மாசி மாதம் ராசி பலன் 2021: இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும் அதிர்ஷ்டமான மாதம்
மாசி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியைப் பொறுத்தும் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகாரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்னென்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
சென்னை: மாசி மாதம் கும்பம் மாதம். தமிழ் காலண்டரில் 11வது மாதம். இந்த மாதம் முழுவதும் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்வார். கூடவே புதனும், சுக்கிரனும் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கின்றனர். மாசி மாதத்தில் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். இந்த மாசி மாதத்தில் 13-02-2021 முதல் 13-03-2021 வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலம் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
மாசி மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால், மகர ராசியில் உள்ள புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். பிப்ரவரி 21ஆம் தேதி செவ்வாய் மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். ராகு உடன் செவ்வாய் இணைகிறார். சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சனியை விட்டு விலகி சூரியனுடன் இணைகிறார் சுக்கிரன். கூடவே புதன் மாத இறுதியில் இடப்பெயர்ச்சி அடைந்து சூரியன் சுக்கிரனுடன் இணைகிறார்.
மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் வரும், பண வரவு அதிகரிக்கும் என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்று பார்க்கலாம்.
மிதுனம்
புத்திசாலித்தனம் கொண்ட புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே. இந்த மாதம் உங்கள் ராசி நாதன் வக்ர நிவர்த்தியாகி ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். சூரியனும் சுக்கிரனும் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். செவ்வாய் 12ஆம் வீட்டில் ராகு உடன் இணைவதால் மருத்துவ செலவுகள் வரும். வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். சகோதரர் சகோதரிக்கு இடையே பிரச்சினை ஏற்படும். குரு அஷ்டமத்தில் இருப்பதால் கவனமும் நிதானமும் தேவை. குடும்ப உறவுகளிடையே பேச்சில் நிதானம் தேவை. உங்களின் செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். கோவில் திருவிழாக்களில் பங்கேற்கவும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் அதிக கவனம் செலுத்தவும். எதிர்பார்த்த பணம் தாமதமாக கிடைக்கும். தந்தை வழி உறவுகள் மூலம் வரன் அமையும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வழிபட நன்மைகள் நடைபெறும். சத்ரு சம்ஹார ஹோமத்தில் பங்கேற்கவும். பயம் பதற்றம் நீங்கும். மன நிம்மதி அதிகரிக்கும். இந்த மாதம் சுப காரியம் செய்வதில் தடைகள் நீங்கும். புதன்கிழமைகளில் பாசிப்பயறு நெய் உருண்டை தானம் செய்யவும். துளசியை பறித்து பெருமாள் படத்திற்கு அர்ச்சனை செய்யவும். துளசி மாலை சாற்றி பெருமாளை வணங்கவும்.
கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, மாசி மாதத்தில் சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பேச்சை குறைத்து நிதானமாக வேலை செய்யவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமும் நிதானமும் அவசியம். சுக்கிரனும் எட்டாம் வீட்டில் மறைவதால் உங்களுக்கு கவனமும் பொறுமையும் அவசியம். விலை உயர்ந்த நகை பணத்தை பத்திரப்படுத்துங்கள். யாருக்கும் பணம் கொடுப்பதாக சொல்லி வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பெரிய அளவில் முயற்சி செய்ய வேண்டாம் பணம் முதலீடுகளை தவிர்த்து விடவும். சகோதர சகோதரிகளிடம் பேசும் போதும் கவனம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. குரு பார்வை இருந்தாலும் சுக்கிரன், சூரியன், மறைவதால் சுப முயற்சி செய்வதை தவிர்த்து விடவும். வியாபாரிகள், தொழில் அதிபர்கள் பெரிய அளவில் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்.
நண்பர்கள் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம் வீண் பழிகளில் இருந்து தப்பித்துக்கொள்ளவும். அவசரமும் நிதானமும் பொறுமையும் தேவை. விழிப்புணர்வு நிச்சயம் தேவைப்படும் இல்லாவிட்டால் பண இழப்பு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என்ற கவலை வரும் சிக்கல்கள் வராமல் இருக்க குல தெய்வ கோவிலுக்கு செல்லவும். எந்த முக்கிய முடிவையும் ஆலோசனைக்கு பின் முடிவு செய்யவும். மகா சிவராத்திரி தினத்தில் குல தெய்வ வழிபாடு செய்யவும் நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, மாசி மாதத்தில் சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு வந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். நினைத்த காரியம் நிறைவேறும். உங்களின் திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செவ்வாய் பத்தாம் வீட்டில் ராகு உடன் இணைவது சிறப்பு. தொட்டது துலங்கும் பயம் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும். உறவுக்குள் இருந்த சிக்கல்கள் நீங்கும். நிறைய நம்பிக்கைகள் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். தலைமைப் பதவி தானாக தேடி வரும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள். கசப்பான சம்பவங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். குடும்ப சண்டைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். எதிர்பார்த்த உதவி தானாக தேடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுக்கிரனும் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்களை பார்வையிடுவதால் திருமணம் சுப காரியம் கை கூடி வரும். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் பள்ளி, கல்லூரிகளில் உங்களின் திறமை பளிச்சிடும். பெரியவர்கள் சொல்வதை கேட்கவும். சொந்த ஊரில் தொழில் தொடங்குவதற்கான யோகம் வந்து விட்டது. தொழிலை விரிவு படுத்துவீர்கள். கடவுளின் அருளாசி கிடைக்கும். ரத சப்தமி நாளில் சூரிய பகவானை வணங்கி வழிபட நன்மைகள் நடைபெறும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்.
கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். சுக்கிரன், புதனும் ஆறாம் வீட்டில் மறையும் கால கட்டம் என்பதால் எதிலும் பொறுமையும் நிதானமும் அவசியம். எந்த செயலை செய்வதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை நிதானமாக செயல்படுவது அவசியம். குரு பார்வை கிடைத்தாலும் சூரியனும், சுக்கிரனும் மறைவதால் கவனம் அவசியம். வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். இருக்கிற வேலையை தெளிவாக கவனமாக செய்யவும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளால் சிக்கல்கள் வரலாம். வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். உடன் வேலை செய்பவர்களிடம் எந்த வம்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடவும். திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் பொறுமையாக இருப்பது அவசியம். அவசரப்பட வேண்டாம். மாணவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் அக்கறை காட்டவும். தேவையற்ற நட்புகளை தவிர்த்து விடவும். வியாபாரிகளுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள் வரலாம் கவனம் தேவை. இந்த மாதம் கண் எரிச்சல் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். சூரிய நமஸ்காரம் செய்யவும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.