ஆடிப்பூரம் விரதம் இருந்தால் கெட்டிமேளம் சத்தம் கேட்கும் - பிள்ளை வரம் கிடைக்கும்
மதுரை: ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூர நாளில்தான் அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார். ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் வளைகாப்பிற்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள். ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்று வழிபடுவதன் மூலம் திருமணமாக பெண்களுக்கு கல்யாண வரம் கிடைக்கும். எம் பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.
சுக்கிரனின் அருள்
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசுவார்கள். அனைவரையும் நேசிப்பார்கள். அனைவரையும் நேசிக்க வைப்பார்கள். பூரம் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். சுக்கிரனின் தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். எனவேதான் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை நேசித்து அவரையே மணந்தாள். காதல் கைகூடவும், மனதிற்கு பிடித்த நபரை கை பிடிக்கவும் சுக்கிரபகவானின் அருள் வேண்டும். சுக்கிரன் அருள் இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும், தாம்பத்ய ஒற்றுமைக்கும் காரணம் சுக்கிரனே. எனவேதான் பூரம் நட்சத்திரத்தில் விரதம் இருந்தால் திருமண வரம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர்.
ஆடிப்பூரத்தில் அவதரித்த அம்மன்
உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் நாளில் சிவ ஆலயங்களில் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவார்கள். தாய்மை பேறுக்காக தவமிருக்கும் பெண்கள் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவதற்காக வளையல்களை வாங்கிக் கொடுத்து தங்களுக்கும் விரைவில் வளைகாப்பு நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.
அம்மனுக்கு வளைகாப்பு
உலகத்தை படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள். ஆனால் அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பாகும். எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது.
வளையல் பிரசாதம்
மயிலாப்பூர் கற்பகவல்லி அம்மன், திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, ஆகிய தலங்களில் உள்ள அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இரவில் பல்லாயிரக்கணக்கான வளையல்களை கோர்த்து வளைகாப்பு நடத்துகின்றனர். வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
ஆண்டாள் தரிசனம்
ஆடிப்பூர நாளில்தான் பூமாதேவி ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார். அவரது அவதார தினம் பத்து நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பெருமாளையே கணவனாக நினைத்து மாலையை சூடிக்கொடுத்த சுடர்கொடியாளை ஆடிப்பூர நாளில் தரிசனம் செய்தால் திருமண வரம் கிடைக்கும் ஆனந்தமான வாழ்வு அமையும். இந்த நன்னாளில் ஆண்டாளையும் அம்மனையும் தரிசனம் செய்வோம்.
பிரிந்த தம்பதியர் ஒற்றுமை
சஷ்டாஷ்டக தோஷம் இருக்கும் தம்பதியரும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த தம்பதியர்கள், தொழில் போட்டியால் பிரிந்த கூட்டாளிகள் ஒற்றுமை ஏற்பட ஆடிப்பூர நாளில் ஆண்டாளை வணங்க தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். பிரிந்தவர்கள் கூடுவார்கள். பகைவர்களும் நண்பர்கள் ஆவார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆடிப்பூரம் தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த நன்னாளில் ஆண்டாளையும் அம்மனையும் தரிசனம் செய்வோம்.