பிரம்மதேசம் கைலாசநாதர் ஆலயத்தில் பொலிவை இழந்த தேர்... தேரோட்டம் நடைபெற அரசு நடவடிக்கை எடுக்குமா
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் நடைபெறாமல் உள்ளது. திருத்தேரினை சீரமைத்து மீண்டும் தேரோட்டம் நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்
திருநெல்வேலி: புகழ் பெற்ற பிரம்மதேசம் கைலாசநாதர் ஆலயத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் நடைபெறாமல் உள்ளது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கைலாசநாதர் சிதிலமடைந்து காணப்படும் திருத்தேரினை சீரமைத்து மீண்டும் தேரோட்டம் நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் இருந்து 3 கி.மீ தொலைவில் இயற்கை சூழல் நிறைந்த கிராமம் பிரம்மதேசம். இவ்வூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ கைலாசநாதர் எனும் சிவசுயம்பு லிங்கத்தை பிரம்மாவின் பேரன் ரோமச முனிவர் பூஜை செய்ததால் பிரம்மதேசம் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
நான்மறைகள் ஓதிய அந்தணர்களுக்கு மன்னர், மானியமாக வழங்கியதால் 'ராஜராஜ சதுர்வேதி மங்கலம்' அல்லது 'பிரம்மதாயம்' என பெயர் கொண்டு பின்னர் பிரம்மதாயம் என்பது 'பிரம்மதேசம்' என்று திரிவடைந்ததாக கூறப்படுகிறது. தென் தமிழக நவக்கிரக தலங்களில் சூரியன் தலமாக விளங்குகிறது. இக்கோவிலின் முன்வாயில் கோபுரம் ஏழு நிலைகளுடனும், முன்புறம் பிரம்ம தீர்த்தம் குளமும் அமைந்துள்ளது.
பிரம்ம தேசம் பெயர் காரணம்
பிரம்மாவின் பேரனாகிய ரோமச முனிவர், இலந்தையடிநாதர் எனும் சிவ சுயம்புலிங்கத்தை இங்கு கண்டுபிடித்து முதன் முதலில் பூஜை செய்து வழிபட்டார். இதனால் பிரம்மனின் நினைவாக இந்த ஊருக்கு பிரம்மதேசம் என்ற வந்துள்ளது. சிவபெருமானை அவமதிக்கும் வகையில் தட்சனின் யாகத்தில் பங்கேற்ற பிரம்மன் இந்த தலத்தில் தன் தவறை உணர்ந்து கைலாசநாதரை வணங்கி வழிபட்டு தீர்த்த குளம் ஒன்றை ஏற்படுத்தினார் இதனால் இந்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என விளங்குகிறது.
புண்ணிய தலம்
ஆதி கயிலாயங்களில் முதன்மையானதாகவும், தென்மாவட்ட நவக்கிரக ஸ்தலங்களில் சூரியன் ஸ்தலமாகவும், பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும் உள்ளது இக்கோவில். பிரம்ம தேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கடனா நதியானது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கயிலாசநாதரை வலம் வருவதால் காசிக்கு சென்று சிவதரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் இங்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சூரிய வழிபாடு
உத்தராயணம் தட்சிணாயனம் காலங்களில் சூரியன், கயிலாசநாதர் கருவறை வந்து தனது வெம்மையான கரங்களால் இறைவனை தழுவுகிறார். அந்த நேரத்தில் இத்தல இறைவனை வழிபட்டால் வேண்டியது அனைத்தும் நினைத்தபடி கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
வெற்றி கொடுத்த நாயகி
தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அப்போது அவன் இந்த பகுதிகளை கைப்பற்றி சோழ நாட்டோடு இணைய வைத்தான். இவ்வூர் அருகில் உள்ள திருவாலிநாதர் சுவாமி கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு இந்த ஊரில் கொலுவீற்றிருக்கும் கயிலாசநாதர், பிரஹந்நாயகியின் அருளால் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்தது. இதனால் மனம் மகிழ்ந்த மன்னன், இந்த ஊரை அந்தணர்களுக்கு காணிக்கையாக கொடுத்தார் என்கிறது தல வரலாறு.
பரிகார தலம்
இத்தலத்தில் சரஸ்வதிக்கும் தனி சன்னிதி இருக்கிறது. இங்கு தாமிரபரணி உத்தரவாகினியாக ஓடுகிறாள். அதாவது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கோவிலை வலம் வந்து வணங்குகிறாள். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நதியில் தங்களது கால்களை நனைத்த பின்னரே கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு விரும்பி வரும் தம்பதியினர், இந்த ஆற்றில் குளித்த பின்னரே இலந்தையடிநாதரை தரிசிக்கச் செல்கிறார்கள்.
தகர்க்க முடியாத கதவுகள்
அக்காலத்தில் அன்னியர்கள் படையெடுப்பு காலங்களில் ஊர் மக்கள் இந்த கோவிலுக்குள் அடைக்கலம் புகுந்து விடுவர். பூட்டியிருக்கும் வாயிற்கதவை எதிரிகள் படை யானைகளைக் கொண்டு முட்டி திறக்கச் செய்வார்களாம். அப்போது கதவில் மிக நெருக்கமாக அமைந்துள்ள குமிழ் ஆணிகள் யானையின் நெற்றியை கோரப்படுத்தி விடுவதால் யானையாலும் தகர்க்க முடியாததாக இக்கதவுகள் அமைந்துள்ளது. இக்கோவிலின் சுற்று மதிற்சுவர்கள், மிக உயரமாகவும், அகலமாகவும் அமைந்துள்ளது. இக்கோவில் மக்களின் போர்க்கால காப்பகமாகவும் அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சிவ தரிசனம் புண்ணியம்
சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியன முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது. சுவாமியிடம் நினைத்து வேண்டும் வரம் அருள்பாலிக்கும் . சுமார் 1000 ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்த புண்ணிய தலமாகவும் வணங்கப்படும் இக்கோவில் தற்போது எழிலை இழந்து வருவது கிராம மக்களிடையே வேதனையை எற்படுத்தியுள்ளது.
தோரோட்டம் நடைபெறுமா
ஏழு அடுக்கு கோபுரத்திலும் செடிகள் புதர்கள் போல் வளர்ந்து வருகிறது. தூய்மைபடுத்த படாத பிரம்மதீர்த்த குளம் என எழில் இழந்து வருவது காணும் பக்தர்களை மன வேதனைக்குள்ளாக்குகிறது. 40 ஆண்டுகளுக்கும் முன் 1978 ம் ஆண்டு தேரோட்டம் நடைபெற்றதாவும், அதன் பின் தேரோட்டம் நடக்காமல் தேர் முழுவதுமாக சிதலமடைந்து புதர்கள் மண்டி காணப்படுகிறது. கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டது.
அரசு செவி சாய்க்குமா
இந்நிலையில் விரைவில் மீண்டும் தேரோட்டம் நடைபெற தமிழக அரசு அறநிலையத் துறை மூலம் உயரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கையாக தெரிவிக்கின்றனர்.எனினும் கோவிலுக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளும் கோவில் கோபுரத்தையும், சிதலமடைந்த தேரையும் பார்க்கும் போது மன வேதனைக்குள்ளாவது உண்மை தான். இதேபோல் நெல்லையில் சில கோவில்கள் மோசமான நிலையில் உள்ளன.
கைலாசநாதர் அருள் வேண்டும்
இதற்கு ஆண்டாண்டு காலமாக கோவில் நிலங்கள், கட்டடங்களை பயன்படுத்தி வருவாய் ஈட்டி வருபவர்களிடம் பெறும் பணத்தில் கோவிலை புனரமைப்பு செய்திட அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே எல்லாருடைய எண்ணமாக இருக்கிறது. விரைவில் தமிழக அரசு இந்து கோவில் களுக்கு சொந்தமான சொத்துக்களை கையகபடுத்தி கோவில், குளங்களை செப்பணிட வேண்டும். இக்கோவில் அறநிலையத் துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. ஊர் கூடி தேர் இழுக்க தயாராக இருக்கும் பிரம்மதேச கிராம மக்களுக்கு அந்த கைலாசநாதரே அருள் பாலிக்க வேண்டும்.