திருமலையில் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் - ஏழுமலையானை எப்போது தரிசிக்க முடியும்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் ஏழுமலையானையும் மலையப்ப சுவாமியையும் தரிசனம் செய்ய முடியாது. 8ஆம் தேதி முதல் குறைந்த அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை 4ஆம்தேதி முதல் 6ஆம்தேதி வரை 3 நாட்களுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வரும் 8ஆம்தேதி முதல் வழிபாட்டு தலங்களில் குறைந்தளவு பக்தர்களை அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார சாமி திருமலை திருப்பதி ஏழுமலையான் என்றால் மிகையில்லை. தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்து விட்டு பல லட்சம் ரூபாய்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்திவிட்டு செல்வார்கள். தினசரியும் விழாக்கோலம்தான். புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பத்துநாட்கள் பிரம்மோற்சவத்தை காண அந்த பிரம்மனும் தேவாதி தேவர்களும் திருமலைக்கு வருகின்றனர் என்பது ஐதீகம்.
நாடு முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியதை தொடர்ந்து, கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. நித்திய பூஜைகள் அனைத்தும் வழக்கம்போல நடைபெறுகிறது. அந்த பூஜைகளை தொலைக்காட்சி மூலம் பக்தர்கள் கண்டு தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.
வளம் தரும் வைகாசி புதன்கிழமை பிரதோஷம் - இந்த ராசிக்காரங்க விரதம் இருக்கணும்
பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்
ஜேஷ்ட மாதத்தையொட்டி சீனிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி, விஸ்வ சேனாதிபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. மேலும் சீனிவாசமூர்த்திக்கு சகஸ்ர கலசாபிஷேகம் நடந்தது. நாளை முதல் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் சதுர்த்தசி, பௌர்ணமி, பிரதமை ஆகிய மூன்று நாட்கள் ஜேஸ்டாபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு நாளை 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது.
மலையப்பசுவாமிக்கு அபிஷேகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் சுவாமி சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதமாக உற்சவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் உற்சவத்தை ஜேஷ்டாபிஷேகம் எனப்படும்.
மூலிகை திரவியங்கள்
ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசங்கள் அகற்றப்பட்டு பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்படும். இதில் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெறும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த அபிஷேகங்களை காண இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதியில்லை.
ஏழுமலையான் தரிசனம்
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வரும் 8ஆம்தேதி முதல் வழிபாட்டு தலங்களில் குறைந்தளவு பக்தர்களை அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளது. தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தர்கள், முன்கூட்டியே தேவஸ்தான நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, ஒப்புகை சீட்டு பெற்று வர வேண்டும் என்றும், அலிபிரி செக் பாயிண்ட் பகுதியில் அந்த ஒப்புகை சீட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகுதான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏழுமலையானை காண பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.