ஆடிப்பெருக்கு வழிபாடு - தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்
ஆடிப்பெருக்கு பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாப்பட்டது. காவிரியிலும், தாமிரபரணியிலும் புனிதநீராடி மக்கள் வழிபட்டனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி,ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் காவிரியில் புனித நீராடி வழிபட்டனர்.
'நீர் இன்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். நீரே உலகின் ஆதாரம். நீருக்கு நன்றி தொிவிக்கும் விழாவே ஆடிப்பெருக்கு. ஆடி 18ம் தேதி, தமிழகம் முழுவதும் ஆற்றங்கரைகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழா ஆடிப்பெருக்கு.
காவிரி ஆறு தமிழகத்தில் கால் பதிக்கும் ஒகேனக்கல்லில் இருந்து வங்க கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று வழிபாடு செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று ஜோதிடமும் சொல்கிறது. நவக்கிரகங்களுள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு சிறப்புகள் உண்டு.
ஜோதிடத்தில் ஆடிப்பெருக்கு
சூரிய பகவான் பாரம்பரியத்தைக் குறிப்பவர். பஞ்சபூதங்களுள் ஒன்றாக நீரை வழிபடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட பாரம்பரியம். அந்த வகையில் காவிரியை வணங்குவதும் ஒரு பாரம்பரிய விழாவே. சந்திரன் என்றாலே குளிர்ச்சி நிரம்பியவர். நதிகளைக் குறிக்கக் கூடிய கிரகம். புதன் கலைகளுக்கு அதிபதி. சித்ரான்ன நிவேதனம் இவருக்கு விசேஷம். ஆடிப்பெருக்கன்று முக்கியமான இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் மனித உயிர்களுக்கும் ஜீவாதாரமான பயிர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இன்றைய தின காவிரி வழிபாட்டால் அனைவருக்கும் மேலே சொன்ன மூன்று கிரகங்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கிறது.
காவிரிக்கு வழிபாடு
காவிரிக்கு ‘தட்சிண கங்கை' என்கிற சிறப்புப் பெயர் உண்டு. அதாவது, தெற்கே பாய்கிற புனிதமான கங்கைதான் இந்தக் காவிரி. இந்த நதியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன. ‘காவிரியில் நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கி விடும்' என்று ராம பிரானுக்கு வசிஷ்டர் சொல்லி இருக்கிறார். இவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட ராமபிரானும் ராவணனைக் கொன்ற பாவம் தீர காவிரியில் நீராடினான் என்றும், அந்த நாளே ஆடிப்பெருக்கு என்கிற தகவலும் ஆன்மிக நூல்களில் காணப்படுகின்றன.
புதுமணத்தம்பதியர்
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் புதுமணதம்பதிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், வயது மூத்த பெண்கள் அனைவரும் அதிகாலையிலேயே முளைப்பாரி, பூஜை பொருட்கள் மற்றும் திருமணத்தின்போது அணிந்த மாலைகள் ஆகியவற்றுடன் ஆற்றுக்கு வந்தனர். காவிரியில் புனித நீராடி புத்தாடைகள் அணிந்து முளைப்பாரி, மாலைகளை ஆற்றில் விட்டு விட்டனர்.
காவிரிக்கு விளக்கு வழிபாடு
படித்துறையில் வாழை இலை போட்டு அதில் பச்சரிசி, மா, கொய்யா, நாவல், போிக்காய், ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்ட 9 வகை பழங்கள், காதோலை, கருகமணி, கரும்பு வைத்து கற்பூர விளக்கேற்றி இயற்கைக்கு நன்றி தெரிவித்தனர். காவிரி அன்னைக்கு தீபாராதனை செய்து, புதுமண தம்பதியர் புது தாலி அணிந்து கொண்டனர். ஆடிப்பெருக்கை கொண்டாட திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது
திருச்சி தொடங்கி பூம்புகார் வரை
திருச்சி மாவட்டம் காட்டுபுத்தூர், தொட்டியம், முசிறி, முக்கொம்பு, ஜீயபுரம், திருப்பராய்த்துறை, கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை, மாயனூர், குளித்தலை, தஞ்சை மாவட்டம் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம் ஆகிய இடங்களிலும் பல்லாயிரகணக்கான மக்கள் ஆடிப்பெருக்கு தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். தஞ்சை மாவட்டம், திருவையாறு புஷ்பமண்டப படித்துறை அதிகாலை 5.30 மணிக்கே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மாவட்டத்தின் பெரும்பகுதி மக்கள் இங்கு வந்திருந்தனர். காவிரியில் நீராடிய பக்தர்கள் அனைவரும் ஐயாறப்பரை தரிசனம் செய்தனர்.
வற்றாத ஜீவ நதி
ஆடிப்பெருக்கை முன்னிட்டு வற்றாத ஜீவநதியான தாமிரபரணிக்கு நன்றி தெரிவிக்கும் ஆரத்தி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீபதட்டுகளை ஆற்றில்விட்டு வழிபட்டனர். நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவ நதியாக மக்களுக்கு பயணிக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்பு ஆரத்தி பூஜை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் படித்துறை மண்டபத்தில் நடந்தது.
ஆஞ்சநேயருக்கு பால்குடம் அபிஷேகம்
நெல்லை மாவட்டம் செங்கோட்டை பிரானூர் பகுதியில் உள்ள ஜெய வீர அபய ஹஸ்த சர்வ சக்தி ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு 1008 பால் குட ஊர்வலம், அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காவிரிக்குச் சென்று ஆடிப்பெருக்கைக் கொண்டாட முடியாதவர்கள் வீடுகளில் நிறைகுடத்தில் நீர் எடுத்து மஞ்சள் கரைத்து சர்க்கரை பொங்கல் செய்து படைத்து வழிபட்டனர். ஆறுகளில் வெள்ளம் பெருகி வர இயற்கைக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.