ஆடிப்பெருக்கு நாளில் பொங்கி வரும் காவேரி... ஐஸ்வர்யம் பெருக இதை மறக்காமல் செய்யுங்கள்
ஆடிப்பெருக்கு காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பார்கள். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்.
சென்னை: ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். அன்றைய தினம் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பார்கள். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். விவசாயிகள் தங்களின் உழவுப்பணிகளை ஆடிப்பெருக்கு நாளில் தொடங்குவார்கள். ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் நீராடி வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் பெருகும் என்பது நம்பிக்கை.
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகமாகும். நதிகளில் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க உதவும் நதி அன்னைக்கு, ஆடி மாதம் 18ஆம் தேதி, பதினெட்டாம் பெருக்கு கொண்டாடுகிறார்கள். காவிரி, பெண்ணை, பொருணை நதிக்கரைகளில் இந்த விழாக்கள் கொண்டாடப்படுவது சிறப்புக்குரியதாக உள்ளது.
சட்டசபையில் மீண்டும் கருணாநிதி.. 3 ஆண்டுகளுக்கு பிறகு! ட்விட்டரில் வைரலாகும் #KalaignarInAssembly
பருவ மழை தீவிரமடையும் மாதம் ஆடிமாதம். தமிழ்நாட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலம். இந்தப் புதுப்புனல்தான் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது.
புது வெள்ளம் கண்டு மகிழ்ச்சி
ஆடிப் பெருக்கு பண்டிகை ஒரு குடும்பத்திற்குள் அனுசரிக்கப்படுவதல்ல. இது சமூகத் திருவிழா. மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆற்றங்கரைக்குச் சென்று பொங்கிவரும் புது வெள்ளைத்தைக் கண்டு மகிழ்வார்கள். அதற்குப் படையலிடுவார்கள். விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள் புதுப் புனலில் நீராடி பூஜிப்பார்கள். இவை எல்லாம் ஆடிப் பதினெட்டாம் நாள் செய்யப்படுவதால் இது பதினெட்டாம் பெருக்கு என அழைக்கப்படுகிறது.
விவசாயம் செழிக்கும்
சூரியனின் தென்திசைப் பயணத்தை, தட்சிணாயன புண்ணிய காலம் என்று குறிப்பிடுவர். தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான ஆடியில் விவசாயிகள் உழவாரப் பணிகளைத் தொடங்குவார்கள். விவசாயம் செழிக்க தேவையான தண்ணீரை வழங்கும் நதிகளை முன்னோர்கள் வழிபட்டனர். அதற்குரிய நாளாக ஆடி 18ஆம் தேதியை தேர்ந்தெடுத்தனர்.
புது மஞ்சள் கயிறு
ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். அன்றைய தினம் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பார்கள். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்.
காவிரியில் நீராடிய ராமன்
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன்னுடைய பாவ உணர்வுகள் நீங்கும் என்று வசிஷ்டர் கூறினார். அதன்படி ராமச்சந்திர மூர்த்தி காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மங்கள சரடு
தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில், சங்கமேஸ்வரர் கோவிலின் நடை ஆடிப் பதினெட்டு அன்று அதி காலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை, பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
காவிரிக்கு சீர் தரும் நம் பெருமாள்
காவிரி அன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுகிறாள். ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், ஆடிப்பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித் துறைக்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். பின்னர் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் இருந்து அன்று மாலை நேரத்தில் புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை-பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானை மேல் ஏற்றி அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து, ஆராதனைகள் செய்வார்கள். பிறகு அவற்றை காவிரி அன்னைக்கு சமர்ப்பிப்பார்கள். காவிரிக்கு, பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இந்தக் காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடிப்பெருக்கு நாளில் தங்கம்
அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க சிறப்பானது என்று கருதப்படுகிறது. இந்த நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்க பலரும் தயங்குவார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு அவற்றுக்கெல்லாம் விதிவிலக்காகும்.
பூஜை அறையில் காவிரி
இன்றைய கால கட்டத்தில் காவிரி, தாமிரபரணி, வைகை நதிக்கரையோரங்களில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் நிறை குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு கரைக்க வேண்டும். அந்த நீரை, விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அகத்தியரை வணங்குவோம்
காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இதன் மூலம் செல்வ வளம் பெருகும் சகல ஐஸ்வர்யமும் பெருகும் என்பது நம்பிக்கை.