ஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது...
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை:ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் "ஆடிப்பூரம்" என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம்.மேலும் இன்று அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் வளையகாப்பு திருவிழா நடைபெறுகிறது.
திருவில்லிப்புத்தூரில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை நோக்கிய ஆடி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்தபோது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக் கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள்.
காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், ஆண்டாளின் அண்ணனான ராமானுஜரின் அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரிலும் ஆடி உற்சவம் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து வைஷ்ணவ தலங்களில் மட்டுமல்லாது மாதவனின் தங்கையாம் அகிலாண்டேஸ்வரி குடிகொண்டுள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும்.
நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள்.
"வளைகாப்பு" என்ற சடங்கு கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். அனேகமாக கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது.
பங்குனி உத்திரத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து ஆடி பூரத்தில் அனைத்து அம்பாள்களுக்கும் வளையகாப்பு செய்வது மரபு.
ஜோதிடத்தில் பூரம் நக்ஷத்திரம்:
சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற பூரம் நட்சத்திரம் வானத்தில் ஒரு கட்டில் கால் போல் காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் இனிமையாக பேசுவார்கள். எல்லோராலும் பாராட்டப்பெறுவார்கள். எல்லோரையும் நேசிப்பார்கள் பொதுவாக சுக்கிரன் இல்லற வாழ்க்கையை குறிக்கும் கிரகமாகும். அதனால் தான் அவரை களத்திரகாரகன் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும்,சுக்கிரனே ஆடம்பர வாழ்க்கை, ஆபரணச் சேர்க்கை, பங்களா போன்ற பெரிய வீட்டில் வாழும் வாழ்க்கை, வண்டி, வாகன யோகம் போன்றவற்றிற்கும் அவரே காரகனாகிறார்.
ஒருவருக்கு காதல் கை கூடவேண்டும் என்றால் சுக்கிரனின் அருள் வேண்டும். அதிலும் காதலித்தவரையே கைப்பற்ற வேண்டும் என்றால் சுக்கிரனின் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின் சுரோணிதத்திற்கும் இவரே காரண கர்த்தா.
தூக்கத்தை தீர்மானிக்கும் முக்கிய கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்க்கு வரும். நல்ல சுவையான உணவு (சுக்கிரன்), குளுமையான சூழ்நிலை (சுக்கிரன்) இனிமையான இசை (சுக்கிரன்) வசதியான படுக்கைகள் மற்றும் நறுமணம் மிக்க மலர்கள் மற்றும் சுவை நிறைந்த பழங்கள் (சுக்கிரன்) கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி (சுக்கிரன்) இவையெல்லாம் நினைத்து பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும். சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற பூரநக்ஷத்திரம் கட்டில் கால் வடிவில் இருப்பதில் வியப்பென்ன இருக்கமுடியும்?
இவை மட்டுமல்லாது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற சுக்கிரனின் அருள் வேண்டும். சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பரணி,பூரம் பூராடம் ஆகிய நக்ஷத்திரங்களின் அதிதேவதை மஹாலக்ஷமி எனவும் பூர நக்ஷத்திர வணங்க வேண்டிய தெய்வம் மஹாலக்ஷமியின் அவதாரமான ஆண்டாள் நக்ஷத்திர சிந்தாமணி எனும் பழம்பெரும் ஜோதிட நூல் கூறுகிறது.
ஆடிபூர நன்நாளில் ஆண்டாளை வணங்கி விரும்பியவரையே கணவனாகவோ அல்லது மனைவியாகவோ அடைந்து அனைத்து வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வோமாக!