கார்த்திகை பவுர்ணமியில் விஸ்வரூப தரிசனம் அளித்த திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்
சென்னை: கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் அருள்புரியும் ஆதிபுரீஸ்வரர் மீது சார்த்தப்பட்டிருந்த வெள்ளிக்கவசம் முழுவதும் நீக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் அளித்தார். மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும் நிகழ்வு என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொண்டை மண்டலம் என்று சொல்லப்படும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் அமைந்துள்ள புகழ்பெற்ற 32 கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமி திருக்கோவில்.
இக்கோவிலின் மூலவர் ஆதிபுரீஸ்வரர். பிரளய காலத்திற்கு பின்பு ஏற்பட்ட முதல் சுயம்பு லிங்கம் என்பதால் இக்கோவிலின் மூலவருக்கு ஆதிபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. மேலும், வாசுகி என்ற பாம்புக்கு அருள்புரிய வேண்டி புற்று வடிவில் எழுந்தருளி, வாசுகி பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால். படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
புற்று மண்ணால் சுயம்பு லிங்கமாக உருவானதால், லிங்கத்திருமேனி ஆண்டு முழுவதும் வெள்ளிப் பெட்டி போன்ற கவசத்தால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் நிகழும் பவுர்ணமி தினத்தில் மட்டுமே வெள்ளிக் கவசம் அகற்றப்பட்டு, பவுர்ணமியன்று மாலையில். ஆதிபுரீஸ்வரருக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆதிபுரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை மாத பவுர்ணமி புதன்கிழமையான நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டிருந்த வெள்ளிக் கவசம் திறக்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று இரவு தியாகராஜர் சுவாமிகளின் மாடவீதி உற்சவமும் நடைபெற்றது.
தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும், புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகமும் நடைபெறும். மூன்று நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரர் விஸ்வரூப தரிசன நிகழ்வு இருக்கும் என்பதால், அவரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு நிகழ்வு என்பதால். இந்நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் இக்கோவிலின் செயல் அலுவலர் கே.சித்ராதேவி மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.