ஆடிப்பெருக்கு: துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி வழிபட்ட மக்கள்
நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலுள்ள துலாக்கட்ட காவிரியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை: ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பர். மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா பூஜைகள் செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. நேற்று காலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் காவிரித் தாயை வணங்கி மகிழ்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மகாபுஷ்கரவிழா கொண்டாடப்பட்டது. காவிரி அன்னையை வணங்கி வழிபட்டதன் காரணமாக மகிழ்ந்து இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளில் பொங்கி பிரவாகமாக எழுந்தருளி மக்களை மகிழ்வித்தார் அன்னை காவிரி.
காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த ஆண்டு துலாக்கட்ட காவிரியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆடிப்பெருக்கு வழிபாடுகளில் முக்கியமானது சுமங்கலி பூஜை . துலாக்கட்ட காவிரி படித்துறையில் வாழை இலை விரித்து, அதில் விளக்கேற்றி, புது தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் பழங்கள் என மங்கல பொருள்கள் வைத்து காவிரி அன்னையை நினைத்து வழிபாடு செய்தார்கள்.
காவிரி அன்னைக்கு சீர்
காதோலை கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருள்களைக் காவிரித் தாய்க்கு சீர்வரிசையாகத் தந்தார்கள். அதன்பின் குடும்ப நலன் வேண்டி அருகில் உள்ள அரச மரத்தைச் சுற்றி மஞ்சள் நூல் கயிற்றைக் கட்டி வணங்கினார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி மூதாட்டியின் கையால் புது தாலிக்கயிற்றைப் பெற்று அணிந்துகொண்டார்கள். திருமணம் ஆகாத ஆண்களின் கைகளிலும் பெண்களின் கழுத்துகளிலும் மஞ்கள் நூலைக் கட்டிவிட்டனர். பச்சரிசியுடன், சர்க்கரை, வெல்லம் கலந்து காவிரித் தாய்க்குப் படைத்த பிரசாதத்தைக் குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினர் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார்கள். கடந்த ஆண்டு திருமணமான புது தம்பதியினர் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளைக் கொண்டு வந்து காவிரியில் விட்டு வழிபட்டனர். காவிரித் தாய் சமுத்திர ராஜனுடன் சங்கமிக்கும்போது இந்தத் திருமண மாலைகளும் அதனோடு சேர்ந்து செல்வதால் தம்பதியினர் வாழ்வில் சந்தோஷமாகச் சங்கமிப்பர் என்பது நம்பிக்கை.
துலாக்கட்ட காவிரியின் மகிமை
காவிரியில் புனித நீராடிவிட்டால் நமது ஆயுள் உள்ளவரை சேரும் பாவங்களை உடனே அகன்றுவிடும் என்கிறது தர்ம சாஸ்திரம். ஒரு சமயம் கன்வ மகரிஷியைக் கருமை நிறமுடைய மூன்று பெண்கள் சந்தித்தார்கள். "நாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள். மக்கள் அனைவரும் தங்கள் பாவங்களை எங்களிடம் வந்து கரைத்துவிட்டுச் செல்வதால் கருமை நிறமடைந்துவிட்டோம். இதற்குத் தீர்வு என்ன?" என்று கேட்டனர். "தென் மண்டலத்தில் மாயூரம் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினால் நலம் பெறுவீர்கள்" என்று கன்வ மகரிஷி ஆசி கூறி அனுப்பினார்.
சிவன் பார்வதி
தனது தர்மபத்தினியான பார்வதியைக் காண சிவன் வந்தபோது அவரைச் சுமந்து வந்த ரிஷபம், தன்னால்தான் சிவனால் வேகமாக மாயூரம் வந்தடைய முடிந்தது என ஆணவன் கொண்டது. அதன் ஆணவத்தைத் தன் ஞானக் குறிப்பால் உணர்ந்த சிவன், தன் கேசத்தில் இருந்து ஒரு முடியை எடுத்து அதன் முதுகில் வைத்து அழுத்தினார். பாரம் தாங்க முடியாமல் கீழே விழுந்த ரிஷபம் தன் செயலை உணர்ந்து, சிவனிடம் மண்டியிட்டு விமோசனம் கேட்டது.
துலாக்கட்ட காவிரி
தென்மண்டல பூமியில் மாயூர காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசியில் தினமும் புனித நீராடி சிவலிங்கம் செய்து வில்வதனங்களால் அர்ச்சனை செய்து தன்னைத் துதித்துவந்தால், குருவடிவாக அமர்ந்துள்ள தலத்தில் தவம்புரிந்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்று கூறினார். ரிஷபமும் அவ்வாறே செய்து தன்னுடைய பாவங்களைப் போக்கி அவருடன் சேர்ந்துக்கொண்டது. ரிஷபம் பூஜை செய்த சிவன் ஆலயம் இன்று வள்ளலார் கோயில் என்று புகழ்பெற்று விளங்குகிறது. துலாக்கட்டத்திற்கு ரிஷப தீர்த்தம் என்று தன் பெயரையும் நிலைபடச் செய்துகொண்டது.
மகிமை நிறைந்த மயூராம்
மகிமைகள் நிறைந்திருக்கும் மாயூரம் என்னும் மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள கோயில்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு துலாக்கட்டத்தில் தீர்த்தம் அருள்வார்கள். குறிப்பாக ஸ்ரீ அபயாம்பிகா உடனுறையும் மயூரநாத ஈஸ்வரனும், ஞானாம்பிகா உடனுறையும் ஸ்ரீ வதான்யேஸ்வரரும் பஞ்சமூர்த்திகள் சகிதமாக அஸ்திரதேவருடன் தீர்த்தம் அருள்வார்கள். அந்த நேரத்தில் துலாக்கட்டம் ரிஷப தீர்த்தத்தில் புனித நீராடுதல் வேண்டும்.
மயூரநாதர் வழிபாடு
நீங்கள் எந்த நாளில் நீராடினாலும் முழுப்பலனும் கிடைக்கும். தீர்த்தக் கட்டத்தில் வழிபாடுகள் முடிந்ததும் மயிலாடுதுறை ஈஸ்வரனான மயூரநாதசுவாமியையும் தேவிஸ்ரீ அபாயம்பிகையையும் தரிசித்து, வழிகாட்டும் வள்ளல் பெருமானாகிய வதான்யேஸ்வரரையும் அங்குள்ள ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தியையும் வழிபட வேண்டும். திருஇந்தளூர் என்னும் திவ்யதேசத்தில் ஸ்ரீ பரிமள ரங்கநாதப் பெருமாளையும் வணங்கி வழிபடுவது நன்மை தரும்.