ஆடி கடைசி வெள்ளியில் அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
ஆடிவெள்ளியில் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. எனவே ஏராளமான பக்தர்கள் புற்றுக்கு பால் ஊற்றினர்.முப்பெரும் தேவிகளுக்கும் ஆடி வெள்ளிகளில் முதல் 3 வாரங்கள் பூ அலங்காரமும், 4 வது வாரம் காய் அலங்காரமும் 5 வது வாரம் பழ அலங்காரமும் செய்வார்கள்.
ஆடி மாதத்தில்தான் அன்னை எனும் மகாசக்தி பிரபஞ்சம் முழுவதும் பரவி வியாபித்து அருள்பாலிக்கக் காத்திருக்கிறது என்கின்றன புராணங்கள்.
இந்த மாதத்தில், முப்பது நாளும் அம்மனுக்குக் கொண்டாட்டம்தான். கோலாகலமான விழாக்கள்தான். தினமும் அபிஷேகங்கள் செய்து, விசேஷ பூஜைகள் செய்வார்கள் ஆலயங்களில்! சில கோயில்களில், பூச்சொரிதல், கூழ் வார்த்தல் வைபவங்களும் நடைபெறும்.
ஆடி வெள்ளியன்று பெண்கள் விரதம் இருப்பது நன்மை தரும். ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்று இருந்தாலும், பாவக்கிரகம் பார்வையினால் சுக்கிரன் பலம் இழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிடைக்கும்.
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோவில், கோலவிழியம்மன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் அம்மனை வழிபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தென் மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடிக்கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடிமாதம் பிறந்தது முதலே பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தும் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும், மாவிளக்கு ஏந்தியும், பொங்கல் வைத்தும், காதுகுத்தியும், விளக்கு போட்டும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மாரியம்மன் கோயிலில், காலையில் நடை திறந்ததுமே கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பெண்கள், குங்கும அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டார்கள். காரைக்குடி கொப்புடையம்மன் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, திருவாடானை பாகம்பிரியாள், திருச்சி வெக்காளியம்மன், பொன்மலை மாரியம்மன், ஈரோடு சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன், மதுரை தெப்பக்குள மாரியம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் நடைபெற்றன