தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 16 தெய்வீக திருமணங்கள் பார்த்தால் திருமண வரம் கிடைக்கும்
வேலூர்: ஷண்மத பீடமாக திகழ்ந்து வரும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஷண்மத தெய்வங்களை போற்றி ஆராதிக்கும் விதத்தில் 16 திருக்கல்யாண மஹோத்சவமும் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 'சஹஸ்ர கலசாபிஷேகமும்', ஸ்ரீ ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்துடன் பல்வேறு வைபவங்கள் ஸ்வாமிகளின் அருளானைப்படி வருகிற 13.03.2019 முதல் 17.03.2019 வரை நடைபெறுகிறது. 600க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
ஒரு திருமணத்தை நடத்துவதே சாதாரண மக்களுக்கு சற்றே சிரமமான காரியம்தான். தெய்வங்களுக்கு நடைபெறும் திருமணத்தைக் காண கண்கோடி வேண்டும். ஒரு திருமணம் அல்ல 16 தெய்வீக திருக்கல்யாணங்களை காண்பது மகிழ்ச்சிகரமான அனுபவம். தெய்வ திருமணங்கள் என்பவை இறைவன் மற்றும் இறைவிக்கு நடக்கும் திருமணமாகும். இந்து சமயம், கிரேக்க சமயம் போன்றவற்றில் தெய்வங்களுக்கு திருமணங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் இந்து சமயத்தில் தெய்வத் திருமணங்கள் விழாவாக கொண்டாடப்படுகின்றன.
இந்து சமயம். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இந்து சமய கடவுள்கள் தம்பதிகளாக உள்ளனர். சிவபெருமான் - பார்வதி, திருமால் - திருமகள், முருகன் - வள்ளி, தெய்வானை, விநாயகர் - சித்தி புத்தி இவர்களது திருமணங்கள் தெய்வத் திருமணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தெய்வீக திருமணங்கள்
இந்த தெய்வீக திருமணங்கள் பற்றி திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், இந்து சமயத்தில் திருக்கல்யாணம் என்ற பெயரில் தெய்வங்களுக்கு திருமணங்கள் செய்விக்கும் திருவிழா நடைபெறுகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடிய குலதெய்வத்தை போற்றும் வகையிலும் குலதெய்வம் என்ன என்பது தெரியாமல் தலைமுறைகள் கடந்து வாழும் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெறும் விதத்திலும் நடைபெறுகிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தன்வந்திரி பீடம் பற்றியும், தெய்வீக திருமணங்களின் சிறப்புக்களைப் பற்றியும் எடுத்துக்கூறினார்.
தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
வேலூர் மாவட்டத்தில் மலையும் மலை சார்ந்த இடத்தில், மூலிகை வனத்தில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில், உலக மக்களின் நோய் தீர்க்கும் விதமாக 75 க்கும் மேலான விக்கிரகங்கள் உள்ளன. 7 அடி உயரமுள்ள தன்வந்திரி மூலவரை கரிக்கோல ஊர்வலமாக 2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் இந்தியாவின் பல இடங்களுக்கு கொண்டு சென்று நூற்றுக்கும் மேற்பட்ட வைணவ, சைவ கோவில்களிலும் திருமண மண்டபங்கள், பொது இடங்கள்,சமூக கூடங்களில் உலக மக்கள் பங்கு பெரும் வகையில் வைத்து 147 தன்வந்திரி ஹோமங்கள் நடத்தியும்,ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட 67 வைணவ ஸ்தலங்களுக்குச் சென்று சிறப்பு ஆராதனை நடத்தியுள்ளதால் தன்வந்திரி பீடத்திற்கு திவ்ய தேச அபிமான ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.
லட்சக்கணக்கான பக்தர்கள்
2 லட்சம் கிலோ மீட்டர் தன்வந்திரி மூலவரை கரிக்கோலம் கொண்டு சென்று, 46 லட்சம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி லிகித ஜப மந்திரங்களை பல்வேறு மொழிகளில் பெற்று, அம்மந்திரங்களை யந்திரமாக கர்ப கிரகத்தின் கீழ் வைத்து மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பிரதிஷ்டை செய்து 15.12.2004ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அனைத்து ஜீவராசிகளையும் நோய், நொடி இல்லாமலும் சிறந்த மனநலத்துடன், காக்கும் தன்வந்திரி பகவான் அமிர்தகலசம், கையில் சீந்தல் கொடியுடன் ஸ்டெதாஸ்கோப் அணிந்து 7 அடியில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருக்கல்யாணம் யாகங்கள்
இங்கு பிரதிஷ்டை செய்துள்ள நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவான் மற்றும் 75 பரிவார மூர்த்திகள், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் அருளுடன் தன்வந்திரி பீடத்தின் 15ம் ஆண்டு விழா, ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா முன்னிட்டு நடைபெறும் திருக்கல்யாண மஹோத்சவங்கள், யாகங்கள், பூஜைகள், ஆராதனைகள், பக்தர்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறவும், பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணவும், செய்தொழிலில் ஏற்படும் முடக்கம் அகலவும், நட்பினால் ஏற்படும் விரையம் குறையவும், பிள்ளைகள் வழியில் ஏற்படும் தொல்லைகள் இடர்பாடுகள் அகலவும், ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்றவும், திருமணம், குழந்தை பாக்கியம் நிரந்தர வேலை ஏற்படவும், குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கவும், தீராத நோய்களுக்கு தீர்வு கிடைக்கவும், கல்வி, தொழில் விருத்தி கிடைத்து வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், சௌபாக்யங்கள் பெறவும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகள் நன்மை அடையவும், நடைபெற உள்ளது.
பந்தக்கால் முகூர்த்தம்
திருமண விழாவிற்காக 22.02.2019 மாசி மாதம் 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை மங்கள இசை முழங்க மஹா கணபதி ஹோமத்துடன் பந்தகால் முகூர்த்தம் நடைபெறுகிறது. 13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை முப்பத்தி முக்கோடி தேவர்களின் ஆசி வேண்டியும், சகல விதமான தோஷங்கள் நீங்கவும், சகல விதமான ஜீவராசிகளின் நலன் வேண்டி கோமாதா திருக்கல்யாணமும், கணவனுடைய ஆயுள் தீர்க்கம் வேண்டியும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், சௌபாக்யங்கள் கிடைக்க வேண்டியும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்க வேண்டி 108 பெண்கள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும், வேத மாதாவின் அருள் வேண்டியும், வேதங்களை போற்றி ஆராதிக்கும் விதத்திலும், அந்தணர்களின் வாழ்வு சிறக்கவும் சமஷ்டி உபநயனமும் நடைபெறுகிறது.
துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம்
14.03.2019 மாசி மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 1.30 வரை ஒவ்வொருவருக்கும் மஹாவிஷ்ணு - மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெற துளசி தேவி - நெல்லிராஜா ( துளசி செடி - நெல்லி செடி) திருக்கல்யாணமும், பெண் சாபங்கள் நீங்கவும், குலதெய்வ தோஷங்கள் அகலவும், பாலாவின் பரிபூரண அருள் கிடைத்து குடும்பங்களில் சுபிட்சம் ஏற்படவும், சுப காரியங்கள் நடைபெறவும் 108 கன்னிபெண்கள் பங்கேற்கும் கன்யா பூஜை நடைபெறுகிறது.
வேம்பு மரம் அரச மரம் திருக்கல்யாணம்
15.03.2019 பங்குனி மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 2.00 வரை இயற்கை வளம் வேண்டியும், மழை வேண்டியும், விவசாய பெருமக்கள் நலம் வேண்டியும், கிராம தேவதைகளின் அருள் வேண்டியும், அனைத்து விதமான தடைகள் நீங்கவும் நிம்மலக்ஷ்மி - அஸ்வத் ராஜா (வேப்ப மரம் - அரச மரம்) திருக்கல்யாணமும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், சௌபக்யங்கள் கிடைக்கவும், குடும்பங்கள் சிறந்து விளங்கவும், பல்வேறு விதமான சாபங்கள் விலகவும், ஆண் - பெண்கள் ஒருவரை ஒருவர் புரிந்த்கொண்டு மகிழ்ச்சியாக வாழவும் 108 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜை நடைபெறுகிறது.
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம்
16.03.2019 பங்குனி மாதம் 2ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 முதல் 1.00 மணி வரை நோய் நொடிகள் நீங்கவும், ஆரோக்யமான வாழ்கை வாழவும், பயங்கள் அகலவும், குடும்பங்கள் மேன்மை அடையவும், மனரீதியான நோய்களிலிருந்து விடுதலை பெறவும், போன்ற பல்வேறு காரணங்களுக்காக 600க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞ்சர்கள் பங்கேற்கும் நாதசங்கம நிகழ்ச்சியுடன் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி யாகத்துடன் சஹஸ்ர கலச திருமஞ்சனம் நடைபெற்று ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாசருடைய பரிபூரண அருள் வேண்டி மாலை 5.00 மணி முதல் 7.30 வரை ஸ்ரீ ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் வேத பாராயணத்துடன் நடைபெறுகிறது.
ஷோடச திருக்கல்யாண மஹோத்சவம்
17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை பக்தர்கள் முன்னிலையில், ஷண்மத தெய்வங்களுக்கு ஒரே மேடையில் ஒரே நேரத்தில் ஷண்மத பீடத்தில் ஷோடச (16) திருக்கல்யாண மஹோத்சவம் திருமண வரம் வேண்டியும், இல்லறம் சிறக்கவும், இறைவன் இறைவி அருள் பெறவும்.
1. நான்முகன்- நான்மகள் (ஸ்ரீ ப்ரஹ்மா - சரஸ்வதி) திருக்கல்யாணம்.
2. காணாபத்யம் : ஸ்ரீ சித்தி புத்தி சமேத விநாயகர்.
சைவ சமய திருக்கல்யாணங்கள்
3. ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர்.
4. ஸ்ரீ அனகாதேவி சமேத தத்தாத்ரேயர்.
5. ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத தர்மசாஸ்தா.
6. ஸ்ரீ சித்ரலேகா சமேத குபேரர்.
7. ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண பைரவர்.
வைணவ சமய திருக்கல்யாணங்கள்
8. ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள்.
9. ஸ்ரீ ராஜ்யலக்ஷ்மி செஞ்சுலக்ஷ்மி சமேத நரசிம்மர்.
10. ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர்.
11. ஸ்ரீ லக்ஷ்மி சமேத ஹயவதன பெருமாள்.
12. ஸ்ரீ ரமா சமேத சத்யநாரயணர்.
13. ஸ்ரீ விஜயலக்ஷ்மி சமேத சுதர்சன பெருமாள்.
14. சௌரம் : சூர்யனை போற்றும் விதமாக ஸ்ரீ சீதாலக்ஷ்மி சமேத பட்டாபிஷேக ராமர் திருக்கல்யாணம்.
15. ஸ்ரீ சாக்தம் : ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி சமேத சரபேஸ்வரர் (ஸ்ரீ பைரவி சமேத பைரவர்).
16. கௌமாரம் : ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ணியர்,16 தெய்வ திருமணங்கள் நடைபெறுகிறது.
புனித தீர்த்தங்கள்
இவ்விழா சிறப்பாக நடைபெற திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமருகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளையார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங் குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்திமுற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மணமுடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெண்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடைமருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத்துறை, பந்தநல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளுர் சக்தி கோவில், திருமணமங்கலம் விசாலேஸ்வரன் கோவில், தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி போன்ற திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெறும் இத்தலங்களுக்கும், இதர ஷண்மத ஸ்தலங்களுக்கும், பல்வேறு புனித ஸ்தலங்களுக்கும் "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் யாத்திரை சென்று, இவ்வைபவங்களின் மஹோத்சவ பத்ரிகையை இறைவன் இறைவியிடம் வைத்து, பிரார்த்தித்து சிறப்பு ஆராதனைகள் செய்து, அங்குள்ள புனித தீர்த்தங்கள், கற்கள், மூலிகை சமித்துக்கள், மூலிகை வேருகள், ஸ்தல விருட்சங்களின் புஷ்பங்கள், காய்கள், இலைகள் கொண்டு நடைபெற உள்ள வைபத்தில் அனைவரும் கலந்துகொண்டு இறையருள் பெற்று, ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற தன்வந்திரி முரளிதர ஸ்வாமிகள் அழைப்பு விடுத்துள்ளார். இந்த இறைப்பணியில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.