மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய பழைய எண்ணெய் பயோடீசல் ஆக மாற்றம்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய பழைய எண்ணெய் பயோ டீசல் ஆக மாற்றுவதற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை: மீனாட்சியம்மன் கோவிலில் பிரசாதங்கள் தயாரிக்க பயன்படுத்திய பழைய எண்ணெயை பயோ டீசல் தயாரிக்க முடிவு செய்து முதல் கட்டமாக 600 லிட்டர் எண்ணெய் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாணிக்க மூக்குத்தி அணிந்து அருள்பாலிக்கும் மீனாட்சிம்மன் அரசாளும் மதுரையில் தினந்தோறும் திருவிழாதான். மீனாட்சியம்மனை வழிபட நாடு முழுவதிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா முழு ஊரடங்கு தளர்விற்கு பின் கோவில் திறக்கப்பட்டு தொடர்ந்து லட்டு வழங்கப்பட்டு வருகிறது.
லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரசாதம் தயாரிப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை எரிபொருள் தயாரிக்க வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது.
மதுரையில் இந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும் மீனாட்சியம்மன் கோவிலில் தற்போது இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக ஒரு முறை பயன்படுத்திய 600 லிட்டர் எண்ணெய் பயோ டீசலாக கேன்களில் சேகரிக்கப்பட்டது.
ஹோட்டல், உணவு தொழிற்சாலைகள், மால்கள் என அதிகளவு எண்ணெய் பயன்படுத்தக் கூடி இடங்களில் மீண்டும், மீண்டும் அதனை பயன்படுத்தும் போது புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை பயோ டீசலுக்கு கொடுக்க முடிவு செய்து பல இடங்களில் திட்டம் அமலுக்கு வந்துவிட்டது.
இத்திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் இதுவரை 92 ஆயிரம் லிட்டர் சேகரிக்கப்பட்டு, அதில் 75 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் எரிபொருளாக மாற்றப்பட்டுள்ளது என மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.