2022 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை யாருக்கு கிடைக்கும்
சென்னை: 2021ஆம் ஆண்டு முடியப்போகிறது. புத்தாண்டு பிறக்கப் போகிறது. புதிதாக பிறக்கப் போகும் 2022ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்குமா என்ற ஏக்கம் அனைவருக்குமே இருக்கும். புத்தாண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும் என்றும் அரசு வேலை யாருக்கு கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.
2022ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனிபகவான் பத்தாம் இடமான மகரம் ராசியிலும் 11ஆம் வீடான கும்ப ராசிக்கும் செல்கிறார். தற்போது லாப வீட்டில் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருவும் ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சென்று மீனம் ராசியில் அமரப்போகிறார். பின்னர் வக்கிரமடைந்து கும்ப ராசிக்கு சென்று மீண்டும் நவம்பர் மாதத்தில் மீன ராசிக்கு செல்வார். ராகு பகவான் ஏப்ரல் மாதத்தில் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பயணம் செய்கிறார்.
நவ கிரகங்களில் ஒருவர் ஜாதகத்தில் கிரகங்களின் அமைவு வெளிநாடு செல்லும் யோகத்தை தீர்மானிக்கும். சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 மற்றும் 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும். சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர். ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமாக கிரகங்கள் ஆகும். 2022ஆம் ஆண்டு எந்தெந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
புத்தாண்டு ராசிபலன் 2022: தனுசு ராசிக்கு ஏழரை சனி முடிவு... மீன ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்திருந்தவர்களின் கனவு நனவாகப் போகிறது. சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தும்,மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையப்போகிறது. சனிபகவான் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அயல்நாட்டு வியாபாரம் சூடுபிடிக்கும். சனி பகவானும் லாப வீட்டிற்கு வரப்போவதால் உங்களின் வருமானமும் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். படித்து விட்டு அரசு வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏப்ரல் மாதம் நிகழப்போகும் அதிசார குரு பெயர்ச்சியும் ராகு கேது பெயர்ச்சியும் சில சாதகமான பலன்களை தரப்போகிறது. திரைகடல் ஓடி திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள்.

ரிஷபம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் குரு, பாக்ய ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் பயணம் செய்வதால் பாக்கியங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. வெளியூர், வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வேலை கிடைக்கும். சம்பள உயர்வும் அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. ராகு ஜென்ம ராசியில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். மன அழுத்தங்கள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ராகு ,கேதுவால் வரக்கூடிய தோஷங்கள் விலகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, குருவின் பார்வை உங்களுக்கு குதூகலத்தை தரப்போகிறது. கல்வியில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற முடியும். குருவின் பயணம் சனியின் சஞ்சாரம் சாதகமான பலனை தரப்போகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வெளிநாட்டு யோகம் கை கூடி வரப்போகிறது. குருபகவான் அதிசாரமாக பயணிக்கும் காலத்தில் வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். அஷ்டம சனியின் பிடியில் இருந்து விடுபடும் காலம் வந்து விட்டது. மனநிலையில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவடையும். யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சில மாதங்கள் அஷ்டமச்சனியிலிருந்து பாதிப்பை குறைத்து கொள்ள காலபைரவரை சனிக்கிழமை சனிக்கிழமை சென்று வழிபட்டு வரலாம்.

கடகம்
சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே 2022ஆம் ஆண்டில் உங்களுக்கு சனியின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் குருவின் பயணமும் பார்வையும் சாதகத்தை கொடுக்கும். அலுவலகத்தில் பதவிஉயர்வு, சம்பள உயர்வு என கொண்டாட்டமான,குதூகலமான ஆண்டாகவே 2022 ஆம் ஆண்டு இருக்க போகின்றது. தொழில் ஸ்தானத்தில் அமரப்போகும் ராகு பகவானால் படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சமூக அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் உயரும். பொருளாதாரம் உயரும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். பண வரவும் மனநிறைவும் கொண்ட ஆண்டாக அமையப்போகிறது.

சிம்மம்
சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கப்பெரும் வருடமாக இந்த 2022 ஆம் ஆண்டு இருக்க போகின்றது. குருவின் பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. பாக்ய ஸ்தானத்தில் பயணிக்கப் போகும் ராகு பகவானால் ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறக்கும். சிறிய அளவிலான முயற்சிக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். தடைபட்ட பணி உயர்வு தேடி வரும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். சம்பள உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்றபடி வேலை வாய்ப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவர்களின் நோக்கம் நிறைவேறும்.

கன்னி
அறிவின் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டில் குருவின் பார்வை நேரடியாக கிடைக்கப் போகிறது. ஆண்டின் முற்பகுதியில் சில சறுக்கல்கள் வந்தாலும் ஏப்ரல் மாதம் முதலே சாதனை படிக்கட்டில் பயணம் செய்யப்போகிறீர்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சனிபகவானும் 6ஆம் வீட்டிற்கு செல்வதால் கடன் பிரச்சினை நீங்கும். நோய் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ராகுவின் சஞ்சாரமும் கேதுவின் பயணமும் யோகங்களைத் தரப்போகிறது. மாணவர்கள் மன குழப்பங்கள் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.