இன்று ஆடி அமாவாசை- முன்னோர்களின் ஆசி கிடைக்க எள்ளும் தண்ணீரும் மறக்காம கொடுங்க
மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ நம் முன்னோர்கள் ஆசி தேவை. பித்ருக்களின் ஆசி இருந்தாலே வீட்டில் செல்வவளமும், சந்தோஷமும் கூடும்.
மதுரை: இன்று ஆடி அமாவாசை நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். நம் முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுத்து வணங்க வேண்டிய நாள். இன்றைய தினம் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும்.
எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம்' என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ:' என்று பொருள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடுமாம்.
பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறுநாள்கள் உள்ளன. அவை உத்தராயன புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாள்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாள்களாகும்.
கடகத்தில் சந்திரன்
அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, `நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்' என்று கூறுவார்கள். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள். ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் சந்திரன் தந்தை சூரியனுடன் இணைந்திருக்கிறார்.
பித்ரு தர்ப்பணத்திற்கு ஏற்ற நாள்
சந்திரன் சந்தோஷமடைந்தால் மனதும் சந்தோஷம் அடையும். சந்தோஷமான மனதுடன் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நல்லபடி வெற்றி பெறும். அமாவாசை நாளில்தான் சந்திரன் சந்தோஷம் அடைகிறாராம். சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள்.
தர்ப்பணம் செய்வது ஏன்
நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு. தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.
யார் விரதம் இருக்கலாம்
அமாவாசை நாளில் எல்லோரும் விரதம் இருக்கத் தேவையில்லை. தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதம் இருக்கலாம். திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்கக் கூடாது. காரணம் அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.
முன்னோர்கள் வழிபாடு
ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும். உபவாசம் இருக்க வேண்டும். கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும். கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும். யாருக்காவது உணவு தானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக் கீரை கொடுங்கள்.
கோவிலில் தானம் தரலாம்
பெண்ணிற்கு சகோதர்கள் இருப்பின் அவர்கள் பெற்றோருக்கு தர்ப்பணம், விரதம் இருப்பார்கள். சகோதர் இல்லை, பெற்றோர் இருவரும் இல்லை என்றால் பெண்கள் கோயிலுக்கு சென்று தானம் கொடுக்கலாம், வீட்டிற்கு வந்து நான்கு பேருக்குஅன்னதானம் தரலாமே தவிர அமாவாசை விரதத்தை கணவர் இருக்கும் பெண்கள் கடைபிடிக்கக் கூடாது. அமாவாசை தினத்தில் முன்னோர்களையும் தாய், தந்தையர்களை யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.