சபரிமலையில் சித்திரை விஷு கனி பூஜை - கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதியில்லை
சித்திரை மாத பிறப்பையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது. தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால், பக்தா்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
பட்டனம்திட்டா: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், வழக்கமாக சபரிமலையில் சித்திரை முதல் நாளான இன்று நடைபெறும் விஷு கனி காணல் நிகழ்ச்சியானது பக்தர்கள் இன்றி சம்பிரதாய சடங்குகளாக மட்டுமே நடைபெற்றது. விஷுக்கனி தரிசனத்துக்காக, கோயில் நடை இன்று அதிகாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், சித்திரை மாத பிறப்பையொட்டி திங்கள்கிழமை நடை திறக்கப்பட்டது. தந்திரி மகேஷ் மோகனரரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீா் நம்பூதிரி, கோயில் நடையை திறந்து வைத்தாா்.
அண்டை மாநிலமான கேரளாவில், ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது சித்திரை முதல் நாளன்று நடைபெறும் சித்திரை விஷு கனி காணல் நிகழ்ச்சியும் ஒன்று. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதைப் போல், கேரளாவில் சித்திரை விஷு பிறப்பை கனி காணல் எனும் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தநாளில் ஐயப்பனை தரிசிக்க நாடு முழுவதும் இருந்தும் ஆயரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு வருவதுண்டு. ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின் போதும் பக்தர்கள் வருவது வழக்கமாக இருந்தாலும், தமிழ் புத்தாண்டு தினத்தன்று சித்திரை விஷு கனி காணல் நிகழ்ச்சியை காண்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதுண்டு.
அதே போல், இந்த ஆண்டு, சித்திரை விஷு கனிகாணல் நிகழ்ச்சி சபரிமலையில் நடைபெற்றது. சபரிமலை வரலாற்றில் பக்தர்கள் இல்லாமல் சித்திரை விஷு கனிகாணல் நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.
சித்திரை விஷு கனிகாணல் நிகழ்ச்சிக்காகவும், புத்தாண்டு கொண்டாடவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளதால், மக்கள் வெளியே வருவல் எந்தவித பலனும் இல்லை. ஆகவே, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்பதை ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ள பக்தா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அக்கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வரும் 18ஆம் தேதி மாலையில் கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. சபரிமலை கோயிலுக்கு பக்தா்கள் இணையவழியில் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல், திருவனந்தபுரம் பத்மசுவாமி கோவிலி முக்கிய பூஜைகள் மற்றும் வழிபாடுகளுக்கு ஆன்லைன் வாயிலாக பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.