குரு பெயர்ச்சி 2020: தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சியான குரு பகவான்
குரு பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு பரிகார தலங்களில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின
மதுரை: குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். குரு 2021ஆம் தேதி நவம்பர் வரை மகரம் ராசியில் சஞ்சரிப்பார். குரு பெயர்ச்சி முன்னிட்டு பரிகார தலங்களில் சிறப்பு லட்சார்ச்சனைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி வரும் 20ஆம் தேதி கார்த்திகை 5ஆம் தேதி நிகழ்கிறது. கொரோனா காலம் என்பதால் பல ஆலயங்களில் நடைபெற்ற பரிகார பூஜைகள் இணையதளம் மூலம் நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
Recommended Video
குருபகவான் தனது சொந்த ராசியான தனுசு ராசியில் இருந்து சனியின் வீடான மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சனிபகவானுடன் குரு பகவான் இணைகிறார். மகரம் ராசி குரு பகவான் நீச்சமடையும் வீடு என்றாலும் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் நீச்சபங்க யோகம் கிடைக்கும்.
குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலமடையும். குரு பகவான் மகரம் ராசியில் இருந்து ரிஷபம், கடகம், கன்னி ராசிகளை பார்வையிடுகிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானின் பிரசித்தி பெற்ற தலமான ஆலங்குடி குரு பகவான் ஆலயத்தில் சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது. பரிகார யாகங்கள் முடிந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சிறப்பு அபிஷேகங்களும் பரிகார யாகங்களும் நடைபெற்றன.
சிறப்பு அபிஷேக ஆராதனை
குரு பெயர்ச்சியை முன்னிட்டு திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பெரும்பான்மையான ஆலயங்களில், குரு தட்சிணாமூர்த்தி, தென் முகமாகக் காட்சி தருவதுதான் வழக்கம். சென்னை திருவொற்றியூரில் தட்சிணாமூர்த்தி வடக்கு முகமாக வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும். அதனால் இந்த ஸ்தலம் வடகுருஸ்தலம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் யோகா தட்சிணாமூர்த்தியாக அருள்தருகிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
சனி வீட்டில் குரு பகவான்
குருபகவான் இப்போது பெயர்ச்சியாகி சனி பகவான் வீட்டில் சனியுடன் இணைகிறார். அடுத்ததாக கும்பம் ராசியும் சனியின் வீடுதான். இந்த குரு பெயர்ச்சியால் உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும். மக்கள் கைகளில் பணப்புழக்கம் குறையும். மக்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள். ஆடம்பர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மக்கள் யதார்த்தமான வாழ்க்கைக்குள் நுழைவார்கள்.
வீரர்களுக்கு மரியாதை
இந்த குரு பெயர்ச்சியால் ஆளுங்கட்சிக்கு எதிரான எண்ணங்கள் அதிகரிக்கும். ராணுவம், காவல்துறை, பலப்படுத்தப்படும். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படும். எலக்ட்ரிக்கல், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை இந்தியாவே தயாரிக்கும்.
சித்தா ஆயுர்வேதம்
ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கத் தொடங்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் பல போட்டிபோட்டு இந்தியாவில் முதலீடு செய்யும். சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பழமையான வைத்திய முறைகள் பிரபலமாகும்.
ஆசிரியர்களுக்கு பலன்
கல்வி முறை மாறும், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ஆசிரியர்கள், மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். ஆன்லைன் கல்வி முறை இப்போது பிரபலமானாலும் வரும் செப்டம்பர் 2021 முதல் வகுப்பறை கல்வி வழக்கத்திற்கு வரும்.
பூமியில் புதையல்
உணவுப்பொருட்களில் வெங்காயம், தக்காளி, கோதுமை போன்றவைகளுக்கு தட்டுப்பாடு வரும் விலை அதிகரிக்கும். பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை வீழ்ச்சியடையும். தங்கத்தின் விலை மேலும் உயரும். நிலக்கரி, தங்க சுரங்கங்கள் அதிகரிக்கும். பூமியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி, தங்கப் படிகங்கள் செயற்கைக் கோள் உதவியுடன் கண்டறியப்படும். பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலை உயரும். இது பொதுவான பலன்தான் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களை தனித்தனியாக கூறப்பட்டுள்ளன.