ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் விழா கொடியேற்றம் - 13ல் தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றான திருஆடிப்பூர விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த போது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி திதி, பூர நட்சத்திரம் தினத்தில் துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட தெய்வ குழந்தை ஆண்டாள்.
ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இறைவன் மீது காதல் கொண்டு திருவடி சரணடைந்தவர் ஆண்டாள் நாச்சியார். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு ஆடிப்பூரம் விழா கொடியேற்றத்துடன் ஞாயிறன்று தொடங்கியது.
ஆண்டாள் அவதார தினம்
5ஆம் திருநாளான 9ஆம் தேதி காலை மங்களா சாசனம் வைபமும், இரவு 10 மணிக்கு 5 கருட சேவையும் நடக்கிறது. 11ஆம் தேதி இரவு 7 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாள் திருமடியில், ரங்கமன்னார் சயனத்திருக்கோல வைபவத்தில் காட்சி அளிக்கிறார்.
8ஆம் திருநாளான 12ஆம் தேதி மதுரை அழகர்கோவில், ரங்க அரங்கநாத கோவில்களில் இருந்து பிரசாதமாக கொண்டு வரப்படும் பரிவட்டங்கள், ஆண்டாளுக்கு சாற்றப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம்
13ஆம் தேதியன்று காலை 7.20 மணிக்கு திருவாடிப்பூரத் தேரோட்டம் நடக்கிறது. 16ஆம் தேதி ஆண்டாள்- ரெங்க மன்னார் திவ்ய தம்பதிகளுக்கு புஷ்பயாகத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
அண்ணாமலையார் கோவில் ஆடிப்பூரம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், 10 நாட்கள் நடைபெறும் ஆடிபூரம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் இன்று அதிகாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதன் பின்னர் உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன்பாக உள்ள தங்கக் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க கொடியேற்றப்பட்டது. முன்னதாக கொடிமரம் அருகே எழுந்தருளிய உண்ணாமுலை அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
நீலிவனேஸ்வரர் கோவில்
மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் நீலிவனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பாடப்பெற்ற 61-வது திருத்தலமாகும். சிவபெருமான் எமதர்மராஜனுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தையும், மீண்டும் வழங்கியது இந்த தலமாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13ஆம் தேதி நடக்கிறது.