நோய், சத்ரு பயம் நீக்கும் #ஆடிக்கிருத்திகை-திருத்தணி முருகன் ஆலயத்தில் காவடியுடன் குவியும் பக்தர்கள்
சென்னை: முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்ரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து வள்ளி, தெய்வானை சமேத முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். முருகனுக்குரிய ஆடி கிருத்திகை தினம் வெள்ளிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் முருகனை விரதம் இருந்து வணங்கினால் நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம், மனவலிமை பெறும், செல்வ செழிப்பு உண்டாகும்.
கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் சிறப்பானது. தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் கார்த்திகையும், உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் தை கிருத்திகையும் முருகன் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாப்படுகிறது. ஆடி கிருத்திகை தினமானது சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் தட்சிணாயண காலத்தின் தொடக்கத்தில் வருகிறது. இக்காலம் பகல் வெளிச்சம் குறைந்து இரவின் இருள் நீடித்திருக்கும் பருவத்தின் தொடக்க காலமாகும். எனவே மக்கள் தங்களின் வாழ்வில் துன்பம் எனும் இருள் அதிக காலம் நீடிக்காமல் இருக்க முருக பெருமானை வேண்டுவதால் அவர்கள் வாழ்வு ஒளிமயமாக இருக்க அருள் புரிவார் முருகன்.
இன்று ஆடிக்கிருத்திகைநாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். முருகப்பெருமானில் அறுபடை வீடுகளிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் இன்று காலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர்.
ஆடி முதல் தை வரை கிருத்திகை விரதம்
மழைக்காலத் தொடக்கமான தட்சணாயணம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாக உள்ளது எனவேதான் ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்து கடவுளரையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
ஆடிக்கிருத்திகை அற்புதம்
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகைத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிக் கிருத்திகை திருவிழா புதன்கிழமை தொடங்கியது. மூலவர் முருகனுக்கு தங்க கவசம் அணிவித்தனர். பின்னர் மூல வருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
ஆடிக்கிருத்திகை விழா
ஆடி அசுவினியை முன்னிட்டு புதன்கிழமையன்று மஞ்சள், செவ்வாடை அணிந்த பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். மொட்டை அடித்து முருகனை வழிபட்டனர். பெண்கள், குழந்தைகளும் காவடி சுமந்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாகவும் காவடி சுமந்து வந்து முருகனை வழிபட்டனர்.
சிறப்பு அலங்காரத்தில் முருகன்
வியாழக்கிழமையன்று ஆடி பரணி விழாவை முன்னிட்டு முருகன், சிறப்பு அலங்காரத்தில் காட்சிக் கொடுத்தார். அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம், வைர கீரிடம் பச்சைகல் மரகத மாலை, அணிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர்.
தெப்பத்தில் அழகன் முருகன்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அதிகாலை முதலே காவடி சுமந்து வரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. அரோகரா முழக்கம் மலை எங்கும் எதிரொலிக்கிறது. இன்று மாலை 7 மணி அளவில் காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவர் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் அலங்கரிக்கப்பட்டிக்கும் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதனைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தைரியம் அதிகரிக்கும்
வேண்டிய பக்தர்களுக்கு உடனடியாக வந்து அவர்களின் வினைகளை நீக்குபவர் முருக பெருமான் ஆவார். சித்தர்கள் அனைவருக்கும் விருப்பத்திற்குரிய நாயகன் முருகன் என்பதால் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 468 சிவலிங்க ரூபமாக உள்ள சித்தர்களின் நடுவே கார்த்திகை குமரனை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் முக்கியமானதாகும். மேலும் தங்க அன்னபூரணியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் ஆடி கிருத்திகையில் இவர் இருவரை வழிபடுவதால் ஒருவருக்கு வாழ்வில் யாருக்கும் அஞ்சாத மனம், சிறந்த செல்வ நிலை உயர்வான ஆன்ம ஞானம் கிடைக்கும்.
நோய்கள் தீரும் விரதம்
முருகனுக்குரிய ஆடி கிருத்திகை தினம் வெள்ளிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் சிறப்பானதாகும். முருக பெருமானை வேண்டி நடைபெறும் சுப்பிரமண்ய ஹோமத்தில் பங்கேற்றால் உடல் உறுதி பெரும், நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம், மனோவலிமை பெறும், செல்வ செழிப்பு உண்டாகும், பூமி லாபம் பெறலாம், வீடு மனை தொழில் செய்பவருக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும், இரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும், சத்ரு பயம் விலகும், இன்னும் பல எண்ணிலடங்கா நன்மைகளை பெற்று ஆடி கிருத்திகையில் சுப்ரமண்யரின் அருள் பெறலாம்.