Aadi amavasai ராமேஸ்வரம் , பாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
நம்முடைய முன்னோர்கள் மனம் குளிர நடந்து கொண்டால் அவர்களின் ஆசி நமக்குக் கண்டிப்பாக கிடைக்கும். முன்னோர்களின் ஆசியும் அன்பும் கிடைக்க நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
மதுரை: அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்பணம் அளிப்பது காலம் காலமாக கடைபிடிக்கும் மரபு. அதுவும் ஆடி, புரட்டாசி, தை அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடி தர்பணம் கொடுத்து படையலிட்டு வழிபடுவது சிறப்பு. இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையான பாபநாசத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர்.
ஆடி மாதம் பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காண வரும் முன்னோர்கள் சில மாதங்கள் நம்முடன் தங்கியிருந்து தை மாதம் உத்தரயாணம் தொடங்கிய உடன் பித்ருலோகம் திரும்புகின்றனர். நம்முடன் தங்கியிருந்து நம்மை காக்க வரும் முன்னோர்களுக்கு வரவேற்கும் நாளே ஆடி அமாவாசை.
நம்முடைய வேண்டுதலை ஏற்று நம்மை காப்பதற்காக புராட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் பூமிக்கு வருகின்றனர் என்பது நம்பிக்கை. எனவேதான் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று பூலோகத்தில் நம்மோடு தங்கியிருக்கும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளிக்கிறோம்.
புரட்டாசியில் வரும் முன்னோர்கள் சில மாதங்கள் நம்முடன் தங்கியிருந்து தை மாதம் உத்தரயாணம் தொடங்கிய உடன் பித்ருலோகம் திரும்புகின்றனர். நம்முடன் தங்கியிருந்து நம்மை காத்த முன்னோர்களுக்கு நாம் நன்றி கூறி வழியனுப்பி வைக்கும் நாளே தை அமாவாசை.
ஆடி அமாவாசை தினமான இன்று ஜூலை 31ம் தேதி காலை 11.24 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9.21 வரை அமாவாசை உள்ளது. இந்த நேரத்தில் பகல் பொழுதில் தர்ப்பணம் கொடுக்கலாம். ராமேஸ்வரம், கன்னியா குமரி புனித நதிக்கரைகள், பவானி கூடுதுறை, வேதாரண்யம், அவிநாசி, சிவகாசி, தென் காசி, போன்ற புனித தலங்களில் தர்ப்பணங்கள் கொடுக்க பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
முன்னோர்களுக்கு மரியாதை
ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண புண்ணிய காலம். இந்த காலங்களில் நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காக்க பூலோகம் வருகின்றனர் என்பது ஐதீகம். முன்னோர்களை வரவேற்கும் விதமாக ஆடி அமாவாசை காலத்தில் தர்ப்பணம் அளிக்கிறோம். புனித நீர் நிலைகளில் நீராடுவதோடு மறைந்த முன்னோர்களை வழிபடுகிறோம்.
அக்னி தீர்த்தத்தில் தர்ப்பணம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி பல்லாயிரக்கணக்கானோர் தர்பணம் அளித்தனர். ராமேசுவரம்
ராமநாதசுவாமி கோவில் இன்று நாள் முழுவதும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் குவிந்த கூட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆகிய இடங்களிலும் ஆடி அமாவாசையையொட்டி புனித நீராட பக்தர்கள் குவிந்தனர். இதே போல திருச்செந்தூர், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலும் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
பாபநாசத்தில் தர்ப்பணம்
நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் பாபநாசம் தீர்த்தக்கட்டத்தில் உள்ளூர் வெளியூர் மக்கள் புனித நீராடியதோடு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். காவிரி பாயும் திருச்சி அம்மா மண்டபத்தில் புனித நீராடிய பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் கொடுத்தனர்.
ஏழைகளுக்கு தானம்
நம்மை பாதுகாத்த முன்னோர்களுக்காக தர்ப்பணம் அளித்து ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் பரம்பரை பரம்பரையாக நமக்கு நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை. பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நலம். இவ்வாறு தர்பணம் அளிக்காவிட்டால் முன்னோர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
முன்னோர்களின் ஆசி
முன்னோர் நம்மிடம் பெரிதாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களின் தேவை, எள்ளும், நீரும் மட்டுமே. அவற்றை புண்ணியத்தலங்களுக்குச் சென்று கொடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது முன்னோர் வாக்கு. எனவே இனியாவது தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசி பெறுவோம்.