உலக குடும்ப தினம் 2020 : குடும்ப உறவுகளை கூட்டு குடும்ப சுவையை உணர்த்திய கொரோனா வைரஸ்
நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று வாழும் இன்றைய கால 2 கே பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா, அத்தை, மாமா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, என ஒரே வீட்டில் வாழ்ந்தவர்களைப்
சென்னை: படிப்பு, வேலை என பல திசைகளில் பிரிந்திருந்தாலும் குடும்பத்தோடு ஒருநாள் இணையவேண்டும் என்பதற்காகவே கிராமங்களில் இன்றைக்கும் திருவிழாக்கள் கொண்டாடுகின்றனர். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என பல பண்டிகைகளை கொண்டாடுவதும் உறவு பாலத்தை இணைப்பதற்காகத்தான். நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று வாழும் இன்றைய கால 2 கே பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா, அத்தை, மாமா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, என ஒரே வீட்டில் வாழ்ந்தவர்களைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. குடும்ப உறவுகளின் அவசியத்தை உணர்த்தவே ஒவ்வொரு ஆண்டும் மே 15ஆம் தேதி உலக குடும்ப தினத்தை கொண்டாடுகின்றனர்.
கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தில் உலக குடும்ப தினத்தை எல்லோரும் குடும்பத்தோடு இணைந்து கொண்டாடுவதற்கான நேரம் அமைந்துள்ளது. உலக குடும்ப தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரங்களையும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குடும்ப தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சர்வதேச குடும்பங்கள் தினம் உலகம் முழுவதும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. தனிநபர்களும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் இந்த நாளை கொண்டாட தேர்வு செய்கிறார்கள். கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியாவில் உலக குடும்ப தினமும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. சமுதாயத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தியர்கள் தங்கள் குடும்பங்களுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளனர். உண்மையில், பல இந்தியர்கள் கூட்டு குடும்ப அமைப்பில் வாழ்கின்றனர். சர்வதேச குடும்ப தினத்தை நீங்கள் கொண்டாட பல வழிகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பல ஆண்டு காலத்திற்கு ஒரே குடும்பமாக வாழலாம்.
Metti Oli Serial: மெட்டி போடும்போதுதான் கணவன் மனைவியை...!
கூட்டு குடும்ப வாழ்க்கை
கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தில் உலக குடும்ப தினத்தை எல்லோருமே வீட்டிற்குள் இருந்து கொண்டாடுகிறோம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே போதும் கூட்டுக்குடும்பத்தில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வாழலாம். பல சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தும் போது, ஒரே ரத்தத்தின் ரத்தங்கள் உடன் பிறப்புகள் கூட்டுக்குடும்பமாக இன்றைக்கு வாழ முடியாதா என்ன?
விரிசல்கள் இல்லாத உறவு
ஒருவரின் ஜாதகத்தை பார்த்தாலே தெரிந்து விடும் இவர் குடும்ப உறவுக்கு சரிப்பட்டு வருவாரா மாட்டாரா என்று. குடும்ப உறவுகள் மேம்பட ஒரு பிரபல வேஷ்டி நிறுவனத்தின் விளம்பரத்தில் எழுதியிருந்ததை இன்றைய தினத்தில் பகிர்ந்து கொள்ளலாம். குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும் சில புரிதல்கள், விட்டுக்கொடுத்தல்கள் வேண்டும்.
வீண் பேச்சு விவகாரம்
நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள். எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசூக்காகக் கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்.
கர்வம் வேண்டாம்
நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்வாக நினைத்துக் கர்வப்படாதீர்கள்.
புரிந்து கொள்வது நல்லது
அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்மந்தம் உண்டோ இல்லையோ, சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள். அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள். உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளை தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
நல்ல சொற்கள்
மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான, சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாததுபோல் நடந்துகொள்ளாதீர்கள். பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள். அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன்வாருங்கள்.
குடும்ப உறவுகள்
நவகிரகங்களும் குடும்ப உறவுகளோடு தொடர்பு கொண்டவைதான். சூரியன் தந்தைகாரகன், அப்பா மகன் உறவை குறிக்கும். சந்திரன் தாய் காரகன் அம்மா மட்டுமல்லாது மாமியார், அத்தையை குறிக்கும். செவ்வாய் சகோதர காரகன், புதன் தாய் வழி உறவுகள் தாய் மாமன், வியாழன் ஆசிரியர் உறவு, பெண் ஜாதகத்தில் இரண்டாவது கணவன், சுக்கிரன் ஆண் ஜாதகத்தில் மனைவி, பெண் ஜாதகத்தில் மகள், மருமகள், அத்தை சித்தி கொளுந்தியாள், சனி அண்ணன், மச்சான், பெரியப்பா, ராகு தந்தை வழி தாத்தா பாட்டி பித்ருக்கள் கேது தாய் வழி தாத்தா பாட்டி பித்ருக்கள்
குடும்ப உறவுகள் வீடுகள்
ஜோதிடத்தில் 12 பாவங்கள் சொல்லப்படுகின்றன. இதில் முதலாம் பாவம் லக்னம் நம்மையும், இரண்டாவது பாவம் குடும்பம், 3 இளைய சகோதரம் 4 தாய் 5 வாரிசு, 6 தாய்மாமன், 7 வாழ்க்கைத்துணை, 8 ஆயுள், 9 தந்தை, 10 தொழில் 11 மூத்த சகோதரத்துவம், இளைய மனைவி, 12 விரையத்தை குறிக்கும். நம்முடைய ஜாதகத்தில் எந்த வீட்டில் எந்த கிரகம் சரியாக அமைந்திருக்கிறது என்பதை பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்து கொண்டால் போதும் குடும்ப உறவுகள் அற்புதமாக அமையும்.