சமயபுரம் மாரியம்மனின் பச்சைப்பட்டினி விரதம் முடிந்தவுடன் கொரோனா ஓடிவிடும் - நித்யானந்தா
அன்னை ஆதிபராசக்தி பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார். இந்த விரதம் மக்களை காக்கவே, கொரோனா வைரஸ் எல்லாம் நம் மக்களை பாதிக்காது விரைவில் ஓடிவிடும் என்று கூறியுள்ளார் நித்யானந்தா.
திருச்சி: உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் நோயின்றி வாழ இறைவியே விரதம் இருக்கும் தலம் சமயபுரம். அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார் சமயபுரம் மாரியம்மன். இப்போது கொரோனா வைரஸ் நோயின் அச்சம் காரணமாக மக்கள் பீதியடைந்துள்ளனர். மாரியம்மனின் 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் முடிந்த உடன் கொரோனா நோய் பாதிப்பு நாட்டை விட்டே ஓடிவிடும் என்று நித்யானந்தா கூறியுள்ளார்.
Recommended Video
சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த தலம். சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற பழமொழிக்கு ஏற்ப பக்தர்களின் கஷ்டங்களை தக்க சமயத்தில் காப்பதாக ஐதீகம்.
மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை, உலக நன்மைக்காக அம்பாளே விரதம் மேற்கொள்கிறார். அந்த விரதம் இனிதே நிறை வேற பக்தர்கள் பூக்களை அம்பாளின் மீது அபிஷேகம் செய்வதே "பூச்சொரிதல்" என கூறப்படுகிறது. அம்பாள் மேற்கொண்டிருக்கும் இந்த விரதத்தை "பச்சை பட்டினி விரதம்" என்பர். பூச்சொரிதல் நாள் முதல் 28 நாட்களுக்கு தளிகை, நெய்வேத்தியம் கிடையாது. இளநீர், கரும்பு, பானகம், துள்ளுமாவு, நீர்மோர் மட்டுமே அம்பாளுக்கு கொடுக்கப்படுகிறது.
மகிஷனை வதம் செய்த ஆதிபராசக்தி
அசுர மன்னனுக்கும், எருமை அரசிற்கும் பிறந்தவன் மகிஷன். பல காலம் செய்த தன் தவங்களினால் கிடைத்த வரங்கள் அவனுக்குச் செருக்கை உண்டாக்கின. எனவே அவன் தேவர் மீது படையெடுத்து அவர்களை வென்றான். ஏழு உலகமும் அவன் பெயர் கேட்டு நடுங்கின. தேவர் துயர் நீக்க துர்கை கடும் தவம் புரிந்தாள் ஒன்பது நாட்கள் மஹிஷனுடன் கடும் போரிட்டு, தசமி அன்று மஹிஷனைக் கொன்று மஹிஷாசுர மர்த்தினி எனப் பெயர் பெற்றார்.
மஹிஷனுடன் போரிட்ட சினம் தணியவும், தன்னுடைய கொடிய தோற்றம் மாறவும் தவம் புரிய என்னினாள் தேவி.
மாரியம்மன் தவம்
தேவி உக்ர சொருபத்துடன் வந்து சேர்ந்த இடம் ஸ்ரீரங்கம். கோவிலில் ஆராதனை செய்யும் பட்டர்கள் வைஷ்ணவியின் உக்கிரம் தங்காமல், அவளை மக்கள் அதிகமாக செல்லாத வேப்பமரம் சென்று தவம் செய்யுமாறு வேண்டினர். தவத்திற்கு ஏற்ற இடமாக அமைந்தது காவேரி கரையில் உள்ள சமயபுரத்தில் இருந்த வேப்பங்காடு. கௌமாரி என்னும் பெயருடன் தவம் புரிய வந்த செவ்வந்தி நிறத்துடையாள் மஞ்சள் நிற ஆடை அணிந்தாள். மென்மையான மலர்களால் தன்னை மூடிக்கொண்டாள். உண்ணா நோம்புடன் கடும் தவம் புரிந்தாள். தவம் பலித்தது. துர்கையின் கோபம் தீர்ந்தது. அந்த இடத்தில் வாழ்ந்த மக்களும் அம்மனுக்கு ஒரு ஆலாயம் எழுப்பி வழிபட்டு வந்தார்கள். அன்று முதல் மாரியம்மனாக மக்கள் மனக் குறைய தீர்க்க அன்னை அங்கேயே கோவில் கொண்டு உறைகிறாள் .
அம்மனின் அழகு
மக்களை இரட்சித்து, வேண்டிய வரங்களைக் கொடுத்து, காத்துவரும் அம்மனின் அழகு தெய்வீகமானது. அம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். அந்த அழகைக் கண்டால் மனம் உருகும், மனம் ஒருமைப்படும், மனத்திலுள்ள மாசும் அகலும். தாயைத்தேடி அலைந்தவர்க்கு, கருணையே வடிவாக அமர்ந்திருக்கும் தாய், ஆயி மகாமாயி காட்சி தருவாள்.
கோவில் கட்டிய மன்னன்
தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது. இங்கு அம்மன் கோவில் உருவாகியதற்கு பின்வரும் சம்பவம் காரணமென்று நம்பப்படுகிறது. விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே அவர்கள் வெற்றியும் கண்டார்கள். அம்மனுக்கு கோவிலையும் கட்டினார்கள்.
பூச்சொரிதல் விழா
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளித் திருவிழா நடைபெறுகிறது. இதில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். திருச்சியில் உள்ள அத்தனை பெண்களும் அன்னையை தரிசிக்க கட்டாயமாகச் செல்வர். அதுவும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடுவர். பூச்சொரிதல் விழாவும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரைத் தேர்த்திருவிழாவிற்கு, தமிழக பக்தர்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் உள்ளவர்களும் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் சமயபுரம் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
சமயபுரத்தால் மகிமை
ஸ்ரீரங்கநாதனின் தங்கையாக சமயபுரம் மாரியம்மன் போற்றப்படுகிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப்போலவே சுயம்பு வடிவானவள். 12 ராசிகள் 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் எந்திரங்களாக அடக்கி அருள்பாலிப்பது சமயபுரத்தாளின் சிறப்பு. அம்மனின் சுயம்பு திருமேனியில் நவகிரங்களையும் நவ சர்ப்பங்களாக தரித்து அருள்பாலிக்கிறார். எனவேதான் அம்மனை வணங்கினாலே நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ராகு கேது தோஷங்கள் நீங்கும். அம்மனை அமாவாசை, பவுர்ணமி தினங்களிலும் கிரகண காலங்களிலும் வணங்கினால் உச்ச பலன் கிடைக்கும்.
நோய் நீக்கும் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் பூச்சொரிதல் விழா பிரசித்தி பெற்றதாகும். 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நாட்களில் அம்மனை வணங்குவது சிறப்பு. அம்மன் இப்போது பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார். இந்த விரதம் முடிந்த உடன் அம்மனின் அருளினால் உலக மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கி விடும் என்று சுவாமி நித்யானந்தா வீடியோவாக பேசி வெளியுட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.