ஆடிப்பூரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொடியேற்றம் - ஆகஸ்ட் 4ல் தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பத்து நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஆகஸ்
ஸ்ரீவில்லிபுத்துதூர்: ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் போது பூர நட்சத்திரம் தினத்தில் துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் தெய்வ குழந்தை கண்டெடுக்கப்பட்டார். ஆடியில் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதார தினத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு ஆடிப்பூரம் விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. ஆடிப்பூர தினத்தன்று தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு ஆடிப்பூர தேரோட்டம் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு சனிக்கிழமையன்று காலை அலங்கரிக்கப்பட்ட கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க 4 ரதவீதிகள், மாட வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு காலை 8.30 மணியளவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதன்பின் ஆண்டாள், ரங்க மன்னார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வருகின்றனர்.
ஆடிப்பூர தேரோட்டம் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவில்லிபுத்தூரில் குவிந்துள்ளனர். இதனால் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன.
மகாவிஷ்ணுவின் 108 திவ்விய தேசங்களில் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் தலமும் ஒன்று! கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று சொல்வார்கள். நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தாம் சூடிப்பார்த்து இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள் ஆண்டாள். பிறகு மாலையைக் கழட்டி, பூஜைக்கு கொடுத்து விடுவாள். தந்தை பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு சாத்துவார்
ஒருநாள் இறைவனுக்கு சார்த்தவேண்டிய மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களை சூட்டினார். உடனே இறைவன், கோதை சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு என்று கேட்டு வாங்கி அணித்தார். இறைவனையை விரும்பி மணந்து அவரோடு ஐக்கியமானார் ஆண்டாள் நாச்சியார். வைணவர்களின் முக்கிய தலமாக இந்தக் கோயில் இன்றைக்கும் போற்றப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்!
திருமணமாகாத பெண்கள் துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி, பின் அதனை வாங்கித் தம் கழுத்தில் அணிந்து கொண்டு, அருகிலிருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வந்து, பிறகு கிணற்றினுள்ளே பார்த்துவிட்டு, மீண்டும் ஆண்டாளிடம் வந்து வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கப்படுகின்றன. இதனால், தடைபட்ட திருமணங்கள் உடனே நடக்கின்றன.
ஆடிபூரத்திருவிழாவின் ஏழாம் நாளன்று ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியது.