ஆடிப்பெருக்கு ஆலய தரிசனம்: தம்பதியர்களுக்கு ஒற்றுமை தரும் திருக்குற்றாலநாதர் ஆலயம்
ஆடிப்பெருக்கு நன்னாளில் தம்பதிகள் நீராடி, இத்தல குற்றாலநாதர், பராசக்தி, குழல்வாய் மொழியம்மனை வழிபட, எப்போதும் தம்பதிகள் தங்களுக்குள் இணக்கமாக நடந்து கொள்வர் என்பது நம்பிக்கை.
சென்னை: ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றங்கரையோரம் கொண்டாட்டம் களைகட்டும். அதேபோல அருவி நகரமான குற்றாலத்தில் அருவிகளில் குளித்துவிட்டு திருக்குற்றாலநாதரை தரிசனம் செய்வது பாரம்பரியமாக நிகழ்கிறது. ஆடிப்பெருக்கு நாளில் குற்றால நாதர், குழல்வாய் மொழியம்மனை வழிபட தம்பதியர் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை.
ஆடிப் பட்டம் தேடி விதை என்பது பழமொழி. சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் இருக்கக் கூடிய வெயில் காலம் முடிந்து ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யத்துவங்கும். விளை நிலங்கள் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் ஆறுகளில் பெருகி வரும் இந்த புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக ஆற்றங்கரையோரங்களில் கொண்டாடப்படுவதுதான் ஆடிப்பெருக்கு.
சங்க நூல்களில் ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு சிறப்பானது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது, நல்ல மணமகன் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். இன்றைக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருக்குற்றாலநாதர் கோவில்
இதேபோல குற்றால அருவிகளில் பெருகி வரும் நீரை வழிபட்டு குற்றாலநாதரை வணங்குவது சிறப்பானது. குற்றாலநாதர் ஆலயம் அமைந்த விதமே சிறப்பானது. கயிலாயத்தில் சிவன் பார்வதி திருமணத்தை காண எல்லோரும் கூடியதால் வடதிசை தாழ்ந்து தெற்கு உயர்ந்து. உடனே ஈசன், குறுமுனிவர் அகத்தியரை அழைத்து பூமியை சமமாக்க தென்திசை செல்லும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு ஒப்புக்கொண்ட அகத்தியர், சிவபெருமானிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
திருமண கோலத்தில் சிவன்
ஐயனே! நான் இப்போதே தென்திசை நோக்கி புறப்படுகிறேன். ஆனால் உங்கள் திருமணக் காட்சியை தென் திசையில் எனக்கு காட்டியருள வேண்டும்' என்றார். தன்னை வணங்கி வேண்டிய அகத்தியரிடம், ‘தென்திசையில் உள்ள பொதிகை மலைக்கு செல். அங்குள்ள திரிகூட மலையில், எங்களின் திருமணக் கோலத்தை உனக்கு காட்டியருள்வோம்' என்று ஈசன் வாக்களித்தார். அகத்தியர் தென்திசையை வந்தடைந்தார். பூமி சமநிலை அடைந்தது. ஈசன் கூறியபடி திரிகூட மலைக்கு புறப்பட்டு வந்தார் அகத்தியர். திரிகூட மலை என்பது ‘திருக்குற்றாலம்' ஆகும்.
தரணி பீடம்
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று சிகரங்கள் குற்றால மலையில் உள்ளன. இவ்வாறு மும்மூர்த்திச் சிகரங்கள் உள்ளதால் குற்றால மலையை ‘திரிகூட மலை' என்று அழைக்கிறார்கள். ஊழிக் காலங்களில் மீண்டும் உலகைப் படைத்துக் காத்து ஈசன் நிலையாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம் இந்த குற்றாலம் ஆகும். ‘கு' என்பது பிறவிப்பிணி. ‘தாலம்' என்பது தீர்ப்பது. மனிதனின் பிறவிப் பிணியைத் தீர்ப்பவர் குற்றாலநாதர். இங்குள்ள பராசக்தியே உலகமெல்லாம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தாள் என்று சொல்லப்படுகிறது. எனவே இங்குள்ள பீடத்தை ‘தரணிபீடம்' என்கிறார்கள்.
பலா ரூபத்தில் சிவன்
இந்த ஆலயத்தில் தல மரம் குறும்பலா. இந்த தலத்தில் குறும்பலாவாக சிவன் வீற்றிருப்பதாக ஐதீகம். இங்கு குறும்பலா நாதருக்கும் தனிச்சன்னிதி உள்ளது. குறும்பலா பதிகம் பாடியுள்ளார் சம்பந்தர். இந்த பலா மரத்தின் கிளைகள், கனிகள், சுளைகள், வித்துக்கள் என யாவும் சிவலிங்க வடிவமாகவே உள்ளது. ‘சுளையெலாஞ் சிவலிங்கம்' என்கிறது குற்றாலக் குறவஞ்சி.
திருமண கோலத்தில் இறைவன்
இந்த ஆலயத்தின் நான்கு வாசல்களும் நான்கு வேதங்களாக விளங்குகின்றன. சிறிய அழகிய கோபுரம். குற்றாலநாதர் நடுவே கோவில் கொண்டு விளங்க, அவருக்கு வலதுபுறம் குழல்வாய் மொழியம்மையும், இடதுபுறம் பராசக்தியும் கோவில் கொண்டுள்ளனர். ஆலயம் சங்கு வடிவிலானது. அம்பாளும், சிவனும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று குற்றாலநாதருக்கும், குழல்வாய் மொழியம்மைக்கும் அகத்தியர் சன்னிதி அருகில் திருமணம் நடைபெறும். ஈசனும், அம்பாளும் அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்கள்.
வாத நோய் தீர்க்கும் தைலம்
அகத்தியர் தலையைத் தொட்டு அழுத்தியதால் ஈசனுக்கு இங்கு தினமும் காலையில் தைல அபிஷேகம் நடைபெறுகிறது. பசும் பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 வகையான மூலிகைகளை 90 நாட்கள் வேகவைத்து, அந்தச் சாற்றில் நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கிறார்கள். இந்த அபிஷேக தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. வாதநோய், வாத வலி, உடல் வலி, முதுகு வலி, தீராத தலைவலி, வயிற்று வலி, கண் வலி உள்ளவர்கள், இதனை தடவி வந்தால் சுகம் பெறலாம்.
நீரிழிவு தீர்க்கும் கசாயம்
தினமும் அர்த்த ஜாம பூஜையில் குற்றால நாதருக்கு ‘குடுனி நைவேத்தியம்' செய்யப்படுகிறது. அதாவது சுக்கு, மிளகு, கடுக்காய் மற்றும் சில மூலிகைகளைக் கொண்டு கசாயம் தயாரித்து நைவேத்தியம் செய்கிறார்கள். அர்த்த ஜாம பூஜைக்கு பிறகு வழங்கப்படும் இந்த கசாயத்தை வாங்கிக் குடித்தால் நீரிழிவு, புற்று நோய், அல்சர், சளி, இருமல், வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அருவியில் நீராடி தரிசனம்
இங்கு உள்ள அருவிகளில் ஆடிப்பெருக்கு நன்னாளில் தம்பதிகள் நீராடி, இத்தல குற்றாலநாதர், பராசக்தி, குழல்வாய் மொழியம்மை ஆகியோரை வழிபட, எப்போதும் தம்பதிகள் தங்களுக்குள் இணக்கமாக நடந்து கொள்வர் என்பது நம்பிக்கை. குற்றாலநாதர் கோவிலுக்கு அருகில் நடராஜர் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபை இருக்கிறது. உமையம்மை மட்டும் தரிசிக்க சிவன் ஆடிய திரிபுரதாண்டவம் இங்குதான் நிகழ்ந்தது அத்திருக்கூத்து இது‘மகாபரம ரகசியம்' எனப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று ஆடிப்பெருக்கு நாளில் திருக்குற்றாலநாதரை தரிசனம் செய்வோம்.