தங்கம் விலை ஐப்பசியில் விலை குறைந்து தை மாதம் மீண்டும் உச்சத்தை தொடும் - பஞ்சாங்கம்
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை உயர்வுக்கு காரணம் குரு பகவான்தான் என்கிறது பஞ்சாங்கம். குருவிற்கு பொன்னவன் என்ற பெயரும் உண்டு. இந்த ஆண்டு தங்கம் வெள்ளி பொருட்களின் தேவை அதிகமாகும்
சென்னை: தங்கம் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்றாலும் தங்கத்தை வாங்குபவர்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்க விற்பனையும் தற்போது அதிகரித்து வருகிறது. தங்கம் விலை உயர்வுக்குக் காரணம் குருபகவான் என்கிறது பஞ்சாங்கம். ஜோதிடத்தில் குரு பகவானுக்கு பொன்னவன் என்ற பெயரும் இருக்கிறது. சார்வரி ஆண்டில் குருபகவான் சஞ்சாரமே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாம். தங்கத்தின் விலை ஐப்பசி மாதத்தில் குறைந்து மீண்டும் தை மாதத்தில் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவிற்கு உயர வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது சார்வரி வருட தமிழ் பஞ்சாங்கம்.
சார்வரி வருடத்தில் ஸஸ்யாதிபதியாக, நீரஸாதிபதியாக குரு பகவான் இருப்பதால் வருண யாகம் செய்வதால் நாட்டில் குல தெய்வ அனுக்கிரகத்தினால் மழை பெய்யும். நெல், கோதுமை, கடலை போன்ற தானியங்களும் அதிகமாக பயிராகும்.
மஞ்சள், தங்கம் போன்ற பயிர்கள் அபிவிருத்தியாகும். தங்கம் விலை ஏறும். சுப காரியங்கள் அதிகமாகும் தங்கம் வெள்ளி பொருட்களின் தேவையும் அதிகரிக்கும். விற்பனையும் அதிகமாகும் என்று கணித்துள்ளது தமிழ் பஞ்சாங்கம். எவ்ளோ விலை விற்றாலும் தங்கத்தின் மீதான மோகமும் தங்கம் வாங்குவதில் ஆர்வமும் அதிகரித்து வருவது ஏன் என்ற கேள்வி எழலாம். தங்கம் சிறந்த முதலீடு என்பதால்தான் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் மக்கள்.
அழகு அந்தஸ்து ஆரோக்கியம்
தங்க நகைகள் அணிவதால் அந்தஸ்தும் அழகும் அதிகரிப்பதோடு மட்டுமல்ல பெண்களின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
தங்கத்தின் மீதான நமது ஆர்வம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தின்போது தொடங்கியதாக கூறப்படுகிறது. பணக்காரர்களுக்கு தங்கம் ஆடம்பர பொருளாக இருந்தாலும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு தங்கம் சிறந்த முதலீடாக திகழ்கிறது.
தங்கம் உடனே பணமாகும்
ஆசை ஆசையாக தங்க நகை வாங்கினாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்கத்தை அடமானம் வைக்க நேரிடுகிறது. தங்கத்தை சிலர் விற்பனையும் செய்கின்றனர். தங்கத்தை நினைத்த நேரத்தில் அடகு வைத்தோ, விற்பனை செய்தோ பணமாக்கிவிட முடியும் எனவேதான் தங்கம் வாங்க பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தங்கம் யாரை தேடி வரும்
தங்கம் வாங்குவதற்கும் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் லக்னத்திலும் 4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் இருக்க வேண்டும். அதே போல 1,5,9 ஆகிய திரிகோண வீடுகளிலும் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவர்களின் வீடுகளில் தங்கம் நிரந்தரமாக இருக்கும்.
யோகமான நாள்
தங்கத்தை திரி புஷ்கர யோகங்கள் அமையும் நாட்களில் வாங்கினால் அடகு கடைக்கு போகாமல் தங்கும். திரி புஷ்கர யோக அமைப்பு ஞாயிறு செவ்வாய் சனி கிழமைகளில் துவிதியை சப்தமி துவாதசி திதிகளில் விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம்,கார்த்திகை, உத்திராடம், நட்சத்திரங்களில் அதாவது மேற்கண்ட கிழமைகள், திதிகள், நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து அமையும் நாட்கள் திரிபுஷ்கர யோகம் உள்ள நாட்கள் ஆகும். இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் அடகு கடைக்குப் போகாமல் வீட்டில் தங்கம் தங்கும்.
நாள் நட்சத்திரம் பார்த்து தங்கம் வாங்குங்க
சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம்,ஹஸ்தம், அசுவினி,பூசம், அபிஜித்,ரோகிணி,உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி.
ஞாயிறு செவ்வாய் கிழமைகளில் மேஷம் விருச்சிகம் சிம்மம் லக்கினங்களில் மேலே சொல்லப்பட்ட நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் மிருகசிரீடம் ரேவதி சித்திரை அனுஷம் நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் தங்கம் வாங்க அதிர்ஷ்டம் தரும். ஒருவேளை முதலீட்டிற்காக தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தால் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.
தங்கம் எப்போது விலை குறையும்
தங்கம் விலை கடந்த விகாரி ஆண்டின் தொடக்கத்தில் விலை அதிகமாக இருந்தது. படிப்படியாக குறைந்தது. தடுமாற்றத்துடன் இருந்தது. கடந்த மாசி மாதத்தில் அதிகபட்ச விலை உயர்வை எட்டியது. சார்வரி ஆண்டில் தங்கத்தின் விலை ஆடி மாதத்தில் விலை உச்சத்தை தொட்டது ஒரு கிராம் 5000 ரூபாய்க்கு மேல் சென்று ஒரு சவரன் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்து வருகிறது.
ஐப்பசியில் தங்கம் விலை குறையும்
தங்கம் விலை இப்போது உச்சத்தில் இருந்தாலும் வரும் ஆவணி மாதம் 15ஆம் தேதிக்கு மேல் விலை குறையத்தொடங்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் படிப்படியாக குறையும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. ஐப்பசி கடைசியில் இந்த ஆண்டிலேயே தங்கம் விலை குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளது.
உச்சத்திற்கு போகும் தங்கம் விலை
தங்கம் விலை குறையத்தொடங்கும் போது நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து வாங்கி தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். ஏனெனில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் தங்கம் விலை சீராக இருந்தாலும் தை மாதத்தில் தங்கம் விலை எதிர்பாராத அளவிற்கு உயரும் மாசி மாதங்களிலும் விலை உயரக்கூடும். பங்குனி மாதத்தில் அதிக ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக இருக்கும் கணித்துள்ளது பஞ்சாங்கம்.