தீபாவளி 2020: தன திரயோதசி தொடங்கி யம துவிதியை வரை 5 நாட்கள் பூஜைகள்
தீபாவளி ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல தன திரயோதசி தொடங்கி யம துவிதியை வரை 5 நாட்கள் கொண்டாடப்பட வேண்டிய பண்டிகை. எந்தெந்த நாட்களில் என்னென்ன பூஜை செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
சென்னை: தீப ஆவளி வரிசையாக விளக்குகளை ஏற்றி வைத்து கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை ஒரு நாள் கொண்டாட்டமாக முடிந்து விடுகிறது. எண்ணெய் தேய்த்து குளித்து பட்டாசி வெடித்து பலகாரம் சாப்பிட்டு கொண்டாடுகிறோம். வட மாநிலங்களில் நவம்பர் 12ஆம் தேதி தனத்திரயோதசி முதல் 16ஆம் தேதி யம துவிதியை வரை 5 தினங்கள் தீபாவளியை கொண்டாடி மகிழ்கின்றனர்.
செல்வம் பெருகும் தன திரயோதசி நவம்பர் 12 ஆம் தேதி யம திரயோதசியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாலை நேரத்தில் தெற்கு நோக்கி விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இந்த நாள் தன்வந்திரி ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது.
மஹாளய பட்ச காலத்தின் போது எம லோகத்திலிருந்து வந்திருந்த நம் முன்னோர் நினைவாக நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு நம் கடமையை செய்திருப்போம். நம்முடைய முன்னோர்கள் மீண்டும் யம லோகம் செல்ல அவர்கள் செல்லும் பாதையில் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதற்காக தென் திசை நோக்கி வீட்டிற்கு வெளியே வாசலில் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒரு தீபம் வீதம் மாலை நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். இதன் மூலம் ஆண்டு முழுவதும் முன்னோர்கள் ஆசி கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் நோய் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பது நம்பிக்கை.
செல்வம் தரும் தாந்திரியாஸ்
தன திரயோதசி நாளில் செல்வ வளம் பெருகும் வகையில் நம் வீட்டில் உள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. வட இந்தியாவில் தாந்திரியாஸ் இந்த நாட்களில் முதலீடு செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி நகைகள் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கலாம்.
தன்வந்திரி அவதாரம்
மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாகவும் தேசிய ஆயுர்வேத தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தன்வந்திரி பகவானை வணங்க நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
லட்சுமியின் அருள் கிடைக்கும்
நரக சதுர்தசி - யம சதுர்தசி நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே எழுந்து நல்ல எண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணையை உடல் முழுதும் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். அதில் நாயுருவி இலை சுரைக்காய் கோடி இலை போன்றவை சேர்த்து கொள்ளலாம். இதனால் லட்சுமி தேவியின் அருள் கிடைஉண்டாகும்.
செல்வம் பெருகும் பூஜை
அமாவாசை நாளில் 14-11-2020 சனிக்கிழமை நாளில் சூரியனும் சந்திரனும் சுக்கிரனின் வீட்டில் உள்ள தினம். அதனால் அன்றைய தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும். லட்சுமி குபேர படம் அல்லது கலசம் வைத்து 21 எண்ணிக்கையில் அரளி மொட்டு அரளி இலை அப்பம் பக்ஷணம் வைத்து தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு வீட்டில் உள்ள நகைகளை பூஜையில் வைத்து அலங்காரம் செய்து வழிபட செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
கடன் பிரச்சினை தீரும்
அமாவாசை முடிந்த மறு நாள் பிரதமை நவம்பர் 15 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் துவங்குகிறது. இது சந்திரமான கணக்கு. பொதுவாக ஜோதிட ரீதியாக கால புருசனுக்கு மறைவு ராசியான 8வது ராசியான விருச்சிகம் மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வருவது நல்லது. இதனால் கடன்கள் தீரும். பசு கன்றுக்குட்டி ஆடு போன்ற வாயில்லா ஜீவ ராசிகளுக்கும் நன்மை உண்டாக அவற்றை பூஜித்து உணவு தர வேண்டும்.
சகோதரிகளுக்கு பரிசு
அமாவாசை முடிந்து இரண்டாம் நாள் நவம்பர் 16 ஆம் தேதி துவிதியை யம துவிதியை பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் அழைப்பை ஏற்று சகோதரர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று கையாலே தலை வாழை இலையில் விருந்து உணவு கொடுக்க வேண்டும். இன்று சகோதரர்கள் சகோதரி வீட்டில் சாப்பிட்டு விட்டு பரிசு பொருட்களை கொடுத்து அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை பாரம்பரியமாக 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.