குருப்பெயர்ச்சி: குருவித்துறை, ஆலங்குடியில் மே28ல் சிறப்பு பூஜை
மதுரை/ திருவாரூர்: குருப்பெயர்ச்சியை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள குரு பரிகாரத்தலங்களில் மே 28ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும் என ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு வரும் 28-ஆம் தேதி இரவு 9.18 மணிக்கு இடம் பெயர்கிறார். இதையடுத்து குருவித்துறை வைகை ஆற்றங்கரையில் உள்ள சித்திரவல்லபப் பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் உள்ள குருபகவான் சன்னிதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
குருபெயர்ச்சியை முன்னிட்டு வரும் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்குகிறது. லட்சார்ச்சனையானது திங்கள்கிழமை (மே 27) இரவு 8 மணிக்கு நிறைவடைகிறது. லட்சார்ச்சனை பூஜையில் பங்கேற்க விரும்புவோர் ரூ. 300 மற்றும் ரூ. 500 கட்டணத்தை திருக்கோயிலில் நேரடியாகச் செலுத்தி ரசீது பெறலாம். தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு பூஜை செய்யலாம் என திருக்கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் தெரிவித்துள்ளார்.
மேலும் குருப்பெயர்ச்சி தினமான செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் பரிகார லட்சார்ச்சனை பூஜை நடைபெறும். பின்னர் மாலை 6 மணிக்கு பரிகார மஹாயாகம் தொடங்கி இரவு 9.18 மணி வரை நடைபெறும். அதன்பின்னர் குருபகவானுக்கு திருமஞ்சனம் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
ஆலங்குடி குருபகவான்
தமிழகத்தில் குரு பரிகார ஸ்தலமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடியில் உள்ள குரு பகவானை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசித்து வருகின்றனர், இக்கோவிலில் குரு பகவான் தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தகைய பெருமைகள் வாய்ந்த இக்கோவிலில் குருபெயர்ச்சி விழா வருகிற 28- ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி கோவிலில் குருபெயர்ச்சி முதல் கட்ட லட்சார்ச்சனை விழா வருகிற 16 - ந்தேதி முதல் (வியாழக்கிழமை) தொடங்கி 23 - ந்தேதி வரை நடக்கிறது.
குருப்பெயர்ச்சி தினமான 28ம் தேதி குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. மேலும் பால், மஞ்சள், இளநீர், தேன், உள்ளிட்ட அபிஷேகம் நடக்கிறது. அதைதொடர்ந்து குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
பின்னர் 2-வது கட்ட லட்சார்ச்சனை வருகிற 30- ந் தேதி முதல் (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6- ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது.
லட்சார்ச்சனை கட்டணம் ரூ.400 ஆகும். லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குரு பகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படுகிறது.