பொங்கி வரும் காவிரி... ஆடி 18ஆம் பெருக்கு கொண்டாட தயாராகும் மக்கள் #aadi perukku
காவிரி அன்னை பொங்கி பிரவாகம் எடுத்து தமிழக மக்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறாள். காவிரி அன்னையை வணங்கும் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட காவிரி கரையோர மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
திருச்சி: காவிரி அன்னை கர்நாடகாவில் இருந்து கரைபுரண்டு ஓடி வந்து தமிழக மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறாள். இந்த ஆண்டு ஆடி 18ஆம் பெருக்கு விழாவை கொண்டாட கோலாகலமாக தயாராகி வருகின்றனர் காவிரி கரையோர மக்கள். ஆகஸ்ட் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ளது.
பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த இந்த ஆடி மாதம், பெண்கள் வழிபட்டுப் பலன் பெறுகிற மாதமாகவும் சிறப்புறச் சொல்லப்படுகிறது. கன்னிப்பெண்கள் இந்த நாளில் ஆற்றங்கரையில் வழிபட்டால், அவர்களுக்கு நல்ல கணவன் அமைவார்கள் என்பது நம்பிக்கை. சுமங்கலிகள் நதிக்கரைகளில் அமர்ந்து வழிபட்டால், கணவரின் ஆயுள் கூடும் மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.
தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள். காவிரியைத் தவிர தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மழை கொட்டித்தீர்த்துள்ளது. ஆறுகள் பொங்கி பிரவாகம் எடுத்துள்ளன. காவிரி கரையோரங்களிலும், தாமிரபரணி ஆற்றங்கரைகளிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.
காவிரி அன்னைக்கு வழிபாடு
தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. தமிழ் மாதமான ஆடி 18ம் நாள் பெருக்கெடுத்து வரும் காவிரித் தாயை மலர்தூவி வரவேற்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரி ஆறு தமிழ்நாட்டில் நுழையும் ஒகேனக்கல்லில் மாநில அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்பட்டு வருகிறது.
ஆடி 18ன் சிறப்பு
ஆடிப்பெருக்கு நாளினை ஆடி18ம் பெருக்கு என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன. இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் காவிரி அன்னைக்கு ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்.
சுமங்கலி பெண்கள் வழிபாடு
ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு, பல்வேறு விதமான வழிபாடுகள் செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது. வாழை இலையை விரித்து அதில் விளக்கேற்றி, பூஜைக்குரிய பொருட்களை வைத்து, புது மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், ரவிக்கை துணி ஆகிய மங்கலப் பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுவார்கள்.
வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.
சுமங்கலி பெண்கள்
திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள். அப்படிச் செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றினை வழிபட்டு விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விட்டு வழிபடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள்.
காவிரிக்கு சீர்வரிசை
ஆடிப்பெருக்கு நாளில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள காவிரிக்கரையில் எம்பெருமாள் எழுந்தருள்வார். அம்மா மண்டபப் படித்துறையில் காவிரியை வணங்கிவிட்டு, எம்பெருமாளையும் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். அன்று மாலையில் புடவை, திருமாங்கல்யம், பழங்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் ஆகியவற்றை காவிரிக்குச் சமர்ப்பித்து பூஜைகள் நடைபெறும். இந்தக் காட்சியைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
பவானி கூடுதுறை
தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையில் உள்ள சங்க மேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். தென் தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலும், இதேபோல் வழிபாடுகள் நடைபெறும். அத்துடன், இலையில் சூடமேற்றி, அதனை நதியில் மிதக்க விடுவது வழக்கம்! அதேபோல், வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தும் ஆற்றில் விடுகின்றனர். அன்றைய நாளில், கரையில் பூஜைகளைச் செய்துவிட்டு பலவகையான கலவை சாத உணவுகளை சமைத்து எடுத்து வந்து குடும்பம் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டுச் செல்வார்கள்.
அற்புதங்கள் தரும் ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் மாக்கோலமிட்டு, சர்க்கரைப் பொங்கல் படைத்து, அம்பிகையை வழிபடுபவர்களும் உண்டு.
காவிரியின் கரையோரம் உள்ளவர்கள்தான் ஆடிப்பெருக்கு கொண்டாடுவார்கள்; நாம் என்ன செய்வது என்று யாரும் கவலைபட வேண்டாம். நம் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை அற்புதமாகக் கொண்டாடலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளைப் போட்டு நிறைகுடத்திலிருந்து அந்தச் செம்பில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள், நீரில் கலந்திருக்கும். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து அதன் முன் செம்பை வைத்துத் தண்ணிரில் பூக்களைப் போட வேண்டும்.
சர்க்கரை பொங்கல்
கங்கை, காவிரி, யமுனை, நர்மதை ஆகிய புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, மனதார வேண்டிக் கற்பூர ஆரத்தி காட்டி வழிபடலாம். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்தியரை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரைத் தோட்டத்தில் இருக்கும் செடிகொடிகளுக்கு ஊற்றிவிட வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்தால் ஆடிப்பெருக்கு விழா அற்புதமாக நிறைவடையும்.