ஆடிப்பெருக்கு : பவானி கூடுதுறையில் உற்சாகம் - களையிழந்த காவிரி டெல்டா
ஆடி பதினெட்டாம் பெருக்கு பண்டிகையை தமிழக மக்கள் பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடினர். காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் பண்டிகை களையிழந்தது.
திருச்சி: ஆடிப்பெருக்கு திருவிழாவையொட்டி ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுரையில் ஆயிரக்கணக்கானோர் நீராடி சிறப்பு பூஜைகளை மேற்கொண்டுள்ளனர்.
காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு களையிழந்து காணப்படுகிறது. திருச்சி அம்மா மண்டபத்தில் ஆற்று மணலில் படையலிட்டு பொதுமக்கள் வழிபட்டனர். திருவாரூரில் கமலாலய குளத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது.
காவிரியில் குறைந்த அளவே தண்ணீர் வருவதால் கடந்த ஆண்டுகளை விட ஆடிப்பெருக்கு களையிழந்தே காணப்படுகிறது.
பொங்கி வரும் காவிரி
ஆடி மாதம் என்பது உழவுத்தொழிலுக்கு ஏற்ற மாதம். இந்த மாதத்தில் தான் பெருக்கெடுத்து வரக்கூடிய இந்த காவிரியை வழிபட்ட பின்பு உழவர்கள் தங்களுடைய உழவுப் பணிகளை மேற்கொள்வதும் வழக்கம்.
காவிரிக்கு வரவேற்பு
வழக்கமாக ஆடி மாதங்களில் காவிரி பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். அதன்படி பெருக்கெடுத்து வரக்கூடிய காவிரியை வரவேற்பதற்காகவும், காவிரிக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் தான் இந்த ஆடி 18 விழாவானது கொண்டாடப்படுகிறது.
பவானி கூடுதுரை
இன்று ஆடி 18 திருவிழாவையொட்டி, மிகவும் புகழ்பெற்ற பவானி கூடுதுரையில் ஏராளமானோர் காவிரியில் புனித நீராடி, படித்துரையில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று நதிகளின் சங்கமம்
காவிரி, பவானி ஆகிய இரண்டு நதிகளும் கூடக்கூடிய இ்டமாகும். அதேபோல் கண்ணுக்கு புலப்படாத அமுத நதியும் இந்த காவிரியில் இணைவதாக ஐதீகம். இந்த ஆடிபெருக்கு நாளில் இங்கு சிறப்பு பூஜை செய்தால் தங்கள் வாழ்நாளில் வளம்பெருகும் என்ற அடிப்படையில் ஏராளமானோர் தொடர்ச்சியாக பூஜைகளை செய்தனர்.
புதுமணத்தம்பதிகள் உற்சாகம்
பெண்கள் புது தாலிகளை வைத்து பூஜை செய்து மாற்றிக்கொண்டனர். புதுமணத்தம்பதிகள் படையல் வைத்து வணங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த ஆண்டு காவிரி பெருக்கெடுத்து ஓடவில்லை. குறைந்து அளவு தண்ணீர் மட்டுமே ஆற்றில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
கூடிய கூட்டம்
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2,500 கனஅடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. தற்போது செல்லக்கூடிய குறைந்த அளவு தண்ணீரிலும் ஏராளமான பொதுமக்கள் இங்கு தற்போது புனித நீராடி, சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர்.
காவிரி டெல்டாவில் களையில்லை
காவிரியில் இந்த ஆண்டு தண்ணீர் ஓடாத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் களையிழந்து உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் துலா கட்ட காவிரியில் குறைந்த அளவே கூட்டம் காணப்படுகிறது. ஐவகை சோறு சமைத்து சீர் வைத்து காவிரியை வணங்கினர்.
திருவையாறு
திருவையாறில் மணலில் படையலிட்டு வணங்கினர். பம்ப் செட் தண்ணீரில் புனித நீராடினர். திருவாரூரில் கமலாலய குளத்தில் பெண்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி ஆறு ஓடவில்லை. மணல் மட்டுமே காணப்படுகிறது. எனினும் ஆடிப்பெருக்கான இன்று ஏராளமானோர் ஆற்று மணலில் படையலிட்டு காவிரி தாயை வணங்கினர். அடுத்த ஆண்டாவது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்க வேண்டும் என்று வணங்கினர்.