நோய் நீக்கும் தன்வந்திரி பகவான் ஜெயந்தி... தனத்திரயோதசி நாளில் தங்கம் வாங்கினால் இவ்வளவு நன்மைகளா?
தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி அன்று நம் இல்லங்களுக்கு திருமகள் வருவதாக ஐதீகம். அன்னை மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம் தோறும் தீபங்கள் ஏற்றி வழிபடுவர். வட இந்தியாவில் தனத்திரயோதசியாக கடைபிடிக்கின்றனர்.
சென்னை: மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு முன்பாக வரும் திரயோதசி தன்வந்திரி ஜெயந்தி நாளாகும். தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி அன்று நம் இல்லங்களுக்கு திருமகள் வருவதாக ஐதீகம். அன்னை மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம் தோறும் தீபங்கள் ஏற்றி வழிபடுவர். வட இந்தியாவில் தனத்திரயோதசியாக கடைபிடிக்கின்றனர்.
தன திரயோதசி நாளில் செல்வ வளம் பெருகும் வகையில் நம் வீட்டில் உள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. வட இந்தியாவில் இந்த நாட்களில் தங்க நகைகளில் முதலீடு செய்கின்றனர்.
தேவர்களும் அசுரப் படைகளும் பாற்கடலைக் கடைந்தபோது ஒரு கையில் அமிர்தகலசம் மற்றொரு கையில் மருத்துவ சாஸ்திரம் மற்றும் அதன் வழிமுறைகளோடு கூடிய ஓலைச் சுவடிகளோடு தன்வந்திரி வெளிவந்தார். ஆயுர்வேத சாஸ்திர முறைகளை உலகுக்கு உபதேசிக்க வந்த இவரை உலக மருத்துவர்கள் மானசீகக் குருவாகவும் கடவுளாகவும் ஏற்று வணங்கி வரும்போது தான் சார்ந்த மருத்துவ துறைகளில் உயர்நிலை பெறலாம் என்பது ஒரு நம்பிக்கை. இதற்காக ஆயுள் ஸ்திர தந்திரம் என்கிற வழிபாட்டு விதிகளே தன்வந்திரி பகவானைப் பற்றி இருக்கிறது.
கல்விக்கு சரஸ்வதிதேவி, செல்வத்துக்கு லட்சுமிதேவி, வீரத்துக்கு பார்வதிதேவி, ஞானத்துக்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தி, பகை அகல துர்காதேவி, காரிய வெற்றிக்கு ஆஞ்சநேயர் என்று சொல்லப்படுகிற வரிசையில் நோய் தீர்க்கும் கடவுளாக, மாமருத்துவராக நம்மால் வணங்கப்படுபவர் ஸ்ரீதன்வந்திரி பகவான். இந்த உலகின் ஆதி மருத்துவக் கடவுளாக ஸ்ரீதன்வந்திரி பகவானைப் போற்றிப் புகழ்கின்றன புராணங்கள்.
தீபாவளிக்கும் தன்வந்திரிக்கும் தொடர்பு
பாற்கடல் கடையப்பட்டபோது வெளியானவர் தன்வந்திரி என்கிறது பாகவதம். பாற்கடலில் இருந்து அவதரிக்கும்போது அமிர்த கலசத்தோடு வந்தவர் தன்வந்திரி பகவான். அதன் பின் அந்த அமிர்தம் ஒரு அகப்பையால் தேவர்கள் அனைவரும் விநியோகம் செய்யப்பட்டது. எனவே தீபாவளியின்போது கரண்டி, கலசம் போன்ற சில பாத்திரங்களை வாங்கி இல்லத்தில் சேர்ப்பது வட இந்தியர்களின் வழக்கம். தீபாவளிக்கு முந்தைய திரயோதசி தினத்தில் ஸ்ரீதன்வந்திரி பகவான் விக்கிரகத்துக்கு அன்றைய தினத்தில் விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். தீபாவளி தினத்தன்று தன்வந்திரி பகவானை தரிசித்து அவரது ஆசிகளைப் பெற வேண்டும்.
தீபாவளி மருந்து
தீபாவளி தினத்தில் எப்படி எண்ணெயில் லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கவுரி, மலர்களில் மோகினி, தண்ணீரில் கங்கை, இனிப்பு பலகாரத்தில் அமிர்தம், புத்தாடையில் மகாவிஷ்ணு ஆகியோர் உறைவதாகச் சொல்கிறோமோ, அதுபோல் தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் உறைகிறார். எனவே, தீபாவளி மருந்து உட்கொள்ளும்போது ஸ்ரீதன்வந்திரி பகவானை மனபூர்வமாகப் பிரார்த்திக்க வேண்டும். எந்த ஒரு தீராத நோய்க்கும், உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு, அவரது பிரசாதத்தைப் பெற்று உண்டால், நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு. தன்வந்திரியின் மந்திரத்தை ஜபம் செய்வதால் தைரியம் ஏற்பட்டு பாபம், வியாதி, விஷம், கிரஹ தோஷங்கள் இவை அனைத்தும் நீங்குகின்றன.
தன்வந்தரி விரதமுறை
அதிகாலையில் எழுந்து மஞ்சள்தூள், துளசி இட்ட நீரில் குளித்துவிட்டு அன்று முழுவதும் விரதம் இருந்து தன்வந்திரி வரலாறு அவரை பற்றிய துதிகளை படிக்க வேண்டும். மாலைப் பொழுது சாயும் முன் நீர்நிலை தீர்த்தக் கட்டங்களுக்குச் சென்று தீபம் ஏற்றிவிட்டு தன்வந்திரியையும் யம தர்மராஜனையும் வழிபடுவார்கள். விளைநிலத்தில் சிறிது உழுத பிறகு மண் எடுத்துப் பசும்பாலில் கலந்து இலவம் பஞ்சு மரக் குச்சியைக் கொண்டு மறுபடியும் கலக்கித் தங்கள் உடல்மேல் தெளித்துக்கொள்வார்கள். இந்த விரத நாளன்று வஸ்திர தானம் செய்தாலும் யமனை குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டக துதி படிப்பதாலும் மரணங்கள் துர்மரணங்களில் இருந்து மீண்டு தீர்க்கமான ஆயுளை பெற முடியும் என நம்பப்படுகிறது. அன்று இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைப்பது எமபயம் தீர்ப்பதாக ஐதீகம்.எனவே அந்த விளக்கு 'எமதீபம்' என்று அழைக்கப்படுகிறது.
எமதர்மன் ஆசி கிடைக்கும்
அன்றைய தினம் எமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க யமுனையும் மனம் மகிழ்ந்து, தனது சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள். இத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, 'எமனுக்குப் பிடித்த விழா' என்று புராணங்களும் போற்றுகின்றன. திங்கட்கிழமை பிரதோச நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட யம பயம் போகும்.
தங்கம் வாங்க தன திரயோதசி
தென்னிந்தியர்களுக்கு அட்சய திருதியை போல வட இந்தியர்களுக்கு தன திரயோதசி. அன்று தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படி வாங்கும் தங்கத்தை தனலட்சுமியின் முன் வைத்து பூஜை செய்வார்கள். வசதி குறைவானவர்கள் ஒரு வெள்ளி அல்லது, எவர்சில்வர் கரண்டி, சொம்பு, புதிய பாத்திரங்கள், பித்தளை, புடவை வாங்கலாம்.
பூஜை செய்ய நல்ல நேரம்
செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி, செல்வத்தை பாதுகாக்க குபேரனை நிதன திரயோதசி நாளில் குபேர பூஜை செய்ய நல்ல நேரம் செவ்வாய்கிழமை மாலை 6.05 மணி முதல் 8 மணி வரை ஏற்றது. வியாழக்கிழமை தீபாவளி நாளில் காலையில் 6.45 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்யலாம். வெள்ளிக்கிழமை காலை சுக்ரஹோரையில் ஸ்ரீமஹாலக்ஷ்மி குபேர பூஜை செய்வது சிறப்பு.