கோவிலுக்கு போகும் போது பட்டுப்புடவை, தங்கநகை அணிய வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா
கோவிலுக்கு போகும் போது பெண்கள் பட்டுப்புடவைகளை உடுத்த வேண்டும், தங்க நகைகளை அணிய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்கான அறிவியல் பூர்வமான உண்மைகளை அறிந்து கொள்வோம்.
சென்னை: பட்டு ஆடைகள் உடலின் காந்த சக்தி அதிகம் வெளியேறாமல் காக்கும் தன்மை கொண்டது. இல்லற வாழ்வில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பட்டு ஆடைகளை அதிகம் உடுத்தலாம். கோவிலுக்கும் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு செல்லும் போதும் பட்டாடைகளையும் தங்க நகைகளையும் அணிந்து செல்வதன் மூலம் உடலில் நேர்மறை ஆற்றலும் காந்த சக்தியும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும்.
உலகளவில் பல நாட்டு பெண்களும் அணிய விருப்பப்படும் சேலையாக பட்டு சேலை உள்ளது. பட்டு சேலையின் மென்மை தன்மையும், பளபளப்பும், அணியும் பெண்களின் அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன. பட்டின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஆலயத்திற்கு அணிந்து செல்லும் போது அங்கிருக்கும் இறை சக்தியை நம் உள்வாங்கி தருகிறதாம். அதன் காரணமாய் ஆலயம் செல்லும்போது அவசியம் பட்டு சேலை கட்டி வருகின்றனர்.
நம்முடைய முன்னோர்கள் எந்த ஒரு விசயத்தையும் காரணமில்லாமல் சொல்லியிருக்க மாட்டார்கள்.
பட்டு சேலைக்கு என தோஷமும் கிடையாது. நம் தமிழ் திருமணங்களில் பட்டுபுடவைகள் தான் முன்னிலை வகிக்கின்றன. எத்தனையோ விதம் விதமான டிசைனர் புடவைகள் வந்தாலும் பாரம்பரிய திருமணப்புடவைகள் என்றாலே அதுபட்டுப்புடவைதான்.
பட்டு உடுத்தும் அம்மன்
பட்டுப்புடவையின் மகிமை அறிந்துதான் அம்மனுக்கு பட்டுப்புடவைகளை சாத்துகின்றனர். அம்மனுக்கு சாற்றிய பட்டுப்புடவையில் நேர்மறை சக்திகள் படிந்திருக்கும் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது. எனவேதான் அம்மனுக்கு உடுத்திய புடவைகளை ஏலம் எடுப்பதற்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.
பட்டு புடவையின் மகிமை
கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர் பெற்ற இந்தியாவில் பட்டுப்புடவைகளுக்கு என்று தனி மவுசு உண்டு. உலகளவில் பட்டுப்புடவைகள் தயாரிப்பில் 2 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் பல்வேறு ரக பட்டுப்புடவைகள் உள்ளன. உடைகளில் நவீன வளர்ச்சியை எட்டியிருக்கும் இப்போது கூட பெண்களுக்கு பட்டு புடவைகள் மீது அலாதி பிரியம் உண்டு.
இறை சக்தி அதிகம்
கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிற திருவிழாக்களின் போது பெண்கள் புதிய பட்டு புடவைகள் அணிந்து செல்வது சிறந்ததாகும். ஏனெனில் கோவில் குடமுழுக்கு நடக்கும் பொழுது செய்யப்படும் யாகங்கள், மந்திர உச்சாடனங்கள், கோவில் கும்பத்திற்கு குடமுழுக்கு செய்த பின்பு பக்தர்களின் மீது தெளிக்கப்படும் தீர்த்தம் போன்றவை இறை சக்தி அதிகம் கொண்டவையாகும்.
பிரம்மாண்ட கோவில்கள்
கோவில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கதவுகள், கொடிமரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள்பிரகார பாதை என, ஒவ்வொன்றும் அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் தொடர்புடையவை. பொதுவாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள், அமைதியான இடங்கள் தான், கோவில் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இங்கு தான் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள், அதிகமாக பரவியிருக்கும். வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, மக்கள் பாதுகாப்பாக இருக்க, பிரமாண்டமான கோவில்கள் தான் பயன்பட்டன.
நேர்மறை அலைகள்
மிக மிக அதிகமான காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து, அதன் மீது சிலையை அமைத்து, மூலஸ்தானம் உருவாகும். அதன்பின் தான் கோவில் கட்டப்படும். அந்த செப்பு தகடுகளின் தன்மை, பல நல்ல அலைகளை கிரகித்து, அதை பல மடங்காக, அந்த சிலை மூலம் வெளிக்கொணரும். எல்லா கோவில்களிலும், மூலஸ்தானம் மூன்று பக்கமும் மூடி, வாசல் மட்டும் திறந்திருக்கும் அளவிற்கு, கதவுகள் அமைந்திருக்கும். அந்த நேர்மறை அலைகள் ஒருமித்து கிடைக்க, இது வழிவகுக்கும்.
நேர்மறை ஆற்றல் மையம்
இதே போல், மூலஸ்தானத்தில், அணையாவிளக்கு ஒன்று எப்போதும் இருக்கும். அதைச் சுற்றி கண்ணாடியும் இருக்கும். இது கோவிலின் நேர்மறை ஆற்றலை எங்கும் பரவ செய்யும், ஒரு நுட்பமான செயல் தான் கண்ணாடி வைத்திருப்பதன் நோக்கமாகும்.
காந்த சக்தியை கிரகிக்கும்
எனவேதான் கோவில்களில் உள்ள நேர்மறை ஆற்றல்களை அந்த பட்டு உடைகள் கிரகித்து, அதை உடுத்துபவர்களுக்கு உடலிலும், மனத்திலும் ஒருவகையான உற்சாகமான சக்தியை கொடுக்கும். இந்த விதி 100% தூய்மையான பட்டு ஆடைகளுக்கே பொருந்தும். பட்டு ஆடைகள் உடலின் காந்த சக்தி அதிகம் வெளியேறாமல் காக்கும் தன்மை கொண்டது. இல்லற வாழ்வில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பட்டு ஆடைகளை அதிகம் உடுத்தலாம்.
மன அமைதி ஏற்படும்
துறவிகள் மற்றும் யோக வாழ்வு மேற்கொள்பவர்கள் பட்டு உடைகளை தவிர்க்க வேண்டும். ஆன்மீக வாழ்வு மேற்கொள்பவர்கள் பருத்தி உடைகளையே அதிகம் பயன்படுத்த வேண்டும். பருத்தி உடைகள் அணிபவர்களுக்கு உடல் மற்றும் மன பாரங்கள் குறைந்தது போன்ற ஒரு உணர்வை கொடுக்கும். மனதை அமைதிப்படுத்தும்.
தவிர்க்க வேண்டிய உடைகள்
கோவில்களுக்கு பொதுவாக ஆண்கள் வேட்டி சட்டையிலும், பெண்கள் புடவையிலும் செல்வது நன்மையை கொடுக்கும். மேற்கத்திய பாணி உடைகளான ஷார்ட்ஸ் எனப்படும் அரைகால் டவுசர், டீசர்ட், பனியன்கள் அணிந்து செல்லக்கூடாது. பெண்கள் இறுக்கமான உடைகளையோ ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கொண்டு கோவிலுக்கு வரக்கூடாது என்று பல கோவில்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நமது மனம் உடலின் மீது கவனமில்லாமல் வீணான பல காரியங்களை செய்ய உடலை தூண்டி, அதன் சக்தியை வீணடிக்கிறது.
அழுக்குத்துணி வேண்டாம்
பட்டு ஆடைகள், புதிய பருத்தி ஆடைகள் இல்லாவிட்டாலும் நன்றாக துவைத்து உலர்த்தப்பட்ட ஆடைகளையே
கோவில்களுக்கு செல்லும் போது அணிந்து செல்ல வேண்டும். அழுக்கான ஆடைகளை அணிந்து கொண்டு செல்வது அக்கோவிலில் இருக்கும் தெய்வங்களின் சாபங்களை பெற்று தருவது மட்டுமின்றி, கோவிலுக்கு வெளியே வந்த பிறகு தீய சக்திகளின் அதிர்வுகளையும் நம் மீது இந்த அழுக்கு துணிகள் சேர்த்து விடும்.
கோபம் அதிகரிக்கும்
அதிகம் கிழிந்த மற்றும் ஒட்டுபோடப்பட்ட ஆடைகளை அணிந்து செல்ல வேண்டாம். பிறரின் கவனம் நம் மீது விழும் வகையிலான ஆடைக்களையோ, நவ நாகரீக ஆடைகளையே அணிந்து செல்வது தெய்வத்தின் கோபத்தை நாம் பெரும் நிலையை உண்டாக்கும்.
ஆற்றலை உள் வாங்கும்
கோவில் கருவறையில் மாங்கல்யம், சாவி, பேனா, புதுநகைகள் போன்றவற்றை வைத்து எடுத்தால், இந்த உலோகங்கள் அங்குள்ள நேர்மறை ஆற்றலை அப்படியே பற்றிக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான், கோவிலுக்கு செல்லும் போது தங்கத்தினால் ஆன நகைகளை அதிகம் அணிந்து செல்வது நன்மையைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.