம்பாவை
திருஞானசம்பந்தர் திருவொற்றியூர் வந்திருப்பதை அறிந்த சிவநேசர் தன் மகளின் நிலையை சொல்லி அழுதார். அப்போது ஞானசம்பந்தர் கபாலீஸ்வரரை தியானித்து " மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் " என்று பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். இந்த நிகழ்வை குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவில் எட்டாம் நாள் காலையில் அங்கம் பூம்பாவையை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர் குளக்கரையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அறுபத்து மூவர் திருவிழா
பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா இன்று மாலையில் நடைபெற்றது. 63 நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் எழுந்தருளினர். அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய கபாலீஸ்வரர் அறுபத்து நாயன்மார்களுக்குக் காட்சி அளித்தார். இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். கோலவிழி அம்மன், விநாயகர் இவர்களைத் தொடர்ந்து அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெற்றது. கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டீகேஸ்வரர், மூலவர்கள் வலம் வந்தனர். இதை மாட வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்
ஒன்பதாம் நாள் சிவபெருமான் பிட்சாடனார் வடிவிலும் மகாவிஷ்ணு மோகினி வடிவிலும் காட்சியளிப்பர். பத்தாம் நாள் காலை கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார். பவுர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பார் அன்னை பார்வதி. அம்பாள் திருக்கல்யாணத்தைப் பார்க்கிறவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.