மாசி மகம் தெப்ப உற்சவம் கோலாகலம் : கொரோனா அச்சத்தை மீறி பக்தர்கள் குவிந்தனர்
மாசி மகம் திருவிழா மற்றும் மாசி பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தெப்ப உற்சவம், தீர்த்தவாரி கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய அச்சம் எதுவும் இன்றி ஆலயங்களில் பக்தர்கள் குவிந்தன
சென்னை: கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் கூட்டமாக ஒரு இடத்தில் கூட வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தினாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவத்திலும், மாசி பவுர்ணமி தெப்பத்திருவிழாவிலும் ஏராளமான பக்தர்கள் பக்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருமலை ஏழுமலையான் கோவில் முதல் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணபெருமாள் கோவில் வரை மாசி பவுர்ணமி தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
மாசி பவுர்ணமிக்கு தனி சிறப்பு உண்டு. மகம் நட்சத்தில் சந்திரன் சஞ்சரிக்க கும்பம் ராசியில் சூரியன் சஞ்சரிக்க கோலகலமாக மாசி மகம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு மாசி மகம் திருவிழா முதல் நாளும், மாசி பவுர்ணமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவன் கோவில்களிலும் பெருமாள் கோவில்களிலும் நடைபெற்ற விழாவில் உற்சவமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
மாசி மகம் நாளை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் அழைக்கின்றனர். மாசி மகம் நீர் நிலைகளின் மேன்மையை போற்றுகிறது. இதன்காரணமாகவே உற்சவமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. பக்தர்களும் புனித நீராடுகின்றனர். மாசி மகம் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாகும். இந்த நன்னாளில் புனித தலங்களை தரிசிப்பதும், புண்ணிய தலங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும்.
தீர்த்தவாரி உற்சவம்
மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மாதவ பெருமாள் கோவில், காரணீஸ்வரர், வெள்ளீஸ்வரர்,விருப்பாக்ஷீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் ஆலயங்களில் உற்சவர்களை மெரீனா கடற்கரைக்கு கொண்டு வந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். பலர் கடலில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்தனர்.
மாசி மகம் தீர்த்தவாரி
மாசிமகத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவன் கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனங்களில் புறப்பட்டு, மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர். கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் தீர்த்தவாரி
மாமல்லபுரத்தில் மாசிமகத்தை முன்னிட்டு தலசயன பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. கோயிலில் இருந்து, வீதி உலா புறப்பட்ட தலசயன பெருமாள் புஷ்கரணி தெப்பக்குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஏராளமான பக்தர்கள் குளத்தின் படிகட்டுகளில் நின்று கற்பூர ஆராதனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
வலம் வந்த ராமர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த ராமர் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் கோலகலமாக நடைபெற்றது. ராமர், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக மாடவீதியில் உலா வந்தார். ஐந்து முறை தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சுவாமிக்கு கற்பூர ஆராதனை காண்பித்து கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
உலா வந்த மலையப்பசுவாமி
மாசி மாத தெப்ப உற்சவம் திருமலை ஏழுமலையான் கோவிலில் 5 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 5ஆம் தேதி சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தெப்பத்தில் உலா வந்தார். 6ஆம் தேதி ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணசாமி தெப்ப உற்சவம் நடைபெற்றது. 7ஆம் தேதி முதல் நேற்று 9ஆம் தேதி வரை மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தெப்பத்தில் பவனிவந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சமின்றி தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.