For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வற்றாத ஜீவநதியான தாமிபரணியில் ஆடிப்பெருக்கு விழா - மங்கல ஆரத்தி

ஆடிப்பெருக்கை முன்னிட்டு வற்றாத ஜீவநதியான தாமிரபரணிக்கு நன்றி தெரிவிக்கும் ஆரத்தி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீபதட்டுகளை ஆற்றில்விட்டு வழிபட்டனர்.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி பூஜை நடைபெற்றது. பக்தர்கள் அகல் விளக்கு, தட்டு, வெற்றிலை போன்றவற்றில் சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்து ஆற்றில் விட்டனர். மலர்களை ஆற்றில் தூவியும் வழிபட்டனர்.

நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவ நதியாக திகழும் தாமிரபரணி ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்பு ஆரத்தி பூஜை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் படித்துறை மண்டபத்தில் நடந்தது.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்த வழிபாடு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி ராஜாராம் பட்டர் குழுவினர் மகா கணபதி பூஜை நடத்தினர். தொடர்ந்து மகா சங்கல்பம், புன்யாவஜனம், கும்ப பூஜைகள் நடந்தன, பின்னர் நதிநீர் அபிஷேகமும், மகா ஆரத்தி தீபாராதனையும் நடந்தது.

தாமிரபரணியில் வழிபாடு

தாமிரபரணியில் வழிபாடு

தீபாராதனையை அடுத்து திரண்டிருந்த பக்தர்கள் அகல் விளக்கு, தட்டு, வெற்றிலை போன்றவற்றில் சூடன் ஏற்றி ஆரத்தி எடுத்து ஆற்றில் விட்டனர். மலர்களை ஆற்றில் தூவியும் வழிபட்டனர். தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வழிபாடு நிகழ்ச்சிக்கு நகர தலைவர் மாரிமுத்து தலைமைவகித்தார், மாவட்ட தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தார். செயலாளர் ஏகாம்பர ஸ்தபதி, துணைத்தலைவர் சென்பகராஜ், துணைச் செயலாளர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் மகாராஜன், முருகேசன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

புனித நதியான தாமிரபரணி

புனித நதியான தாமிரபரணி

தன் பொருநை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இந்நதி நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து , விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.

ராமாயணத்தில் தாமிரபரணி

ராமாயணத்தில் தாமிரபரணி

தாமிரபரணி ஆற்றை ‘தாமிரவருணி' என்றும் அழைக்கிறார்கள். தாராளமாக அழைக்கலாம். தவறில்லை. வருண பகவானைபோல பொழிவதால் ‘வருணி' என்று வர்ணிக்கிறார்கள். இதுவே ‘தாமிரவருணி'க்கான பெயர்க் காரணம். ஆனால், வியாசரின் மகாபாரதத்திலும், வால்மீகியின் ராமாயணத்திலும், காளி தாசரின் ரகுவம்சத்திலும் இந்த நதி ‘தாம்பிரபரணி', ‘தாமிரபருணி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்கியங்களில் தாமிரபரணி

இலக்கியங்களில் தாமிரபரணி

சங்க இலக்கியங்கள் தாமிரபரணியை ‘தன் பொருநை', ‘பொருநை' என்கின்றன. பெரிய புராணத்தில் சேக்கிழார் பாண்டிய நாட்டை தன்பொருநைப்புனல் நாடு என்கிறார். பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திருநதி என்கிறார் கம்பர். அழகர் கருணைப்போல பொருநை பெருகிவரும் அழகைப் பாரும் பள்ளீரே என்கிறது முக்கூடற்பள்ளு.

ஜீவநதி தாமிரபரணி

ஜீவநதி தாமிரபரணி

தாமிரம் என்றால் செம்பு. தாமிரக் கனிமம் கலந்த தண்ணீர் என்பதால் தாமிரபரணி பெயர் வந்திருக்கலாம். ‘தமிழ் கண்டது வைகையும் பொருநையும்' என்கிறார் பாரதியார். தாமிரபரணி பாசனமும், அணைக்கட்டுகளும் தாமிரபரணியின் இருபுறமும் பாசனம் செழிக்க முதல் ஏழு அணைக்கட்டுகளும் கால்வாய்களும் பண்டைய கால அரசர்களினால் அமைக்கப்பட்டிருந்தன. கடைசியாக 1869ல் ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கட்டப்பட்டது.

பாபநாசம் அணை

பாபநாசம் அணை

தாமிரபரணி நதியில் எட்டு நீர்த்தேக்கங்கள், அவற்றில் 11 கால்வாய்கள் இருக்கின்றன. மலையில் ஏழு துணை ஆறுகளும், சமவெளியில் ஐந்து துணை ஆறுகளும் மொத்தம் 12 துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன. தோன்றுமிடம் தொடங்கி தூத்துகுடி மாவட்டம், புன்னைக்காயல் வரை 120 கி.மீ. பயணித்து மன்னார் வளகுடாவில் கலக்கிறது.

புண்ணிய தீர்த்தம்

புண்ணிய தீர்த்தம்

தாமிரபரணி நதியால் திருநெல்வேலியில் 40,000 ஏக்கர், தூத்துக்குடியில் 46,107 ஏக்கர் என 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

தாமிரவருணியின் நீர், எல்லாவகைக் காய்ச்சல், பித்ததோஷம், கண் புகைச்சல், உள்சுரம், சுவாச ரோகம், கக்குவான், என்புருக்கி, கை, கால் எரிச்சல், மிகுந்த நீர் வேட்கை இவைகளை தீர்க்கும் புனித தீர்த்தமாக திகழ்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாமிரபரணியில் மகாபுஷ்கரம் விழா கொண்டாடப்பட உள்ளது.

English summary
Aadi Perukku and Aadi friday falls on the same day, thousands of devotees performed rituals and took bath at the holy Tamirabarani River in Thirunelveli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X