சனிப்பெயர்ச்சி : 2020ல் யாருக்கு ஏழரை சனி தொடங்குது யாருக்கு ஏழரை சனி முடியுது - பரிகாரங்கள்
சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் விருச்சிகம் ராசிக்கு ஏழரை சனி முடிகிறத
மதுரை: நவகிரகங்களில் சனி என்றாலே எல்லோருக்கும் பயம்தான். காரணம் சனிபகவான் கொடுக்கும் சங்கடங்கள் அப்படிப்பட்டது. நல்லவர்களுக்கு அவரே அள்ளியும் கொடுப்பார். அவர் நீதிமான் என்பதால் ஆணவக்காரர்களின் தலையில் தட்டி அமர வைத்து விடுவார். எனவேதான் நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் எதை நினைத்தும் பயப்பட தேவையில்லை. தசாபுத்திகளும் சரியாக இருந்தால் கிரகங்களின் கோச்சார ரீதியான சஞ்சாரமும் யாரையும் பாதிக்காது. 2020ஆம் ஆண்டு ஏழரை சனி யாரை அதிகம் பாதிக்கும், யாருக்கு சங்கடம் தரும் ஏழரை சனி முடிந்து யாருக்கு சந்தோஷம் வரப்போகிறது என்று பார்க்கலாம். பரிகாரங்களையும் பார்க்கலாம்.
சனி பகவான் தற்போது தனசு ராசியில் சஞ்சரிக்கிறார். திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிபெயர்ச்சி 2020ஆம் ஜனவரி மாதமே நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். ஏழரை ஆண்டு காலமாக சனியின் பிடியில் சிக்கியிருந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. அதே நேரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. என்னதான் ஏழரை சனி காலம் என்றாலும் சனிபகவான் அவருடைய சொந்த வீடான மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் எனவே அதிகம் நன்மைகளே நடைபெறும்.
மகரம் ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. மகரம் ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் தனுசு, மகரம், கும்பம், ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த படிப்பினையை கற்றுத்தரப்போகிறார் சனி பகவான். ஏழரை சனியின் பிடியில் இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் பாதிப்புகள் என்று பார்க்கலாம். சனிபகவான் நீதிமான் அவர் தவறு செய்பவர்களையும் அநியாயம் செய்பவர்களயும்தான் தண்டிப்பார். நல்லவர்களுக்கு நல்லதே செய்வார் எனவே தவறு செய்யாதவர்கள் தடுமாற வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனிபகவானின் பிடியில் இருந்து அல்லல்பட்டு துயரப்பட்டு வந்திருப்பீர்கள். இனி 2020 ஜனவரி முதல் உங்கள் துயரங்கள் குறையும், சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது. இனி புதிய வேலை கிடைக்கும் வருமானம் பெருகும். குடும்ப பாவத்தில் இருந்த சனி விலகுவதால் திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். பிரிந்து போன குடும்ப உறவுகள் ஒன்று சேர்வார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்படும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். பாத சனி விலகுவதால் கால்வலி பிரச்சினை தீரும் ஆரோக்கியம் கூடும். தேவையான தனவரவை தருவார். பணப்பற்றாக்குறை தீரும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பல ஆண்டுகாலமாக பணம் வாங்கி விட்டு ஏமாற்றியவர்கள் திருப்பி தருவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாவது ராசி. சனி விருச்சிகத்தை ஆட்டி படைத்தது. இனி நன்மைகள் தேடி வரும் காலம்.வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். சனியால் ஏற்பட்ட விடுதலையை சந்தோஷமாக அனுபவியுங்கள் திருநாள்ளாறு போய் நள தீர்த்த குளத்தில் நீராடி சனி பகவானை சந்தோஷமாக வழிபட்டு வாருங்கள்.
தனுசு
2020 ஜனவரி முதல் தனுசு ராசிக்கு ஜென்ம சனி விலகப்போகிறது. உங்க தலையில் அமர்ந்திருந்த சனி ராசியை விட்டும் கேதுவை விட்டும் விலகுவதால் நன்மை. தனுசுக்கு தனாதிபதி சனி இப்போது இரண்டாம் வீட்டில் அமர்கிறார். இரண்டரை வருடத்தை எளிதாக கடந்து விடலாம். கஷ்டங்கள் விலகும் சங்கடம் தீரும். தனாதிபதி தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். தடைகளையும் சோதனைகளையும் கொடுத்த சனி விலகும் நேரத்தினால் பெருமூச்சு விடுவீர்கள். இதுநாள் வரை குழப்பத்தில் இருந்தீர்கள். வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்தீர்கள். இனி பணவருமானத்திற்கு வழியை ஏற்படுத்துவார். நஷ்டங்களை சந்தித்த நீங்கள் இனி லாபத்தை சந்திப்பீர்கள். ஏழரை சனி இரண்டரை வருஷம் நிம்மதி தருவார். இருளில் மூழ்கியிருந்த உங்களுக்கு வெளிச்சம் தென்படும் காலம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனத்தில் செல்லும் போவது கவனம் தேவை. கடல் கடந்து செல்பவர்களுக்கு முன்னேற்றம் வரும். உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சனி பார்வை படுவதால் வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். விசா கிடைக்கும். தொழில் வருமானம் அதிகரிக்கும். சனி வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்பதால் பொறுமை தேவை. சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் தீர வாலாஜாபேட்டையில் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு முதல் இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும். உங்க ராசி நாதன் சனி உங்க ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். பாதகங்களை விட சாதகங்களே அதிகம். முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். பயணங்களில் எச்சரிக்கை தேவை. உழைப்பால் உயர்ந்த நீங்கள் இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்றத்தை தரும். பிசினஸ் செய்ய நினைத்தவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி தரும். நிறைய உதவி கிடைக்கும் வளர்ச்சிக்கு உதவும் நன்மைகள் கிடைக்கும். 30 வயதை கடந்தவர்களுக்கு முன்னேற்றகரமான காலம் காரணம் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனிபகவான். சனியின் பார்வை, மீனம், கடகம் துலாம் ராசியின் மீது விழுகிறது. தொழில் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்யும் காலம். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். குச்சனூருக்கு குடும்பத்துடன் சென்று சனிபகவானை வழிபட்டு வரலாம் பாதிப்புகள் குறையும் நன்மைகள் நடைபெறும்.
கும்பம்
2020ஆம் ஆண்டு கும்பம் ராசிக்கு ஏழரை சனிகாலம் தொடங்குகிறது. உங்க ராசிநாதன் சனி 12ஆம் வீட்டில் சனி அமரப்போகிறார். விரைய சனி. உங்க ராசிநாதன் சனி அதிக பாதிப்பை தர மாட்டார். சாதக பாதகம் நிறைந்த சனிப்பெயர்ச்சி இது. முதலீடு செய்யும் போது கவனம் தேவை. பயணங்கள் பண்ணும் போது கவனம் தேவை. மருத்துவ செலவுகளை தருவார். குடும்ப உறுப்பினர்களுக்காக அதிக செலவு செய்வீர்கள். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. சனி தசை நடப்பவர்களுக்கு இது பூரண பலனைத் தரும். சில விசயங்களில் கவனம் தேவை. பண விரையம் வரும் லாப சனியாக இருந்து விரைய சனியாக மாறுகிறார். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. அப்படி செலவு பண்ணாம சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும். 30 வயதுக்கு உள் இருப்பவர்கள் கவனம். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொங்குசனியை அனுபவிப்பீர்கள். சொத்துக்களை சேர்ப்பீர்கள். பாசிட்டிவ் எண்ணங்கள் தேவை. தான தர்மங்கள் தேவை, திருமணம் செய்ய முயற்சி செய்ய வேண்டாம். வீணான வாக்குவாதங்கள், வார்த்தைகளை விட வேண்டாம். மாணவர்களுக்கு கவனம் தேவை. படிப்பில் கவனம் செலுத்துங்கள். திருமணம் செய்ய நினைப்பவர்கள் பொறுமை தேவை. நிதானம் அவசியம். சுய ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் தசா புத்தி நன்றாக இருந்தால் இந்த சனி பெயர்ச்சி வளர்ச்சியை தந்து உங்களைக் காப்பாற்றுவார். குடும்பத்துடன் திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் தலத்தில் சனிபகவான் பொங்கு சனீஸ்வரராகக் காட்சி தருகிறார் இவரை தரிசனம் செய்ய சகல செல்வங்களும் கிடைக்கும்.
சனி ப்ரீதி ஹோமம்
ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, சனி திசை, சனி புக்தி போன்றவையின் தாக்கம் குறையவும் சனிக்கிரகத்தினால் ஏற்படும் குடும்ப கஷ்ட நஷ்டங்கள் குறையவும், உடல் நலம் பெறவும், விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், கடன்கள் அடையவும், அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெறவும், பித்ரு தோஷம், திருமணத் தடை, புத்திர பாக்கிய தடை போன்ற தோஷங்களுக்கு நிவாரணம் பெறவும், வீடு, தொழில் துறையில் இடமாற்றங்கள் வேண்டுபவருக்கு மாற்றம் கிடைக்கவும், வீட்டில் பிள்ளைகள் படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தலும், தொழில், உத்யோகம், வியாபாரம் போன்றவைகளில் ஏற்படும் தடைகள் நீங்கவும், சனி ப்ரீதி ஹோமம் செய்யலாம்.