ஏப்ரல் 5ல் அதிசார குரு பெயர்ச்சி... 6ல் சட்டசபைத் தேர்தல் - எந்த ராசிக்காரர்களுக்கு சாதகம்
குரு பகவான் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு அதிசாரமாக செல்லப்போகிறார். ஏப்ரல் 5ஆம் தேதி அதிசார குரு பெயர்ச்சி நிகழ உள்ள நிலையில் இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது யாருக்கு பாதகமா
சென்னை: பொன்னவன் எனப்படும் குரு பகவான் பார்வை பட்டால் சகல தோஷங்களும் நீங்கும். ஒருவர் ஜாதகத்தில் குரு யோகம் பெற்றிருந்தால், அந்த நபரை அரசியலில் உயர் பதவிகள் தேடி வரும். குரு யோகம் பெற்றால், வணங்காதவர்களை கூட இருகரம் கூப்பி வணங்க வைத்துவிடும். குரு பகவான் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். கால புருஷ தத்துவப்படி குரு பகவான் தற்போது பத்தாம் வீட்டில் இருக்கிறார் ஏப்ரல் 5ஆம் தேதி 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சென்று அமர்கிறார். இந்த அதிசார குரு பெயர்ச்சியால் எந்த ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு யோகங்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பங்குனி 23ஆம் தேதி ஏப்ரல் 5ஆம் தேதி திங்கட்கிழமை இரவு மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
சட்டசபைத் தேர்தல் காலமாக இருப்பதால் இந்த குரு பெயர்ச்சியை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. தேர்தலுக்கு முதல்நாளில் இந்த அதிசார குரு பெயர்ச்சி நிகழ்கிறது.
குரு பகவான் சஞ்சாரம் பார்வையினால் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. குருபகவான் அதிசாரமாக செல்வதால் இந்த ராசிக்காரர்களுக்கு பிரம்மாண்டமான பலன்களைத் தரப்போகிறது.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் தற்போது உள்ள பத்தாம் வீட்டில் இருந்து 11ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். மனதிருப்தி உண்டாகும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் தாராளமாக புரளும். லாப ஸ்தானம் வலுவடைகிறது. தோஷங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. மேஷம் ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகிறார் குரு பகவான். தைரியமாக தேர்தலில் களமிறங்கலாம். காரணம் குருவின் பார்வை முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீடு, பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீடு, களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். இந்த ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு பிரம்மாண்டமான எதிர்காலம் இருக்கிறது.
மிதுனம்
குரு பகவான் கும்பம் ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக மிதுனம் ராசியை பார்வையிடுகிறார். குருவின் பார்வையால் உங்கள் ராசிக்கு இருந்த தடைகள் நீங்கப்போகிறது. குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் அமரப்போவதால் பாக்கியங்கள் தேடி வரும். தேர்தல் காலமாக இருப்பதால் வெற்றி வாய்ப்பு கைகூடி வரப்போகிறது. சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருக்கிறதே என்று அஞ்ச வேண்டாம். ஆட்சி பெற்ற சனிபகவான் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். பட்டங்களும், பதவிகளும் தேடி வரும் காலமாக உள்ளது. குரு அருளால் அமைச்சராகும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கை கூடி வரும். குருவின் பார்வையும் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானத்தையும், நான்காம் வீடான சுக ஸ்தானத்தையும் பார்வையிடுவதால் இது சுகமான சந்தோஷமான அதிசார குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு பொற்காலத்தை தரப்போகிறது. ஏழாம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் உங்கள் ராசியினை நேரடியாக பார்க்கிறார். சிம்ம ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு தலைமைப்பதவி தேடி வரப்போகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகளை சுமூகமாக முடித்து தேர்தலை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் வெற்றி உங்கள் வசமாகும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. தொட்டது துலங்கும். மூத்தவர்களின் ஆசியும் அன்பும் கிடைக்கும். அதேபோல குருவின் பார்வை உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தின் மீது விழுகிறது. நீங்கள் எடுத்த காரியம் வெற்றியை தரும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நிறைய லாபங்கள் கிடைக்கப் போகிறது. குரு உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்களின் முன்னோர்களின் ஆசியோடு வெற்றிகள் தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் உண்டாகும். சனி பகவான் உங்கள் ராசியில் உச்சமடைபவர். இப்போது சஷ மகா யோகம் பெற்று நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. குரு சஞ்சரிக்கும் இடமும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. கூடவே குருவின் பார்வையும் கிடைப்பதால் உங்களுக்கு இது ராஜயோக காலமாக அமைந்துள்ளது. சட்டசபைத் தேர்தலை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் உங்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும்.
மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே இந்த அதிசார குரு பெயர்ச்சியால் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. ஜென்ம சனியாக இருக்கிறதே என்று கவலை வேண்டாம் 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இது பொங்கு சனிதான். ஆட்சி பெற்ற சனிபகவான் அரசாளும் யோகத்தை தரப்போகிறார். கூடவே இருந்த ஜென்ம குரு அதிசாரமாக 2ஆம் வீடான கும்பம் ராசிக்கு செல்கிறார். உங்களின் வாக்கு பலமடையும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டின் மீது விழுவதால் எதிரிகள் தொல்லை நீங்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளையே காணோம் என்ற நிலை உருவாகும். அதே போல எட்டாம் வீட்டின் மீது குரு பார்வை விழுவதால் பயம் பதற்றம் நீங்கும் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். அதே போல குருவின் பார்வை பத்தாம் வீட்டில் பலமடைவதால் அரசியல் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நிலையான பதவியும் பட்டங்களும் தேடி வரும்.
ரிஷபம், கடகம்
அதிகார குரு பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் பலன் கிடைக்குமா? மற்ற ராசிக்காரர்களுக்கு பலன்கள் இல்லையா என்று கேட்கலாம். ரிஷபம் ராசியில் ஜென்ம ராகுவும், செவ்வாயும் சஞ்சரிக்கின்றனர். கடகம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் பார்வை கிடைக்கிறது. இதெல்லாம் சாதகமாக இல்லையா என்று கேட்கலாம். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு சுய ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும் பட்சத்தில் வெற்றிகள் தேடி வர வாய்ப்பு உள்ளது.