குருபூர்ணிமா 2021: ஆடி வெள்ளியுடன் இணைந்த பௌர்ணமி நாளில் குருவின் ஆசி பெற்றால் என்னென்ன நன்மைகள்
குருவானவர் நம்மை அறியாமையிலிருந்து விடுபட்டு நல்வழியை நமக்குக் காட்டுகிறார். புத்தர்களுக்கும் குரு பூர்ணிமா மிகவும் முக்கியமான தினமாகும். இந்த நாளில், புத்தர் தனது முதல் பிரசங்கத்தை சார்நாத்தில் வழங்கினார். சமணர்களுக்கும
மதுரை: குரு பூர்ணிமா இந்து மதத்தில் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு குரு பூர்ணிமா விழாவானது இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. வெள்ளிக்கிழமையுடன் இணைந்து வரும் பவுர்ணமி நாளில் நம்முடைய வாழ்க்கையில் வழிகாட்டிய குருவை வணங்கி அவர்களின் ஆசி பெற்றால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். குரு அருளுடன் திருவருளும் கிடைக்கும்.
சமஸ்கிருத வார்த்தையான 'குரு' இரண்டு வேர்களைக் கொண்டுள்ளது. அதாவது 'கு'என்பது 'இருள்'என்று பொருள் மற்றும் 'ரு' என்பதன் அர்த்தம் 'இருளை அல்லது அறியாமையை நீக்குதல் என்று பொருள். குருவானவர் நம்மை அறியாமையிலிருந்து விடுபட்டு நல்வழியை நமக்குக் காட்டுகிறார். நமக்கு நல்வழி காட்டிய குருவையும், ஆசிரியர்களையும், ஆன்மீகத் தலைவர்களையும் கௌரவிக்கும் நாளாக குரு பூர்ணிமா நாள் கொண்டாடப்படுகிறது.
மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள், இதில் மாதா என்றால் இடகலை என்னும் இடது சுவாசம், பிதா என்பது பிங்கலை என்னும் வலது சுவாசம். குரு என்பது சுழுமுனை சுவாசம். இந்த சுழுமுனை சுவாசத்தின் மூலமாகவே மனமற்ற தெய்வ நிலையை உணர முடியும் என்பதே சித்தர்கள் கண்ட சிவராஜ யோகதத்துவம். சுழுமுனை என்னும் சூட்சும சுவாசம் அதிகமாக நடைபெறும் ஒரு அற்புத நாளே குருபூர்ணிமா. இந்த சூழ்நிலையை சாதகமாக்கி கொண்டு குருவின் துணையோடு யோகசாதனையை தொடங்கும் அற்புத நாளே குரு பூர்ணிமா. யோக பண்பாட்டில் இந்த திருநாள் ஆனந்தமான ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது.
குரு பூர்ணிமா
குரு பூர்ணிமா என்பது முனிவர் வேத வியாசருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இந்த நன்னாளில் தான் வேத வியாசர் பிறந்ததாக நம்பப்படுகிறது, மேலும், இந்த திருநாள் வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. பூர்ண நிலையில் தன்னுள் இருக்கும் குரு தன்மையை உணர ஒவ்வோரு உயிகளுக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் குரு பூர்ணிமா.
குருவின் வாழ்த்து
குரு பௌர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள் ஆகும். குருவின் பேராற்றல் எல்லா நாளும் இருந்தாலும், குரு பூர்ணிமா தனி மனிதன் தனது குருவின் வழிகாட்டுதலுடன் தன்னை உணரும் சாதனையைத் துவங்கும் துவக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது. குருபூர்ணிமா நாளன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைவது உறுதி என வேதம் கூறுகிறது,
குரு வியாசர்
வேத வியாசர் மிகச்சிறந்த குருவாக போற்றப்படுபவர். வேதங்களை, ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியவர். உலகின் மிக நீளமான பிரம்மாண்ட காவியமான மகாபாரதத்தை எழுதியவரும் இவரே. வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர். வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி கூற அதனை விநாயகப் பெருமான் எழுதினார் என்கிறது புராணம்.
குரு பார்வை நன்மை
குருபூர்ணிமா அன்று செய்யும் பயிற்சியும், அன்று கிடைக்கும் குருவின் தொடர்பும் இப்பிறவியில் மட்டுமல்ல, பல பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும். நமது தேசத்தில் பல ஞானிகள், ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில் உயர்ந்ததாகத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில் குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள் என்பதே உண்மை.
ஞானகுரு
உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வத்தின் மீது ஆசை. அழியக் கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே, பல பாடுகள் பட்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் அழியாத சொத்தான 'ஞானத்தை' நமக்கு அளிக்க வேண்டுமென்றால், அது குருவினால் மட்டுமே முடியும். குருவால் மட்டும்தான் முடியும். எந்த விதமான காரணமும் இல்லாமல் வெறும் கருணை மாத்திரத்தால் மட்டுமே, நமக்கு ஞான செல்வத்தை அள்ளி தரும் குருநாதருக்கு 'அவ்யாஜ கருணாமூர்த்தி' என்றே ஒரு திருநாமமும் உண்டு.
நன்றிக்கடன்
தனது அக வாழ்விற்கு வழிகாட்டி தன்னையுணர வழிசெய்த அந்த தியாக தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்த கூடிய திருநாளே குருபூர்ணிமா. குரு பூர்ணிமா என்று சொல்லப்படும் வியாச பௌர்ணமி நாளில் குருவுடன் இருந்தால், தாங்கள் பெற்ற ஞான செல்வம் மேன்மேலும் வளர்ந்து தங்கள் வாழ்வு ஒளிமயமாகத் திகழும் என்பது யோக ரகசியம்.
வியாசரை வணங்க நலம் கிடைக்கும்
சிறப்பு மிக்க வேதவியாசருக்கு சென்னை வியாசர்பாடியில் சூரிய ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ரவீஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி அமைந்துள்ளது. வியாசபூர்ணிமா கொண்டாடப்படும் இன்றைய தினம் அருள்மிகு ரவீஸ்வரரையும் வேதவியாசரையும் வணங்க நலம் பல கிடைக்கும். குரு பௌர்ணமி நன்னாளில், ஆசாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது. குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சமர்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே. நமது குல ஆசாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது நம் வாழ்வில் நலம் பல சேர்க்கும்.
திரு அருள் கிடைக்கும்
ஆடி முதல் வெள்ளி உடன் இன்றைய தினம் பவுர்ணமியும் சேர்ந்து வருவது மேலும் மேலும் சிறப்பு. முதல் வாரமே ஆடி மாத வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினத்தன்று வருவதால் வீட்டில் விளக்கேற்றி அம்மனை வழிபடுவதுடன் நமக்கு வழிகாட்டியாக இருந்த குருவையும் வணங்கினால் குரு அருளுடன் திருவருளும் கிடைக்கும்.