ஜெயலலிதாவின் வேதாநிலையம் வீட்டு கிரகப்பிரவேசம் நடந்தது இன்றைக்குதானாம் - இன்விடேசன்
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் பங்களாவின் கிரகப்பிரவேச பத்திரிக்கை இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது வீடு கிரகப்பிரவேசம் நிகழ்ந்து இன்றோடு 48 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஜெயலலிதா இருந்தவரைக்கும் தமிழகத்தின் அதிகார மையமாக இருந்த இடம் வேதா நிலையம்தான், அதிமுகவினரின் தலையெழுத்து அங்குதான் தீர்மானிக்கப்படும். இரும்புக்கோட்டையாக இருந்த அந்த வீடு விரைவில் நினைவிடமாக மாற்றப்பட உள்ளது.
சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதுமே போயஸ்கார்டன் என்றாலே நினைவுக்கு வருபவர் ஜெயலலிதாதான். கடந்த 44 ஆண்டுகளாக போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையம் வீட்டில் வசித்து வந்தார் ஜெயலலிதாதான். ஜெயலலிதா வீட்டிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் சென்றுள்ளனர். பிரதமர் மோடியும் வேதாநிலையத்திற்கு சென்று விருந்து சாப்பிட்டிருக்கிறார்.
கங்கை நதியோரம், 10 லட்சம் ஹெக்டேரில் மூலிகை தோட்டம்.. ரூ.4000 கோடி ஒதுக்கீடு- நிர்மலா அசத்தல்
வேதா நிலையம் வீட்டிற்குள் சென்றவர்களுக்கு அந்த மாளிகையின் பிரம்மாண்டம் தெரியும் வாசலில் மிகப்பெரிய பலா மரம், அழகிய பூந்தோட்டம், மிகப்பெரிய நீச்சல் குளம், 20க்கும் மேற்பட்ட அறைகள் அவற்றில் ஒவ்வொரு அறையிலும் ஏசி என காண்போரை மிரள வைக்கும். தனது தாயாரின் நினைவாகவே வேதாநிலையம் என்று பெயர் சூட்டினார் ஜெயலலிதா.
வேதா நிலையம்
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் கிரகப்பிரவேசம் 48 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1972ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி நடந்துள்ளது. இந்த வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சி அழைப்பிதழ் இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜெ விற்கு பிடித்த பங்களா
ஜெயலலிதாவின் அடையாள இடமான போயஸ் கார்டன் வீட்டில் இருப்பதையே அவர் உயிரோடு இருந்த காலத்தில் மிகவும் விரும்பினார். போயஸ் கார்டன் வீட்டிற்கு அடுத்தபடியாக அவர் விரும்பி ஓய்வெடுக்கும் இடம் கொடநாடு பங்களா. தேர்தல் பிரச்சாரம், வழக்கு விசாரணை என்று கட்சிப் பணிக்காகவோ, அரசுப் பணியாகவோ வெளியூர் அல்லது வெளிமாநிலம் சென்றாலும் ஒரு இரவு கூட வெளியில் தங்கியதில்லை. பெங்களூர் சிறையில் இருந்த போது தனது வீட்டை அதிகம் மிஸ் செய்வது போல உணர்ந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் ரசனை
கிரகப்பிரவேச அழைப்பிதழ் மிக எளிமையாகவும், அதே நேரம் மிகுந்த ரசனையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு பிடித்த தெய்வம் விநாயகர். தன் வீட்டின் வாசலில் விநாயகரை கும்பிட்டு விட்டுதான் எங்கேயும் கிளம்புவார். அவரது பத்திரிக்கையில் கைவினைத் திறன்மிக்க இரு கதவுகள் திறந்தவுடன் அழைப்பு வாசகங்கள் அமைந்திருக்குமாறு உள்ள இந்த அழைப்பிதழின் முகப்பில் விநாயகர் படம் பொறிக்கப்பட்டுள்ளது.
விருந்தும் கச்சேரியும்
கிரகப்பிரவேசத்துக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் இடம் தேடி அலையக்கூடாது என்பதற்காக, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு பின்புறம் - ரயில்வே தேர்வாணைய அலுவலகத்துக்கு அருகில் கதீட்ரல் சாலை என மிக விளக்கமாக இதில் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
போயஸ்கார்டன் வீடு கிரகப்பிரவேசத்தை முன்னிட்டு மாலை விருந்தின்போது பிரபல இசைக்கலைஞர் சிட்டி பாபுவின் வீணைக் கச்சேரி நடப்பதாகவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுகவின் இரும்புக்கோட்டை
தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவியாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் வீடு அவர் இருந்தவரைக்கும் தமிழகத்தின் அதிகார மையமாக இருந்தது. வேதா நிலையத்தில்தான் அதிமுகவினரின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும். இரும்புக்கோட்டையாக இருந்த இடம் இப்போது யாருமற்ற இடமாக வாழ்ந்து கெட்டவர்கள் வீடு என்பதற்கு சாட்சியாக நிற்கிறது. ஒரு வீட்டில் நூற்றாண்டுகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். வேதா நிலையத்தில் ஜெயலலிதா 44 ஆண்டுகள் இருந்தவரைக்கும் சினிமா, அரசியல் இரண்டிலும் ஜெயித்து ராணியாகவே வாழ்ந்து மறைந்தார்.
அதிமுகவினரின் கோவில்
சென்னைக்கு சென்று வரும் அதிமுகவினர் அதிகம் பார்த்து வருவது அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலிதா நினைவிடம், எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டவீடு, தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லம். 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் உயிரிழந்த பின்னர் வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டன. அதற்கான பணிகளை அதிமுக அரசு சத்தமில்லாமல் செய்து வருகிறது. அரசு நினைவிடமாக மாற்றப்பட்ட பின்னர் வேதா நிலையத்திற்குள் சாமானிய மக்களும் சாதாரணமாக சென்று பார்க்க முடியும்.