ஆடி பவுர்ணமி கிரிவலம் வர நல்ல நேரம் - புதன்கிழமை கிரிவலத்திற்கு என்ன பலன்
திருவண்ணாமலை: இன்றைய தினம் ஆடி மாதம் பவுர்ணமி அற்புதமான நாள். புதன் கிழமையும் வியாழக்கிழமை இணைந்த நாட்களில் பவுர்ணமி வருவது கூடுதல் சிறப்பு. இந்த நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வர நல்ல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.35 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை வியாழக்கிழமை மாலை 6.16 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர்.
கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு தானம் செய்வது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், தானம் கொடுப்பதன் மூலம் நமது பாவங்கள் அகலும். கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர்.
தோஷம் நீக்கும் கிரிவலம்
கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும்.
வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் .
இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வருடம் முழுவதும் கிரிவலம்
திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் வலம் வருவதாகக் கூறப்படுகிறது. பவுர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டுமா? வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின் நினைவு நாள் என்று எந்நாளும் சிவபெருமானை நினைத்து வலம் வரலாம்.
எந்த நாளில் என்ன நன்மை
திங்கட்கிழமை கிரிவலம் வர இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வர கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வர கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வர வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வர பிறவிப்பிணி அகலும். ஞாயிறு கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும்.
கிரிவலத்தில் சிவநாமம்
கிரிவலப் பாதையான 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும் . நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும். அப்பொழுதுதான் கிரிவலம் வருவதற்கான பலனும் புண்ணியமும் சேரும்.