ஆடி அமாவாசை - ராமேஸ்வரம், வேதாரண்யம், குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ராமேஸ்வரம் கோவிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை: ஆடி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, குற்றாலம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பூமியில் பிறந்தவர்கள் யாருமே பாவ புண்ணியத்திலிருந்து தப்ப முடியாது. பாவங்களில் மகா பாவமாக சொல்லப்படுவது, நம்மைப் பெற்றவர்களையும் நம்முடைய முன்னோர்களையும் அன்புடனும் பொறுப்புடனும் கவனிக்காமல் இருப்பதுதான். அவர்கள் உயிருடன் இருக்கும்போது கவனிக்காமல் இருப்பது மகா பாவம் என்றால், அவர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுத்து, பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பது மகா மகா பாவம் ஆகும்.
இத்தகைய பாவங்களுக்கு ஆளாகும் அன்பர்கள், பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல், அவர்களுடைய சந்ததியினரும் பல வகையான துன்பங்களை அடைகின்றனர். எனவே, நம் முன்னோர்களுக்கு வருடாந்திர சிராத்தம் செய்வதுடன், ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தை, ஆடி, புரட்டாசி ஆகிய மூன்று நாட்களில் அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு எள், தண்ணீர், மாவு போன்றவற்றை படைத்து தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு.
முன்னோர்களுக்கு உணவு
ஆடி அமாவாசை விரதம் நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் என்றாலும், இறந்த தந்தைக்காக பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்று கூறுவார்கள். அன்றைய தினம் வீட்டில், மூதாதையர்கள் படத்துக்கு மாலை போட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலை வாழை இலையில் படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் ராமேசுவரத்திற்கு வருகை தந்து அக்னி தீர்த்தக் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
முன்னோர்களின் ஆசி
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் அதிகாலை முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர். குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இன்று முன்னோர்களுக்கு புனித ஸ்தலங்களில் உள்ள நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசியும், ஆத்ம பலமும், நம் வாழ்வில் வளம் கிடைப்பதாக ஐதீகம் என்று தர்ப்பணம் கொடுத்தவர்கள் தெரிவித்தனர்
புனித நீராடி வழிபாடு
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்ன தானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்து படைக்க வேண்டும். படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும்.
காகத்திற்கு உணவு
காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்த மாணவர்கள் அணிந்து கொள்ளலாம். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பிற்பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும்.