ஆடிப்பெருக்கு 2020: செல்வ வளம் பெருக ஆடி பதினெட்டாம் பெருக்கு வீட்டிலேயே கொண்டாடுங்க #Aadiperukku
ஆடிப்பெருக்கு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதே போல திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்க
திருச்சி: ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றன. நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி புனித நீராடுவார்கள். ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என்றாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை என்பதால் நதிக்கரை, ஆற்றங்கரைகளில் பண்டிகைகள் களைகட்டவில்லை.
ஆடி பதினெட்டாம் நாள் அற்புதமான நாள். தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள். காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நாள் ஆடிப்பெருக்கு நன்னாள். ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா ஜீவ நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது. இன்றைய சூழ்நிலையில் நம்மால் ஆற்றங்கரை, நதிக்கரை, அருவிக்கரைகளுக்கு போகமுடியாவிட்டாலும் வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து படையலிட்டு காவிரி அன்னையை வீட்டு வாசலில் இருந்தே வணங்கலாம். இதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும்.
காவிரி தாய் காப்பாள்
ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று புனித நீராடி காவிரியை வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருமண வரம் தரும் காவிரி
ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குகின்றனர்.
மஞ்சள் சரடு படையல்
காவிரி அன்னையை கர்ப்பிணியாக பாவித்து வளைகாப்பு செய்வது போல பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். சிலரது வீடுகளில் முளைப்பாறி வளர்த்து எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள்.
காவிரிக்கு வளைகாப்பு
நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட ஆடிப்பெருக்கு நாளில் காவிரி அன்னையை வழிபடுவார்கள். வீட்டில் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் சமைத்து ஆற்றங்கரையோரத்திற்கு சென்று அன்னைக்கு படையல் போட்டு வழிபட்டு சொந்த பந்தங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் பெண்களுக்கு வீட்டில் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எந்த ஆற்றங்கரைக்கும் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றில் தண்ணீர் வராமல் மக்கள் போர் தண்ணீரில் குளித்து காவிரியை வணங்கி வழிபட்டார்கள். இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது ஆனாலும் புனித நீராடமுடியவில்லையே என்ற கவலை இருக்கத்தான் செய்யும் கவலைப்பட வேண்டாம். வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை, வைகையை, தாமிரபரணியை வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளை கொண்டாடுவோம். பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்ளலாம்.
செல்வ வளம் பெருகும்
ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். இன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்கள் தங்களின் பாடங்களை இன்று முதல் படிக்கத் தொடங்கலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்கலாம். இன்றைய தினம் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை இருப்பதால் வீட்டின் பூஜை அறையில் தங்கம், வெள்ளி காசுகள், நாணயங்களை வைத்து வணங்கி அதை பீரோவில் வைக்க செல்வ வளம் பெருகும்.